செய்திகள்
கோப்புப்படம்

வடிவேலு காமெடி போல வைகோவின் நிலை உள்ளது- அமைச்சர் கடம்பூர் ராஜூ

Published On 2019-03-01 11:32 GMT   |   Update On 2019-03-01 11:32 GMT
கூட்டணியில் இருக்கிறேனா? இல்லையா? வடிவேலு காமெடி போல வைகோவின் நிலை உள்ளது என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசியுள்ளார். #KadamburRaju #Vaiko
கோவில்பட்டி:

கோவில்பட்டி கிருஷ்ணன் கோவில் திடலில் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு ஜெயலலிதா பேரவை மாவட்ட பொருளாளர் வேலுமணி தலைமை வகித்தார். ஊராட்சி கழக செயலாளர் ரமேஷ், மணியாச்சி கூட்டுறவு சங்க தலைவர் மகேஷ்குமார், விவசாய அணி ராமச்சந்திரன், ரத்தினவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரி ஜனார்த்தனம், தலைமை கழக பேச்சாளர்கள் தமிழரசன், திரைப்படநடிகை பபிதா, மாவட்ட செயலாளர் சி.த.செல்லபாண்டியன், நகர செயலாளர் விஜயபாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-

கிராம சபை கூட்டம் என்ற பெயரில் தி.மு.க.வினர் கிளை செயலாளர்கள் கூட்டத்தினை நடத்தி வருகின்றனர். வடிவேலு நகைச்சுவை போன்று நானும் ரவுடி தான் என்பது போல வைகோ தி.மு.க. கூட்டணியில் உள்ளதாக கூறி வருகிறார்.

கடந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.கவுடன் கூட்டணி இருந்த வைகோ, அன்றைக்கு நடமாடும் காந்தி மோடி என்றும், இவரைப்போன்று மற்றொரு அவதாரம் யாரும் எடுக்க முடியாது என்றும் கூறியவர். இன்றைக்கு மோடி சாதனை நாயகனாக உள்ளார். 98-ல் பா.ஜக. தான் ஆட்சிக்கும் வரும், வாஜ்பாய் தான் பிரதமர் என்று ஜெயலலிதா கூட்டணி அமைத்து தமிழகத்தில் தாமரையை மலரச்செய்தார்.

வைகோவின் கட்சி சின்னமான பம்பரத்தினை சுத்த வைத்தவர் ஜெயலலிதா தான். தே.மு.தி.க.விற்கு நேரம் சரியாக இருந்தால் எங்களுடன் சேர்ந்து விடுங்கள், உங்களுக்கு நல்லது, 2011-ல் எங்களுடன் சேர்ந்த காரணத்தினால் தே.மு.தி.க.விற்கு எதிர்கட்சி அந்தஸ்து கிடைத்தது. பல தலைவர்கள் எதிர்கட்சி தலைவர்களாக இருந்த இடத்தில் விஜயகாந்தை வைத்து அழகு பார்த்தது அ.தி.மு.க.

முரசினை ஒலிக்க வைத்தது அ.தி.மு.க. தான். இன்றைக்கு படம் காட்டி கொண்டு இருக்கிறார்கள், படம் அரசியலுக்கு நன்றாக இருக்காது, மற்றவர்கள் பேச்சை கேட்கமால் இருந்தால் நல்ல கூட்டணி அமையும், அப்படி கூட்டணி அமையும் போது இது வெற்றி கூட்டணியாக மக்கள் நலக்கூட்டணியாக இருக்கும், மு.க.ஸ்டாலின் ஏன் இந்த கூட்டணி பற்றி கவலைப்படுகிறார்?

சென்னையில் பிரதமர் ராகுல்காந்தி என்று கூறிவிட்டு கொல்கத்தாவில் மாற்றி பேசியவர் தான் மு.க.ஸ்டாலின். பாகிஸ்தானை அடித்து நொறுக்க ஆரம்பித்தவுடன் மக்களிடம் எழுச்சி ஏற்பட்டுள்ளது. 40 வீரர்கள் கொல்லப்பட்டதற்கு பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகள் முகாம்களை ஒழித்து காட்டிய சர்வ வல்லமை ஆட்சி பா.ஜ.க. ஆட்சி, கார்கில் எப்படி வரலாற்று வெற்றியை வாஜ்பாய்க்கு பெற்று தந்ததோ, மோடி தான் என்ற அலை இந்தியா முழுவதும் வீசபோகிறது. இவர் தான் பிரதமர் என்று தேர்தலை சந்திக்கும் இயக்கம் அ.தி.மு.க. ஆனால் தி.மு.க. யார் பிரதமர் என்று சொல்லி தேர்தலை சந்திக்கும்.

இவ்வாறு அவர் பேசினார். #KadamburRaju #Vaiko
Tags:    

Similar News