செய்திகள்

அதிகமான ஏவுகணை சோதனைகளை நடத்துங்கள் - ராணுவத்தினருக்கு வடகொரிய அதிபர் அட்வைஸ்

Published On 2017-08-30 06:11 GMT   |   Update On 2017-08-30 06:11 GMT
பசுபிக் பெருங்கடல் பிராந்தியத்தில் இன்னும் அதிகமான ஏவுகணை சோதனைகளை நடத்துமாறு வடகொரிய ராணுவத்தை அதிபர் கிம் ஜாங் உன் கேட்டுக்கொண்டதாக அந்நாட்டு அரசு ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.
சியோல்:

வடகொரியா அணு ஆயுதம் மற்றும் ஏவுகணைகளை வீசி பரிசோதித்து வருகிறது. இதற்கு அமெரிக்கா, தென் கொரியா, ஐப்பான் உள்ளிட்ட நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. பொருளாதார தடையும் விதித்தன. அதை கண்டு கொள்ளாத வடகொரியா தொடர்ந்து கண்டம் விட்டு, கண்டம் பாயும் ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் அமெரிக்காவிற்கும், வடகொரியாவிற்கும் போர் ஏற்படும் நிலை ஏற்பட்டது.

இதனையடுத்து, இரு நாட்களுக்கு முன்னர் ஹூவாசோங் -12 என்ற பெயரிடப்பட்டுள்ள மத்தியதூர ஏவுகணையை வடகொரியா செலுத்தியதாகவும், அதனை அதிபர் கிம் ஜாங்-உன் கண்காணித்ததாகவும் அந்நாட்டின் அரசின் செய்தி நிறுவனம் தெரிவித்தது.

மேலும், அந்த ஏவுகணை ஹோக்கைடோவின் ஓஷிமா தீபகற்பம், எரிமோ முனை ஆகிய இடங்களை கடந்து தடம் மாறாமல் வடக்கு பசிபிக்கின் இலக்கை துல்லியமாக தாக்கியது எனவும் கூறியுள்ளது.

ஜப்பான் பகுதியின் மேலாக இந்த ஏவுகணை பறந்துள்ளதால் அந்நாட்டின் பிரதமர் அபே உள்ளிட்டோர் வடகொரியாவின் செயலுக்கு கண்டனம் தெரிவித்ததோடு, ஐ.நா சபை இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டது.

இந்நிலையில், ஜப்பான், தென்கொரியா, ஐ.நா, அமெரிக்கா என யாருடைய குரலையும் கண்டு கொள்ளாமல், பசுபிக் பிராந்தியத்தில் மேலும், ஏவுகணை சோதனைகளை நடத்த வேண்டும் என வடகொரிய ராணுவ விஞ்ஙானிகளிடம் அதிபர் கிம் ஜாங் உன் கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.

அமெரிக்காவுக்கு சொந்தமான குவாம் தீவை தாக்குதல் நடத்த முன்னேற்பாடாக பசுபிக் பெருங்டலில் அதிகமான ஏவுகனைகள் பாயவேண்டும் என அதிபர் கேட்டுக்கொண்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.
Tags:    

Similar News