செய்திகள்
அமர்நாத் யாத்ரீகர்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு அமெரிக்கா கண்டனம்
காஷ்மீர் மாநிலத்தில் அமர்நாத் பனி லிங்கத்தை தரிசிக்கச் சென்ற யாத்ரீகர்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு வெள்ளை மாளிகை கண்டனம் தெரிவித்துள்ளது.
வாஷிங்டன்:
காஷ்மீர் மாநிலத்தில் உள்ள அனந்த்நாக் மாவட்டத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் அமர்நாத் யாத்திரீகர்கள் சென்ற வாகனத்தின் மீது தீவிரவாதிகள் நடத்திய கொலைவெறி தாக்குதலில் 7 பேர் உயிரிழந்தனர். 19 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த தாக்குதலுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் மோடி மற்றும் பல்வேறு மாநிலங்களின் முதல் மந்திரிகள், அரசியல் கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், அமெரிக்க அதிபரின் இல்லமான வெள்ளை மாளிகை இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, “ பாதிக்கப்பட்டவர்களுக்கும் இந்தியர்களுக்கும் எங்களது அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம். மத சுதந்திரம் மீது நடத்தப்படும் தாக்குதல் அடிப்படை உரிமைகள் மீதான தாக்குதலுக்கு நிகரானது. உலகின் எந்தப்பகுதியிலும் தீவிரவாதம் தலை தூக்கினால் இந்தியாவும், அமெரிக்காவும் இணைந்து போராடும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, இந்த தாக்குதலுக்கு வங்கதேச பிரதமர், ஆப்கானிஸ்தான் அதிபர் மற்றும் ஸ்ரீலங்கா ஆகிய நாடுகள் கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.