தமிழ்நாடு

இணையவழி சூதாட்டத்தை விளம்பரப்படுத்துபவர்களுக்கு 1 ஆண்டு வரை, 5 லட்சம் அபராதம்- தமிழ்நாடு அரசு

Published On 2024-05-02 13:23 GMT   |   Update On 2024-05-02 13:23 GMT
  • இணையவழி சூதாட்டங்கள் அல்லது வாய்ப்பு அடிப்படையிலான இணையவழி விளையாட்டுகள் குறித்த விளம்பரங்கள் சட்டப்படி தடைசெய்யப்பட்டுள்ளது
  • தடை செய்யப்பட்ட இணையவழி சூதாட்டங்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்

தமிழ்நாடு இணையவழி விளையாட்டு ஆணையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில்,

"தமிழ்நாடு இணையவழி சூதாட்டத் தடை மற்றும் இணையவழி விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தும் சட்டம் 2022-இன்படி, இணையவழி சூதாட்டம் மற்றும் இணையவழி வாய்ப்பு விளையாட்டு, பந்தயம் போன்றவற்றை விளையாடுவதைத் தடை செய்துள்ளது.

அவ்வாறு தடை செய்யப்பட்ட இணையவழி சூதாட்டங்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு குற்றம் புரிபவர்களுக்கு 3 மாதம் வரை சிறைத்தண்டனையோ அல்லது ரூ.5,000/- வரை அபராதமோ அல்லது இரண்டும் விதிக்கப்படும். இணையவழி சூதாட்டம் (Online Gambling) அல்லது இணையவழி வாய்ப்பு விளையாட்டுகள் (Game of Chance) பரிவத்தனைகளில் ஈடுபடும் நிதி நிறுவனங்களை/கட்டண நுழைவாயில்களை இச்சட்டம் தடைசெய்கிறது.

இணையவழி சூதாட்டங்கள் அல்லது வாய்ப்பு அடிப்படையிலான இணையவழி விளையாட்டுகள் குறித்த விளம்பரங்கள் சட்டப்படி தடைசெய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பணம் அல்லது பிற வழிகளில் இணையவழி சூதாட்டத்தில் ஈடுபடுவதை ஊக்குவிக்கும் அல்லது தூண்டும் வகையில் எந்த ஒரு நபரும் மின்னணு தொடர்பு சாதனங்கள் உட்பட எந்தவொரு ஊடகத்திலும் விளம்பரமோ அறிவிப்போ செய்ய கூடாது என்று இச்சட்டம் குறிப்பாகக் கூறுகிறது.

அத்தகைய விளம்பரத்தில் ஈடுபடும் நபர்களுக்கு/நிறுவனத்திற்கு, 1 ஆண்டு வரை சிறைத் தண்டனையோ அல்லது 5 லட்சம் வரை அபராதமோ அல்லது இரண்டும் சேர்ந்தோ விதிக்கப்படும் என்றும் இச்சட்டம் குறிப்பிடுகிறது. அதே குற்றத்தை மீண்டும் செய்தால், சட்டம் 1 முதல் 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை மற்றும் ரூ.5 முதல் 10 லட்சம் வரை அபராதம் விதிக்கிறது.

நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 2019 மற்றும் பிற சட்டங்களின்படி, தடைசெய்யப்பட்ட செயல்பாடுகள்/சேவைகள் மீதான விளம்பரங்களுக்குத் தடை இருப்பதாக மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (CCPA) அறிவுறுத்தியுள்ளது. அத்தகையான தடைசெய்யப்பட்ட விளம்பரங்களை ஒளிபரப்பும் நபர்கள்/ பிரபலங்கள், விளம்பர நிறுவனங்கள் / விளம்பர தயாரிப்பாளர்கள் / சமூக ஊடகத் தளங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நுகர்வோர் ஆணையம் அறிவித்துள்ளது.

எனவே, இம்மாநிலத்தில் இணையவழி சூதாட்டம் மற்றும் இணையவழி வாய்ப்பு விளையாட்டு, பந்தயம் போன்றவற்றை விளம்பர பதாகைகள், சுவரொட்டிகள், பேனர்கள் ஆட்டோரிக்க்ஷா விளம்பரங்கள் போன்ற வெளிப்புற ஊடகங்கள் மூலமாகவும், அவர்களின் இணையதளம்/ இணையதள செயலி பயன்பாடுகளை விளம்பரப்படுத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்படுகிறது.

இணையவழி சூதாட்டம் / பந்தய நடவடிக்கைகள் பற்றிய தகவல்களைப் பகிர விரும்புவோர் அல்லது இணையவழி விளையாட்டுகளை ஒழுங்குபடுத்துவது குறித்த ஆலோசனைகளை வழங்க விரும்புவோர் அல்லது இது சம்பந்தமாக வேறு ஏதேனும் குறைகள் இருப்பின் "www.tnonlinegamingauthority.com" இணையதளத்தைத் தொடர்பு கொள்ளவும். மேலும் தமிழ்நாடு இணையவழி விளையாட்டு ஆணையத்தின் tnega@tn.gov.in என்ற மின்னஞ்சல் மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News