இந்தியா

பெண்கள் பாதுகாப்புக்கு மோடியின் உத்தரவாதத்திற்கு ரேவண்ணாவின் வீடியோக்களே சாட்சி - டி.ராஜா

Published On 2024-04-29 14:30 GMT   |   Update On 2024-04-29 14:30 GMT
  • தேவகவுடா பேரன் பிரஜ்வால் ரேவண்ணாவின் ஆபாச வீடியோக்கள் வெளியாகி கர்நாடகாவை அதிர வைத்துள்ளது
  • பெண்களுடன் பிரஜ்வால் ரேவண்ணா உல்லாசமாக இருப்பது போன்ற ஆபாச வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவிக் கொண்டிருக்கிறது

கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வால் ரேவண்ணா ஹாசன் தொகுதி எம்.பியாக உள்ளார். அவர் கர்நாடகாவில் முதல் கட்டமாக நடந்த பாராளுமன்ற தேர்தலில் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டார்.

இந்த பாராளுமன்ற தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தளம் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. .

இந்நிலையில் தேவகவுடா பேரன் பிரஜ்வால் ரேவண்ணாவின் ஆபாச வீடியோக்கள் வெளியாகி கர்நாடகாவை அதிர வைத்துள்ளது. பெண்களுடன் பிரஜ்வால் ரேவண்ணா உல்லாசமாக இருப்பது போன்ற ஆபாச வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவிக் கொண்டிருக்கிறது.

ஹாசன் தொகுதிக்கு வாக்குப்பதிவு நடைபெற்ற ஏப்ரல் 26-ந் தேதி முதல் நாளில் இருந்தே இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

இப்படிப்பட்ட நபருக்கா நீங்கள் ஓட்டுப் போடப் போகிறீர்கள்? என்ற வாசகத்துடன் இந்த ஆபாச வீடியோக்கள் வலம் வருகிறது. இதனால் ஒட்டுமொத்த தேவகவுடா குடும்பமும் நிலை குலைந்து போயுள்ளது.

இந்த நிலையில் ஆபாச வீடியோ வழக்கு தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு அமைக்க அரசு முடிவு செய்துள்ளதாக கர்நாடக முதல்-அமைச்சர் சித்தராமையா எக்ஸ் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இதனையடுத்து, பெண்களை மிரட்டி பாலியல் ரீதியாக துன்புறுத்தி ஆபாச வீடியோ எடுத்ததாக ரேவண்ணா மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பிரஜ்வால் ரேவண்ணா, ஜெர்மனுக்கு சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்நிலையில் இது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய தலைவர் டி.ராஜா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,

"பிரதமருக்கு நெருக்கமான ஒருவர் சம்பந்தப்பட்ட கொடூரமான வீடியோக்கள், ஆயிரக்கணக்கான எண்ணிக்கையில் வெளியாகியுள்ளன. பெண்கள் பாதுகாப்புக்கு மோடியின் உத்தரவாதத்திற்கு இந்த வீடியோக்களே சாட்சி. இதுதான் மோடியின் 'நாரி சக்தி'யின் (பெண்கள் சக்தி) உண்மையான நிலை.

பெண்களுக்கு எதிரான பிரஜ்வல் ரேவண்ணாவின் குற்றங்கள் பற்றி மோடி-ஷா வாய் மூடியுள்ளார்கள்.

வீடியோக்கள் வெளியானதையடுத்து ரேவண்ணா நாட்டை விட்டு ஓடிவிட்டார், தப்பிக்க அவருக்கு உதவியவர் யார்? இந்த விடை நம் அனைவருக்குமே தெரியும்.

பெண் மல்யுத்த வீரர்கள் பாலியல் துன்புறுத்தலின் போதும், மணிப்பூரில் பெண்கள் நிர்வாணமாக ஊர்வலம் அழைத்துச் செல்லப்பட்ட போதும் மோடி மவுனம் காத்தார். ஆயிரக்கணக்கான பெண்களை சீரழிவுக்கு ஆளாக்கிய இந்த கூட்டாளி குறித்தும் மோடி மௌனம் காப்பார்" என்று பதிவிட்டுள்ளார்.

Tags:    

Similar News