செய்திகள்
இந்தியா-பாகிஸ்தான் இடையேயான பஸ் போக்குவரத்து நிறுத்தம்
பாகிஸ்தானின் லாகூரில் இருந்து புதுடெல்லிக்கு இயக்கப்படும் பஸ் போக்குவரத்து சேவையை நிறுத்துவதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.
இஸ்லாமாபாத்:
காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்துசெய்து இந்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுத்தது. இந்த முடிவுக்கு பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்தது. மேலும், இந்தியாவுடனான ராஜாங்க ரீதியிலான உறவு மற்றும் வர்த்தகத்தையும் துண்டித்தது.
மேலும், இந்தியா-பாகிஸ்தான் இடையே இயங்கும் சம்ஜவுதா மற்றும் தார் எக்ஸ்பிரஸ் ரெயில்களின் சேவையை நிறுத்துவதாக பாகிஸ்தான் அறிவித்தது. இந்திய திரைப்படங்கள் எதுவும் இனி திரையிடப்படாது எனவும் தெரிவித்தது. இதனால் இரு நாடுகள் இடையே மிகவும் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.
இந்நிலையில், பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கு இயக்கப்படும் பஸ் போக்குவரத்தை நிறுத்துவதாக அந்நாடு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக பாகிஸ்தான் மத்திய தகவல் தொடர்பு மந்திரி முராத் சயீத் கூறுகையில், பாகிஸ்தானின் லாகூரில் இருந்து இந்தியாவின் புதுடெல்லிக்கு வாரம் மூன்று முறை (செவ்வாய், வியாழன் மற்றும் சனி நாட்கள்) இயக்கப்படும் பஸ் போக்குவரத்து சேவை நிறுத்தப்படுகிறது என தெரிவித்தார்.