இந்தியா

பாஜக கூட்டணி கட்சி வேட்பாளரின் ஆபாச வீடியோ விவகாரம்- நடிகை பூனம் கவுர் வீடியோ வெளியிட்டு கண்டனம்

Published On 2024-04-29 11:26 GMT   |   Update On 2024-04-29 11:26 GMT
  • தேவகவுடா பேரன் பிரஜ்வால் ரேவண்ணாவின் ஆபாச வீடியோக்கள் வெளியாகி கர்நாடகாவை அதிர வைத்துள்ளது
  • ஆபாச வீடியோ வழக்கு தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு அமைக்க கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது

கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வால் ரேவண்ணா ஹாசன் தொகுதி எம்.பியாக உள்ளார். அவர் கர்நாடகாவில் முதல் கட்டமாக நடந்த பாராளுமன்ற தேர்தலில் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டார்.

இந்த பாராளுமன்ற தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தளம் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. .

இந்நிலையில் தேவகவுடா பேரன் பிரஜ்வால் ரேவண்ணாவின் ஆபாச வீடியோக்கள் வெளியாகி கர்நாடகாவை அதிர வைத்துள்ளது. பெண்களுடன் பிரஜ்வால் ரேவண்ணா உல்லாசமாக இருப்பது போன்ற ஆபாச வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவிக் கொண்டிருக்கிறது.

ஹாசன் தொகுதிக்கு வாக்குப்பதிவு நடைபெற்ற ஏப்ரல் 26-ந் தேதி முதல் நாளில் இருந்தே இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

இப்படிப்பட்ட நபருக்கா நீங்கள் ஓட்டுப் போடப் போகிறீர்கள்? என்ற வாசகத்துடன் இந்த ஆபாச வீடியோக்கள் வலம் வருகிறது. இதனால் ஒட்டுமொத்த தேவகவுடா குடும்பமும் நிலை குலைந்து போயுள்ளது.

இந்த நிலையில் ஆபாச வீடியோ வழக்கு தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு அமைக்க அரசு முடிவு செய்துள்ளதாக கர்நாடக முதல்-அமைச்சர் சித்தராமையா எக்ஸ் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இதனையடுத்து, பெண்களை மிரட்டி பாலியல் ரீதியாக துன்புறுத்தி ஆபாச வீடியோ எடுத்ததாக ரேவண்ணா மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பிரஜ்வால் ரேவண்ணா, ஜெர்மனுக்கு சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்நிலையில் பிரஜ்வால் ரேவண்ணாவின் ஆபாச வீடியோ விவகாரம் குறித்து பிரபல நடிகையும், பெண்கள் உரிமை ஆர்வலருமான பூனம் கவுர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,

"ரேவண்ணா 2800 க்கும் மேற்பட்ட பெண்களை மிரட்டி பாலியல் ரீதியாக துன்புறுத்தி ஆபாச வீடியோ எடுத்துள்ளார். இப்போது அவர் ஜெர்மனிக்கு தப்பியோடியுள்ளார். இதையே இந்த அரசு தட்டி கேட்கவில்லை. நம்மை எப்படி இந்த அரசு பாதுகாக்கும். ஆதலால் இந்த தேர்தலில் நாம் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை ஒருமுறை யோசித்து வாக்களியுங்கள். பெண்களுக்கு யார் பாதுகாப்பு கொடுப்பார்களா அவர்களுக்கு வாக்களியுங்கள். இது ஒவ்வொரு இந்திய குடிமகனின் கடமை. இப்படி அநியாயம் செய்பவர்களிடம் அதிகாரத்தை கொடுத்துவிட்டு பின்பு புலம்பாதீர்கள் என்று பேசியுள்ளார்.

நடிகை பூனம் கவுர் தென்னிந்திய மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். தமிழில் நெஞ்சிருக்கும் வரை என்ற திரைப்படத்தில் அவர் நடித்துள்ளார்.

Tags:    

Similar News