செய்திகள்
ஆரல்வாய்மொழி அருகே லாரிகள் நேருக்கு நேர் மோதல்- டிரைவர் காயம்
ஆரல்வாய்மொழி அருகே லாரிகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் டிரைவர் காயம் அடைந்தார். இன்னொரு டிரைவர் காயமின்றி தப்பினார்.
ஆரல்வாய்மொழி:
நெல்லை மாவட்டம் தாழையூத்து அருகே ஆளவந்தான் குளம் தெற்கு காலனியைச் சேர்ந்தவர் பரமேஸ்வரன் (வயது 46). இவர் லாரியில் குளிர்பானங்களை ஏற்றிக்கொண்டு நேற்று காலை நெல்லையில் இருந்து நாகர்கோவில் நோக்கி லாரியை ஓட்டி வந்தார்.
இதேபோல் நாகர்கோவிலில் இருந்து நெல்லை நோக்கி லாரி ஒன்று சென்றது. இதை அருமநல்லூர் அருகே உச்சம்பாறையை சேர்ந்த சதீஷ் (29) என்பவர் ஓட்டி சென்றார்.
ஆரல்வாய்மொழி அருகே சுப்பிரமணியபுரம் பகுதியில் வந்தபோது, 2 லாரிகளும் நேருக்குநேர் மோதிக்கொண்டன. இதில் குளிர்பானம் ஏற்றிய லாரியின் முன்பகுதி பலத்த சேதம் அடைந்தது. டிரைவர் பரமேஸ்வரன் படுகாயமடைந்தார்.
அக்கம் பக்கத்தினர் உடனே அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவல் அறிந்ததும் நெடுஞ்சாலை ரோந்து போலீசார் மற்றும் ஆரல்வாய்மொழி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் சிக்கிய வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். இந்த விபத்தில் இன்னொரு டிரைவர் காயமின்றி தப்பினார்.
விபத்து குறித்து ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.