உள்ளாட்சி தேர்தலில் அதிமுக-பாஜக அதிக இடங்களை பிடிக்கும்: வானதி சீனிவாசன் பேட்டி
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள குப்புசாமிநாயுடுபுரத்தில் பாரதிய ஜனதா கட்சி மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழக ஊரக உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும்
மத்திய, மாநில அரசுகள் அறிவிக்கின்ற நலத்திட்டங்கள் அனைத்து மக்களுக்கும் சென்று சேர அ.தி.மு.க., பா.ஜ.க. உள்ளிட்ட கூட்டணி வெற்றி பெற்றால் மட்டுமே முடியும். பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான்,வங்க தேசத்தில் சிறுபான்மை மக்களாக வாழும் இந்திய வம்சாவழி இந்துக்களுக்கு மட்டுமே குடியுரிமை வழங்க திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதே சமயம் இந்திய இஸ்லாமியர்களுக்கு இச்சட்டம் எதிரானது அல்ல. அதனை உணராமல் மு.க.ஸ்டாலின் இச்சட்டம் இஸ்லாமியர்களுக்கு எதிரானது போல் சித்தரிப்பு செய்து போராட்டம் நடத்துகின்றார்.
கருணாநிதி காலத்தில் இந்தி திணிப்பு என்று போராட்டம் நடத்தியதால் தான் இந்தியை நாம் கற்க முடியவில்லை. ஒருவர் தனது தாய் மொழியுடன் பல மொழிகளில் பேசும் திறன், எழுதும் திறன் வளர்த்துக் கொள்வதில் தவறு ஏதும் இல்லை. உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி இடபங்கீடு செய்வதில் சில இடங்களில் மன வருத்தம் இருந்த போதிலும் தற்போது அதனை கடந்து வெற்றி என்னும் இலக்கை நோக்கி தீவிரமாக பணியாற்றி வருகிறோம்.
இவ்வாறு வானதி சீனிவாசன் கூறினார்.