செய்திகள்
கைது

பல்லடத்தில் தொழிலாளியை கொலை செய்த நண்பர் கைது

Published On 2020-06-23 12:18 GMT   |   Update On 2020-06-23 12:18 GMT
பல்லடத்தில் தொழிலாளியை கொலை செய்த நண்பரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பல்லடம்:

திருவாரூர் மாவட்டம் குடவாசலை சேர்ந்த கலிய பெருமாள் என்பவரது மகன் ராஜ்கண்ணு (வயது 36). இவர் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கரடிவாவியில் உள்ள திருமண மண்டபத்தில் உள்ள அறையில் தங்கி, பருவாயில் உள்ள பனியன் நிறுவனத்தில் தையல் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை திருமண மண்டபத்தின் முன்பு ராஜ் கண்ணு கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.

இந்த கொலை தொடர்பாக பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அதே மண்டபத்தில் தங்கி இருந்த திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த முருகன் (52) என்பவர் ராஜ் கண்ணுவை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து முருகனை போலீசார் நேற்று கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் போலீசாரிடம் முருகன் கொடுத்துள்ள வாக்குமூலம் வருமாறு:-

எனது சொந்த ஊர் சின்னாளப்பட்டி. நானும், ராஜ் கண்ணுவும் திருமண்டபத்தில் தங்கி பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்தோம். நாங்கள் இருவரும் மண்டபத்தில் உள்ள ஒரே அறையில் தங்கியதால் நண்பர்களானோம்.

இந்த நிலையில் சம்பவத்தன்று நாங்கள் இருவரும் சேர்ந்து மது குடித்தோம். அப்போது ஏற்பட்ட தகராறில் ராஜ்கண்ணு என்னை தாக்கினார். அதன்பின்னர் மறுநாளும் என்னிடம் தகராறு செய்தார். அப்போது அவரை நான் தரக்குறைவாக திட்டினேன். இதனால் என்னை செருப்பால் அடித்தார். இதனால் அவமானம் தாங்க முடியாமல், கோபத்தில் அவரை தள்ளி விட்டேன். அவருடைய தலை சுவரில் மோதி, உடைந்தது. இதனால் பயந்துபோன நான் அங்கிருந்து ஓடிவிட்டேன். அதன்பின்னர் அவர் இறந்துவிட்டது தெரியவந்தது. இந்த நிலையில் வெளியூர் தப்பி செல்ல முயன்றபோது போலீசார் என்னை கைது செய்து விட்டனர்.

இவ்வாறு அவர் வாக்குமூலம் கொடுத்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
Tags:    

Similar News