என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "MDMK"

    • அமைதி பூங்காவாக இருக்கும் தமிழகத்தில் இந்துத்துவா சக்திகள் பிரிவினைவாதத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றன.
    • ‘ஜன நாயகன்’ திரைப்படத்திற்கும் தி.மு.க.விற்கும் எள்ளளவும் சம்பந்தமில்லை.

    மதுரை:

    மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டியில் இருந்து இன்று 7-வது நாள் சமத்துவ நடைபயணத்தை ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தொடங்கினார். வழிநெடுகிலும் அவருக்கு கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். கருங்காலக்குடியில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    அமைதி பூங்காவாக இருக்கும் தமிழகத்தில் இந்துத்துவா சக்திகள் பிரிவினைவாதத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றன. அது முறியடிக்கப்படும்.

    மத்திய அமைச்சர் அமித்ஷா, ஆணவம், அகம்பாவமிக்க வார்த்தைகளை தமிழ்நாட்டு மண்ணிற்கு வந்து சொல்லிவிட்டு போகின்ற துணிச்சல் வந்துள்ளது. வியர்வை ரத்தம் சிந்தி எண்ணற்றவர் உயிர் பலி கொடுத்து பெரியார், அண்ணா, கருணாநிதி கட்டிக்காத்த திராவிட கோட்டை வெறும் எக்கு இரும்பால் கட்டப்பட்டது அல்ல. ரத்தமும் சதையால் பாதுகாக்கப்பட்டன.

    'ஜன நாயகன்' திரைப்படத்திற்கும் தி.மு.க.விற்கும் எள்ளளவும் சம்பந்தமில்லை. வழக்கமாக எத்தனையோ படங்களுக்கு அது நடந்திருக்கிறது. அதுபோல விஜயின் படத்துக்கும் நடந்திருக்கக்கூடும். திரைப்படத்தை வெளியிடுவதை தி.மு.க.வோ, ம.தி.மு.க.வோ அல்லது கூட்டணி கட்சிகளோ எதிர்க்கவில்லை.

    நாங்கள் இதுவரை ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்று ஒரு சொல் கூட, தப்பி தவறி பேசியது கூட கிடையாது. எங்களைப் பொறுத்தவரை நேற்று வரை வைக்கவில்லை இனியும் வைக்க மாட்டோம் என்றார். 

    • மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த நானும், எனது தம்பிமார்களும் இந்த நடைபயணத்தை தொடங்கியுள்ளோம்.
    • வரும் தேர்தலில் தி.மு.க. அதன் கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவு கொடுத்து வெற்றிபெறச் செய்யுங்கள் என்று தி.மு.க.வின் திட்டங்களை எடுத்து சொல்லுவேன்.

    திருச்சி:

    சமத்துவ நடைபயண தொடக்க விழாவில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ பேசியதாவது:-

    பொங்கிவரும் பொன்னி ஆற்றங்கரையில், மலைக்கோட்டை நகரமாம் திருச்சி உறையூரில் 1938-ம் ஆண்டு ஆகஸ்ட் 1-ந்தேதி அஞ்சாநெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரிசாமியின் நடைபயணத்தை தொடங்கி வைக்க பெரியார், மறைமலை அடிகளார், சோமசுந்தரம் பாரதியார், மணவை திருமலைச்சாமி ஆகியோர் தொடங்கி வைத்து சிறப்பித்தனர். அதேபோன்ற எனது இந்த நடைபயணத்தையும் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

    1982-ம் ஆண்டு மார்ச் மாதம் 15-ந்தேதி நான்மாடக்கூடல் சங்கம் வளர்த்த மதுரை மாநகரில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து விட்டு, திருச்செந்தூரில் வைரவேல் காணாமல் போனதாக பிரச்சனை எழுந்த போதும், தூக்கிலே தொங்குகிறார் சுப்ரமணிய பிள்ளை என்றபோது அது தற்கொலை அல்ல படுகொலை என்று நீதி கேட்டு கலைஞர் அன்று மதுரையில் இருந்து நடைபயணம் மேற்கொண்டார்.

    108 திருப்பதிகளில் ஒன்றான தென் திருப்பேரையில் ஆபரணங்கள் திருடுபோய்விட்டதாக மக்கள் கவலைப்பட்டபோது, கலைஞர் நேரில் வந்து தென்திருப்பேரை ஆலயத்திற்குள் வந்து மக்களை சந்தித்து காவல்துறைக்கு அழுத்தம் கொடுத்து என்னை அழைத்து நடைபயணமாக வந்து மனு கொடுக்க சொன்னார். நானும் 1986-ம் ஆண்டில் அந்த பகுதி மக்களுடன் நடைபயணமாக வந்து திருநெல்வேலி கலெக்டர் அலுவலகம் வரை முதல் நடைபயணம் மேற்கொண்டேன்.

    அதனை தொடர்ந்து 1994-ல் குமரியில் இருந்து சென்னை வரை ஆயிரத்து 600 கிலோ மீட்டர் அன்றைய ஊழல் ஆட்சியான அ.தி.மு.க.வை எதிர்த்து நடைபயணம், வரிசையாக நதிகள் இணைப்புக்காக 2002-ம் ஆண்டு மாவட்டங்கள் தோறும் சென்று நடைபயணம், நல்லிணக்கம் தழைக்க நடைபயணம், முல்லை பெரியாரை காக்க 3 முறை நடைபயணம், 2018-ம் ஆண்டு மதுரையில் இருந்து இடுக்கி, பென்னிகுயிக் அணைகளை காக்க நடைபயணம் என பல்வேறு நடைப்பயணங்கள் மேற்கொண்டுள்ளேன்.

    அதில் பலவற்றில் எனக்கு இன்றைய முதலமைச்சர் உறுதுணையாக இருந்துள்ளார். யாதும் ஊரே யாவரும் கேளீர், பிறப்பொக்கும் எல்லாம் உயிர்க்கும் எனபதற்கு ஏற்ப, இந்த தமிழகத்தில் மத பூசல்களுக்கு இடமில்லை என்பதை நிலை நாட்ட, மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த நானும், எனது தம்பிமார்களும் இந்த நடைபயணத்தை தொடங்கியுள்ளோம்.

    இந்த பயணத்தில் மக்களை சந்திக்கும் போதெல்லாம் இந்த பொற்கால ஆட்சி தொடர வேண்டும் என்று கோரிக்கை வைப்பேன். வரும் தேர்தலில் தி.மு.க. அதன் கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவு கொடுத்து வெற்றிபெறச் செய்யுங்கள் என்று தி.மு.க.வின் திட்டங்களை எடுத்து சொல்லுவேன். வெல்க திராவிடம், வெல்க திராவிடம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • சாதி, மத மோதல்களை உருவாக்கும் வகையில் பொறுப்புகளில் உள்ளவர்களே பேசுகிறார்கள்.
    • கிறிஸ்துமஸ் விழாவின் போது நாட்டின் பல பகுதிகளில் தாக்குதல் நடத்தப்பட்டது.

    திருச்சியல் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவின் சமத்துவ நடைபயணத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதன்பின் அவர் விழாவில் பேசியதாவது:-

    * இளைஞர்களின் எதிர்காலத்தை சீரழிக்கும் போதைப்பொருளை நாம் நிச்சயமாக ஒழிக்க வேண்டும்.

    * போதையை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.

    * போதைப்பொருளை ஒழிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஓரளவு பலன் கிடைத்துள்ளது.

    * போதைப்பொருள் பழக்கம் என்பது மிகப்பெரிய நெட்ஒர்க். மத்திய, மாநில அரசுகள் இணைந்துதான் ஒழிக்க முடியும்.

    * நாட்டின் எல்லைகள் வழியாக போதைப்பொருள் நாட்டிற்குள் நுழைவதை மத்திய அரசு தடுக்க வேண்டும்.

    * திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் 1 லட்சத்திற்கும் அதிகமான போதைமாத்திரைகள் பிடிப்பட்டுள்ளது.

    * போதை ஒழிப்பில் கலைத்துறையை சேர்ந்தவர்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

    * போதையை புகழ்வது போன்ற காட்சிகளை எடுப்பதை ஏற்க முடியாது.

    * இளைஞர்கள் வழித்தவறி போகாமல் பெற்றோர், சகோதரர்கள் கண்காணிக்க வேண்டும்.

    * பிள்ளைகளை பொறுப்புடன் வளர்க்க வேண்டும்.

    * பிள்ளைகள் வழித்தவறி செல்லாமல் தடுக்க வேண்டும், பிள்ளைகளிடம் மனம் விட்டு பேசுங்கள்.

    * சாதி, மத மோதல்களை உருவாக்கும் வகையில் பொறுப்புகளில் உள்ளவர்களே பேசுகிறார்கள்.

    * கிறிஸ்துமஸ் விழாவின் போது நாட்டின் பல பகுதிகளில் தாக்குதல் நடத்தப்பட்டது.

    * ஊரே ஒற்றுமையாக இருந்த காலம் போய், மத மோதல்களை உருவாக்க சிலர் திட்டம் தீட்டுகிறார்கள்.

    * மது போதையையும், மத போதையையும் தமிழகத்திற்குள் நுழைவதை தடுக்க வேண்டும்.

    * வைகோவின் நோக்கம் பெரிது என்றாலும், அவரது உடல் நிலை எங்களுக்கு பெரிது என்றார். 

    • கலைஞர் கருணாநிதிக்கு அருகில் இருந்து அரசியல் கற்றுக்கொண்டவர் வைகோ.
    • கலைஞர் கருணாநிதி நடைபயணம் மேற்கொண்ட போது அவருக்கு பாதுகாப்பாக நடந்தவர் வைகோ.

    திருச்சியல் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவின் சமத்துவ நடைபயணத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதன்பின் அவர் விழாவில் பேசியதாவது:-

    * 2026-ம் ஆண்டில் நான் பங்கேற்கும் முதல் நிகழ்ச்சி இதுதான்.

    * தனது பொதுவாழ்வில் தமிழ்நாட்டில் தனது காலடி படாத இடமே இல்லை என மக்கள் பிரச்சனைக்காக நடைபயணம் சென்றவர் வைகோ.

    * வைகோவிற்கு 82 வயதா? 28 வயதா? என ஆச்சரியப்பட தோன்றுகிறது.

    * வைகோவின் நெஞ்சுரத்தை பார்க்கும் போது அவரது வயதே நமக்கு கேள்வியாகிறது.

    * தள்ளாத வயதிலும் தளராமல் தொண்டு செய்தவர் தந்தை பெரியார்.

    * 83 வயதிலும் சமூக வலைதளங்கள் மூலம் இளைஞர்களுடன் அரசியல் பேசியவர் கலைஞர்.

    * கலைஞர் கருணாநிதிக்கு அருகில் இருந்து அரசியல் கற்றுக்கொண்டவர் வைகோ.

    * கலைஞர் கருணாநிதி நடைபயணம் மேற்கொண்ட போது அவருக்கு பாதுகாப்பாக நடந்தவர் வைகோ.

    * திராவிட இயக்க பல்கலைக் கழகத்தில் பயின்றவர்கள் நானும், வைகோவும்.

    * இளைஞர்களுக்கு உரிய உத்வேகத்தை வைகோவிடம் பார்க்க முடிகிறது.

    * சமத்துவ நடைபயணத்தில் பங்கேற்கும் ஒவ்வொருவரையும் வைகோ தேர்வு செய்து வந்துள்ளார்.

    * முதுமையை முற்றிலும் தூக்கி எறிந்துவிட்டு நடைபயணத்தை வைகோ தொடங்கி உள்ளார்.

    * நடைபயணத்தால் என்ன பயன் எனக்கேட்கிறார்கள், காந்தியின் நடைபயணம்தான் சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியது.

    * இதுபோன்ற நடைபயணங்கள் தான் நமது கருத்தை எளிதாக மக்களிடம் கொண்டு செல்லும்.

    * இளைஞர்களுக்கு நல்வழி காட்டிட இளைஞர்களுடன் சமத்துவ பயணம் மேற்கொள்ளும் வைகோவிற்கு வாழ்த்துகள், பாராட்டுகள் என்றார். 

    • இந்த பயணம் சட்டமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக அமையும் என்றும் அவர் கூறினார்.
    • தினமும் 15 முதல் 17 கிலோ மீட்டர் தூரம் பயணிக்கிறார்.

    திருச்சி:

    தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் இன்னும் ஒருசில மாதங்களில் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி அமைப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன.

    இதில் தி.மு.க. கூட்டணியில் தற்போது இடம் பெற்றுள்ள கட்சிகளுடன் மேலும் சில கட்சிகளை சேர்க்கவும் முயற்சிகள் நடந்து வருகிறது.

    அதேபோல் அ.தி.மு.க-பா.ஜ.க. கூட்டணி உருவாகியுள்ள நிலையில் பொங்கலுக்கு பிறகு முக்கிய கட்சிகள் இணைந்து பலமான கூட்டணியுடன் தேர்தலை சந்திக்கும் என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து விருப்ப மனு பெறும் பணியும் ஒருபுறம் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    இந்தநிலையில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ திருச்சியில் இருந்து மதுரை வரை 12 நாட்கள் சமத்துவ நடைபயணம் மேற்கொள்கிறார். போதைப்பொருளுக்கு மாணவர்கள், இளைஞர்கள் என பலரும் அடிமையாவதை தடுக்கவும், அதேபோன்று தற்போது சாதிய மோதல்கள், மத மோதல்களை தமிழகத்தில் உருவாக்க சிலர் பார்க்கிறார்கள்.

    அதை தடுப்பதற்கு மக்க ளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி சகோதரர்களாக ஒருவருக்கொருவர் இருக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தியும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் திராவிட மாடல் ஆட்சி 2026 ஆண்டிலும் தொடரவும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும் இந்த நடைபயணம் செல்வதாகவும் வைகோ அறிவித்து இருந்தார்.

    மேலும் இந்த பயணம் சட்டமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக அமையும் என்றும் அவர் கூறினார். முன்னதாக திருச்சியில் இன்று நடைபெற்ற சமத்துவ நடைபயணத்தை தொடங்கி வைக்குமாறு தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை, வைகோ நேரில் சந்தித்து அழைப்பு விடுத்திருந்தார். அதேபோல் கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து ம.தி.மு.க. முதன்மை செயலாளர் துரை.வைகோ அழைப்பிதழ் வழங்கினார்.

    அதன்படி வைகோவின் சமத்துவ நடைபயண தொடக்க விழா இன்று திருச்சி தென்னூர் உழவர்சந்தை அருகில் உள்ள மாநகராட்சி திடலில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று காலை திருச்சி வருகை தந்தார். விமான நிலையத்தில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ரகுபதி, மெய்யநாதன், சிவசங்கர், கோவி செழியன், கலெக்டர் சரவணன், மேயர் அன்பழகன், மாவட்ட செயலாளர்கள் வைரமணி, காடுவெட்டி தியாகராஜன் எம்.எல்.ஏ., மாநகர போலீஸ் கமிஷனர் காமினி உள்ளிட்டோர் வரவேற்றனர்.

    இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விமான நிலையத்தில் இருந்து நடைபயண தொடக்க விழா நடைபெற்ற தென்னூர் உழவர்சந்தை வரை ரோடு-ஷோ சென்று மக்களை சந்தித்தார். வழிநெடுகிலும் சாலையின் இருபுறமும் தடுப்பு கட்டைகள் கட்டப்பட்டு இருந்தன. அங்கு காலை முதல் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு மு.க.ஸ்டாலினை உற்சாகமாக வரவேற்றனர். அவர்களிடம் கைகுலுக்கியும், செல்பியும் எடுத்துக் கொண்ட மு.க.ஸ்டாலின், கோரிக்கை மனுக்களையும் பெற்றுக்கொண்டார்.

    9 கிலோ மீட்டர் தூரத்துக்கு காரில் பயணித்தும், நடந்து சென்றும் ரோடு-ஷோ நடத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வரவேற்று 200 மீட்டர் தூரத்திற்கு ஒரு சிறிய மேடை அமைக்கப்பட்டு அதில் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளான கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம் நடைபெற்றது. தொடர்ந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விழா நடைபெறும் மேடைக்கு வந்தார்.

    இதையடுத்து நடைபெற்ற வைகோவின் சமத்துவ நடைபயண தொடக்க விழா நிகழ்ச்சிக்கு தி.மு.க. முதன்மைச் செயலாளரும், அமைச்சருமான கே.என்.நேரு தலைமை தாங்கினார். ம.தி.மு.க. முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்.பி. வரவேற்றார். அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முன்னிலை வகித்தார்.

    இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் காதர் மொய்தீன், மக்கள் நீதி மய்யம் சார்பில் மாநில பொதுச்செயலாளர் வழக்கறிஞர் அருணாசலம், இந்திய கம்யூனிஸ்டு சார்பில் மாவட்ட நிர்வாகிகள் கவுன்சிலர் சுரேஷ், சிவா, திராவிடர் கழகப் பொருளாளர் குமரேசன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

    பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வைகோ நடைபயணத்தை தொடங்கி வைத்து பேசினார்.

    இதையடுத்து நடைபயணத்தை தொடங்கிய வைகோ, அங்கிருந்து அண்ணா நகர் கோர்ட்டு ரோடு, மேஜர் சரவணன் ரவுண்டானா, மத்திய பேருந்து நிலையம், அரிஸ்டோ மேம்பாலம், கிராப்பட்டி மேம்பாலம், எடமலைப்பட்டி புதூர் வழியாக பஞ்சப்பூர் சென்று முதல் நாள் பயணத்தை முடித்து அங்குள்ள தனியார் அரங்கில் தங்குகிறார்.

    இந்த நடைபயணம் வருகிற 12-ந்தேதி மதுரையில் நிறைவு பெறுகிறது. தினமும் 15 முதல் 17 கிலோ மீட்டர் தூரம் பயணிக்கிறார். இந்த நடைபயணத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ம.தி.மு.க. தொண்டர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக தமிழகம் முழுவதிலும் இருந்து பல ஆயிரக்கணக்கான ம.தி.மு.க.வினர் வாகனங்களில் வந்து தொடக்க விழா நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

    • தொடக்க விழா அழைப்பிதழில் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் படம் அச்சிடப்பட்டு இருந்தது.
    • மாநில நிர்வாகிகள் மட்டுமல்லாமல், மாவட்ட நிர்வாகிகளும் பங்கேற்கவில்லை.

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ திருச்சியில் இன்று சமத்துவ நடைபயணத்தை தொடங்குகிறார். இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைக்கிறார். முன்னதாக தொடக்க விழா நிகழ்ச்சியில் பங்கேற்க காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டு கட்சிகள், மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட தி.மு.க. கூட்டணி கட்சிகளுக்கு நேரில் அழைப்பு விடுக்கப்பட்டது.

    அந்த தொடக்க விழா அழைப்பிதழில் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் படம் அச்சிடப்பட்டு இருந்தது. ஏற்கனவே முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுதலைப்புலிகள் அமைப்பினருக்கு நேரடி தொடர்பு இருந்தது வெட்டவெளிச்சமான நிலையில் தொடர்ந்து அந்த அமைப்பை காங்கிரசார் எதிர்த்து வருகிறார்கள்.

    இதற்கிடையே நடைபயண அழைப்பிதழ் வழங்கியபோதே காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, அதிருப்தி தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று திருச்சியில் நடைபெறும் வைகோ நடைபயண தொடக்க விழாவை காங்கிரஸ் கட்சி புறக்கணித்துள்ளது.

    இதில் மாநில நிர்வாகிகள் மட்டுமல்லாமல், மாவட்ட நிர்வாகிகளும் பங்கேற்கவில்லை. முன்னதாக திருச்சி விமான நிலையத்தில் நடைபெற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு நிகழ்ச்சியிலும் காங்கிரஸ் நிர்வாகிகள் யாரும் பங்கேற்கவில்லை. இது தி.மு.க. கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • காலை 9 மணிக்கு திருச்சி தென்னூர் அண்ணா நகர் உழவர் சந்தை அருகில் வைகோவின் சமத்துவ நடைபயணத்தை தொடங்கி வைத்து பேசுகிறார்.
    • சமத்துவ நடைபயணத்தை தொடங்கி வைத்த பின்னர் முதலமைச்சர் ஸ்டாலின் விமானம் மூலம் சென்னைக்கு புறப்பட்டு செல்கிறார்.

    திருச்சி:

    போதைப்பொருளுக்கு மாணவர்கள், இளைஞர்கள் என பலரும் அடிமையாவதை தடுக்கவும், தமிழகத்தில் சாதி, மத சண்டை கூடாது என்பதை வலியுறுத்தியும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் திராவிட மாடல் நல்லாட்சி 2026 ஆண்டிலும் தொடரவும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, திருச்சியில் நாளை (2-ந்தேதி) சமத்துவ நடைபயணத்தை தொடங்குகிறார்.

    இந்த பயணம் மதுரையில் வருகிற 12-ந்தேதி நிறைவுபெறும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. 190 கிலோ மீட்டர் நடைபெறும் இந்த நடைபயணத்தில் பங்கேற்க ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தொண்டர்கள் சோர்வடையாமல் இருப்பதற்காகவும், அவர்களை ஊக்கப்படுத்தவும் பழைய திரைப்பட பாடல்களும், இரவில் தங்குமிடங்களில் ஒளிபரப்ப 12 திரைப்படங்களும் தேர்வு செய்து வைக்கப்பட்டுள்ளது.

    வைகோவின் 10-வது நடைபயணமான இந்த சமத்துவ நடைபயணத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இதற்காக அவர் நாளை சென்னையில் இருந்து விமானம் மூலம் காலை 8 மணிக்கு திருச்சி வருகை தருகிறார்.

    விமான நிலையத்தில் இருந்து காரில் புறப்படும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சி தலைமை தபால் நிலையத்தில் இருந்து தென்னூர் அண்ணாநகர் உழவர் சந்தை திடல் வரை ரோடு-ஷோ சென்று பொதுமக்களை சந்திக்கிறார்.

    பின்னர் காலை 9 மணிக்கு திருச்சி தென்னூர் அண்ணா நகர் உழவர் சந்தை அருகில் வைகோவின் சமத்துவ நடைபயணத்தை தொடங்கி வைத்து பேசுகிறார். இந்த நிகழ்ச்சியில் ம.தி.மு.க. தலைமை நிலைய செயலாளர் துரை.வைகோ மற்றும் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கூட்டணி கட்சி தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள்.

    சமத்துவ நடைபயணத்தை தொடங்கி வைத்த பின்னர் முதலமைச்சர் ஸ்டாலின் விமானம் மூலம் சென்னைக்கு புறப்பட்டு செல்கிறார். முதலமைச்சர் வருகை தொடர்பாக சென்னையில் இருந்து பாதுகாப்பு துறை அதிகாரிகள் இன்று திருச்சிக்கு வந்து ஆலோசனை நடத்தி வருகிறார்கள். மேலும் நாளை திருச்சி நகர் பகுதியில் டிரோன்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    • கடந்த 7 ஆண்டுகளில் மதவாத சக்திகள் வளர்ந்து விட்டன.
    • குறுக்குவழியில் ஆட்சி மாற்றத்தை தமிழகத்தில் ஏற்படுத்தலாம் என அமித்ஷா நினைக்கலாம்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவிலில் ம.தி.மு.க. முதன்மை செயலாளர் துரை வைகோ இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ம.தி.மு.க.வை பொறுத்தவரை தேர்தலில் போட்டியிட எத்தனை சீட்டுகள் எண்ணிக்கை என்பது முக்கியமில்லை. தமிழகத்தில் மதவாத சக்திகள் வளா்ந்து விடக்கூடாது, சாதி-மத மோதல் ஏற்படும் சூழ்நிலை ஏற்படக்கூடாது என 9 ஆண்டுகளாக தி.மு.க. கூட்டணியில் இருந்து வருறோம்.

    ம.தி.மு.க. எத்தனை சீட்டுகளில் போட்டியிட வேண்டும் என்பதை இயக்கத்தின் தலைமை முடிவெடுக்கும். உரிய எண்ணிக்கைக்கான சீட்டு எங்களுக்கு தி.மு.க. வழங்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறோம்.

    ம.தி.மு.க. எப்போதும் தி.மு.க. கூட்டணியுடன் நீடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். வேறு எந்த கூட்டணியில் இருந்தும் அழைப்பு வந்ததா? என்ற பேச்சுக்கே இடம் கிடையாது. மதவாத சக்திகள் தமிழகத்தில் கால் பதிக்கும் சூழ்நிலையில், எங்களது கூட்டணி உறுதியாக உள்ளன.

    கடந்த 7 ஆண்டுகளில் மதவாத சக்திகள் வளர்ந்து விட்டன. அதனை வளர விடக்கூடாது என்பதற்காக அனைத்து ஜனநாயக சக்திகள் தி.மு.க. கூட்டணியில் இணைந்துள்ளோம்.

    த.வெ.க. தலைவர் விஜய்க்கு ரசிகர்கள் ஏராளாம். அவர் மதவாத சக்திகளை எதிர்க்கிறார். விஜய் அறியாமலேயே மதவாத சக்திகளுக்கு உதவி விடக்கூடாது. மதவாத சக்திக்கு எதிரான தி.மு.க. கூட்டணி தேர்தலில் வெற்றி பெறும்.

    த.வெ.க. தலைவர் விஜய் பா.ஜ.க.-அ.தி.மு.க. கூட்டணியில் இணைய மாட்டார். அதற்கு வாய்ப்பு இல்லை. ஏனெனில் அவர் ஆரம்ப காலத்தில் இருந்தே மதவாத சக்திக்கு எதிரான கொள்கை நிலைப்பாட்டை எடுத்துள்ளார். மேற்கு வங்காளம், தமிழகத்தையும் கைப்பற்றுவோம் என உள்துறை மந்திரி அமித்ஷா கூறுகிறார். கட்சி தொண்டர்களை உற்சாகப்படுத்தவே அவ்வாறு கூறுகிறார்.

    எஸ்.ஐ.ஆர். மூலம் தமிழகம், உத்தரபிரதேசம் உள்பட பல்வேறு இடங்களில் தகுதியான வாக்காளர்களும் நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன. எஸ்.ஐ.ஆர்-ஐ நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால் அதற்கான காலக்கெடு தான் குறைவு. அதில் உள்ள குறைபாடுகளை நாங்கள் எதிர்க்கிறோம்.

    இப்படி குறுக்குவழியில் ஆட்சி மாற்றத்தை தமிழகத்தில் ஏற்படுத்தலாம் என அமித்ஷா நினைக்கலாம். இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடும்போது தகுதியான வாக்காளர்களை நீக்கி விடக்கூடாது என்பது தான் எங்களது அச்சம். ஏனெனில் இத்தகைய தவறுகள் ஒருசில மாநிலங்களில் நடந்துள்ளது. அது தமிழகத்தில் நடந்து விடக்கூடாது என்றார்.

    இறுதியில் தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க.வுக்கு குறைந்த தொகுதிகள் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறதே என்று கேள்விக்கு, "எங்களுக்கு எத்தனை தொகுதிகள் தேவை என்பதை எங்கள் கட்சியின் தலைமை முடிவெடுக்கும். அதுகுறித்து தேர்தல் அறிவிப்பு வந்த பிறகு கூட்டணியில் பேச்சுவார்த்தை நடக்கும் போது கூட்டணி தலைமையிடம் எங்கள் கட்சி தலைமை பேசும்.

    தொகுதி எண்ணிக்கை குறைந்தால் யாருக்கும் சந்தோஷமாக இருக்காது. எண்ணிக்கை கூடினால் சந்தோஷப்படுவோம். தொகுதி எண்ணிக்கை குறைப்பு தொடர்பாக தி.மு.க. எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. தொகுதி ஒதுக்கீடு விவகாரத்தில் நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம்" என்றார்.

    • டிசம்பர் 18-ந்தேதி அன்று இவர் தனது புதிய கட்சியை இந்தியத் தேர்தல் ஆணையத்தில் முறைப்படி பதிவு செய்துள்ளார்.
    • ம.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட பலரும் மல்லை சத்யாவின் 'திராவிட வெற்றிக் கழகம்' கட்சியுடன் இணைந்துள்ளனர்.

    'அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை... எதிரியும் இல்லை' என்ற பழமொழி உள்ளது. இந்த பழமொழிக்கு ஏற்ப அவ்வப்போது சம்பவங்களும் அரசியலில் நிகழ்கின்றன. இதற்கு இவ்வாண்டு மிகச்சிறந்த சான்றாக மல்லை சத்யா உள்ளார்.

    வைகோ என்றால் மல்லை சத்யா, மல்லை சத்யா என்றால் வைகோ என்ற அளவுக்கு ம.தி.மு.க.வில் கிட்டத்தட்ட 32 ஆண்டுகள் பணியாற்றி உள்ளார் மல்லை சத்யா. மாமல்லபுரத்தை சேர்ந்த இவர் ம.தி.மு.க.வில் 1996-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வந்துள்ளார். 5 சட்டசபை தேர்தல், ஒரு மக்களவை தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார்.

     

    மேலும், ம.தி.மு.க. துணை பொதுச்செயலாளராக நீண்ட கால பணியாற்றி உள்ளார். இதனிடையே ம.தி.மு.க. முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்ட வைகோவின் மகன் துரை வைகோவுக்கும் மல்லை சத்யாவுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வந்தது. இதனால் துரை வைகோ தனது பதவியில் இருந்து விலகுவதாகவும் அறிவித்தார். மேலும் மல்லை சத்யாவுக்கு எதிராகவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதனை தொடர்ந்து சமரச பேச்சுவார்த்தை நடத்தப்பட்டாலும் இருவருக்கும் இடையேயான மோதல் போக்கு மற்றும் வார்த்தை மோதல் நிலவி வந்தது.

    இதன் காரணமாக செப்டம்பர் மாதம் 8-ந்தேதி கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் மல்லை சத்யாவை நீக்கி வைகோ அதிரடி உத்தரவை பிறப்பித்தார்.

     

    ம.தி.மு.க.விலிருந்து வெளியேறிய பின், 'திராவிட வெற்றிக் கழகம்' (Dravida Vettri Kazhagam - DVK) என்ற புதிய அரசியல் கட்சியை நவம்பர் மாதம் 20-ந்தேதி அன்று மல்லை சத்யா தொடங்கினார். இக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக இவர் செயல்படுகிறார். டிசம்பர் 18-ந்தேதி அன்று இவர் தனது புதிய கட்சியை இந்தியத் தேர்தல் ஆணையத்தில் முறைப்படி பதிவு செய்துள்ளார்.

    ம.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட பலரும் மல்லை சத்யாவின் 'திராவிட வெற்றிக் கழகம்' கட்சியுடன் இணைந்துள்ளனர்.

    தி.மு.க.வில் அங்கம் வகித்த வைகோ, கலைஞர் கருணாநிதியுடன் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக அக்கட்சியில் இருந்து வெளியேறி ம.தி.மு.க. என்ற புதிய கட்சியை தொடங்கினார். இதே போன்று ம.தி.மு.க.வில் அங்கம் வகித்த மல்லை சத்யா துரை வைகோவுடனான மோதல் போக்கு காரணமாக அக்கட்சியில் இருந்து விலகினார். இந்நிலையில் அவர் திராவிட வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கினார்.

    வரும் 2026 தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இணைந்து போட்டியிட மல்லை சத்யா விருப்பம் தெரிவித்துள்ளார். ஏற்கனவே தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் ம.தி.மு.க. இதற்கு சம்மதம் தெரிவிக்குமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

     

    தமிழக அரசியலில் ஒரு எழுத்து பஞ்சாயத்து என்பது நீண்ட காலமாக இருந்து வருகிறது. புதியதாக கட்சி தொடங்குபவர்கள் ஏற்கனவே இருக்கும் பிரபலமான கட்சியின் பெயரில் ஒரு எழுத்தை மட்டும் முன்னே, பின்னே, நடுவிலோ மாற்றியோ அல்லது சேர்த்தோ புதிய கட்சியை தொடங்கி விடுவது காலம் காலமாக நடந்து வருகிறது.

    இந்தநிலையில், ம.தி.மு.க.வில் இருந்து விலகி புதிய கட்சியை தொடங்கியிருக்கிற மல்லை சத்யா தனது கட்சிக்கு திராவிட வெற்றிக்கழகம் என்று பெயர் சூட்டியிருக்கிறார். சுருக்கமாக தி.வெ.க., ஆங்கிலத்தில் தமிழ் உச்சரிப்பில் டி.வி.கே. என்று வருகிறது.

    விஜய் கட்சியை த.வெ.க., டி.வி.கே. என்று தொண்டர்கள் அழைத்து வரும் நிலையில், மல்லை சத்யாவின் புதிய கட்சியின் பெயர் விஜய் கட்சியினரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. அரசியலில் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக த.வெ.க.வினர் தெரிவிக்கிறார்கள்.

    இதற்கெல்லாம் முன்பாக அரசியல் கட்சி தொடங்கிய வேல்முருகனின் கட்சியான தமிழக வாழ்வுரிமை கட்சியும் த.வா.க. எனவும் ஆங்கிலத்தில் டி.வி.கே. என்று தான் அழைக்கப்படுகிறது. அந்த வகையில் தமிழக அரசியலில் 3 டி.வி.கே. தேர்தலில் களம் காண இருப்பது குறிப்பிடத்தக்கது. குழப்பம் மக்களுக்கு தான்.

    • 2026 தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்று முதலமைச்சராக மீண்டும் மு.க.ஸ்டாலின் வருவார்.
    • அரசியல் கட்சிகள் நடத்தும் ஒவ்வொரு போராட்டங்களுக்கும் அவர்கள் தான் பொறுப்பேற்க வேண்டும்.

    சென்னை:

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் சென்னை தாயகத்தில் சமத்துவ நடைபயணத்திற்கு வீரர்கள் நேர்காணல் இன்று நடைபெற்றது.

    பின்னர் வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:-

    திருச்சியில் ஜனவரி 2-ந்தேதி ம.தி.மு.க.வின் சமத்துவ நடைபயணம் தொடங்குகிறது. மதுரையில் இந்த பயணம் 12-ந்தேதி நிறைவடைகிறது.

    கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. அதனால் போதைப் பொருளை ஒழிக்க வேண்டும் என்ற அடிப்படையில் இந்த விழிப்புணர்வு நடைபயணம் நடக்கிறது. திருச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

    இந்த பயணத்தில் சுமார் 1000 வீரர்கள் என்னோடு கலந்து கொள்கிறார்கள். இது எனது 11-வது நடை பயணமாகும். தமிழக அரசு போதைப் பொருளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். சாதி மத மோதல் விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் வகையில் இது அமைகிறது.

    தமிழகத்தின் நலனுக்காக எனது எஞ்சிய காலத்தையும் செலவிட முடிவு செய்து இந்த பயணத்தை மேற்கொள்கிறேன். திராவிட இயக்கத்துக்கு எதிராக இந்துத்துவா சக்திகள் எதிர்த்து வருகின்றன. அதனை முறியடிக்கும் வகையிலும் இந்த பயணம் அமையும்.

    2026 தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்று முதலமைச்சராக மீண்டும் மு.க.ஸ்டாலின் வருவார். அரசியல் கட்சிகள் நடத்தும் ஒவ்வொரு போராட்டங்களுக்கும் அவர்கள் தான் பொறுப்பேற்க வேண்டும். விஜய் கூட்டத்தில் உயிரிழந்த குடும்பத்திற்கு நேரில் சென்று துக்கம் விசாரிக்காமல் அவர்களை அழைத்து துக்கம் விசாரித்தது முறையல்ல.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது மாவட்ட செயலாளர் ஜீவன், தொண்டர் படை தலைவர் பாஸ்கர சேதுபதி, வக்கீல் நன்மாறன், கழக குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • தேர்தல் ஆணையம் கொண்டு வந்துள்ள எஸ்.ஐ.ஆர் பணி மிகப்பெரிய ஜனநாயக மோசடியாகும்.
    • எஸ்.ஐ.ஆர். பணிகளை உடனே நிறுத்த வேண்டும்.

    கோவை:

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கோவையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    கோவை மெட்ரோ ரெயில் திட்டம் என்பது முன்பே அறிவிக்கப்பட்டது. தமிழக அரசும் மெட்ரோ ரெயில் திட்டத்துக்கு அறிக்கை தயாரித்து அனுப்பியது. அவர்கள் கேட்ட கேள்விகளுக்கும் தமிழக அரசு பதில் அளித்தது.

    இந்த நிலையில் திடீரென நேற்று மாலை கோவை, மதுரை மெட்ரோ ரெயில் திட்டத்தை மத்திய அரசு நிராகரித்து இருக்கிறது.

    20 லட்சத்திற்கு குறைவாக இருப்பதால் அனுமதி கொடுக்க இயலாது என கூறி ரத்து செய்திருக்கிறது. ஆனால் மக்கள் தொகை குறைவாக உள்ள ஆக்ரா, போபால், கொச்சி உள்ளிட்ட பகுதிகளில் மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு அனுமதி அளித்து அங்கு பணிகள் தொடங்கி விட்டன.

    ஆனால் மக்கள் தொகையை காரணம் காட்டி, கோவை மெட்ரோ ரெயில் திட்டத்தை ரத்து செய்தது அதிர்ச்சி அளிக்கிறது. இது தமிழகத்திற்கு எதிரானது. மெட்ரோ ரெயில் திட்டத்தை ரத்து செய்து, மத்திய அரசு தமிழகத்திற்கு துரோகம், வஞ்சம் செய்துள்ளது.

    கோவை மெட்ரோ ரெயில் திட்டத்தை ரத்து செய்த மத்திய அரசை கண்டித்தும், மெட்ரோ ரெயில் திட்டம் மீண்டும் செயல்படுத்த கோரியும் வருகிற 24-ந் தேதி(திங்கட்கிழமை) மாலை 4 மணிக்கு கோவை செஞ்சிலுவை சங்கம் முன்பு ம.தி.மு.க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

    தேர்தல் ஆணையம் கொண்டு வந்துள்ள எஸ்.ஐ.ஆர் பணி மிகப்பெரிய ஜனநாயக மோசடியாகும். தேர்தல் ஆணையம் ஒருசாராகவே செயல்பட்டு வருகிறது. எஸ்.ஐ.ஆர். பணிகளை உடனே நிறுத்த வேண்டும்.

    தமிழகத்தில் உள்ள கோவை, மதுரை மெட்ரோ ரெயில் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பிரதமர் மோடி தமிழகத்தில் வந்து திருக்குறளையும், பாரதியார் பாட்டையும் மனப்பாடம் செய்து படித்து தமிழக மக்களை ஏமாற்ற முடியாது. அதனை தமிழக மக்கள் யாரும் நம்பமாட்டார்கள் என்றார். 

    • தற்போது திராவிட இயக்கம் இருக்க கூடாது என தமிழகத்தில் நினைக்கிறார்கள்.
    • அரசியலில் அரிச்சுவடி தெரியாதவர் விஜய்.

    சென்னை:

    ம.தி.மு.க. நிர்வாகக் குழுக்கூட்டம், அவைத் தலைவர் ஆடிட்டர் அர்ஜூனராஜ் தலைமையில் இன்று எழும்பூரில் உள்ள தலைமை நிலையம் தாயகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் பொதுச்செயலாளர் வைகோ சிறப்புரை ஆற்றினார். பொருளாளர் செந்திலதிபன், முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்.பி., துணைப் பொதுச்செயலாளர்கள் செஞ்சி ஏ.கே.மணி, ஆடுதுறை முருகன், தி.மு. ராசேந்திரன், டாக்டர் ரொஹையா மற்றும் உயர் நிலைக்குழு உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகக் குழு உறுப்பி னர்கள் கலந்துகொண்டனர்.

    கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    அவசரகதியில் செய்யப்படும் எஸ்.ஐ.ஆர். நடவடிக்கை என்பது மக்களின் வாக்குரிமையைப் பறித்து, பா.ஜ.க.வுக்கு சாதகமாக தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படும் சதியாக அமைந்துள்ளது.

    அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டங்கள் நடத்துவதற்கு அரசின் சார்பில் விதிமுறைகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. அதில், பொதுக்கூட்டங்களுக்கு அனுமதி வழங்க வைப்புத் தொகை ரூ.1 லட்சம் முதல் ரூ. 20 லட்சம் வரை செலுத்த வேண்டும் என்றும், அரசியல் கட்சிகள் குறிப்பிட்டதைவிட பொதுக்கூட்டத்தில் 50 சதவீதம் பேர் பங்கேற்றால் வைப்புத் தொகை திருப்பித் தரப்படாது என்றும் கூறப்பட்டிருப்பது நடைமுறைச் சிக்கல்களை ஏற்படுத்தும் என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    நிர்வாகக் குழு கூட்டத்தில் வைகோ பேசியதாவது:-

    2011-ல் எங்களுடன் அ.தி.மு.க. கூட்டணி பேசிய நேரத்தில் அ.தி.மு.க. மூத்த நிர்வாகிகள் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டவர்கள் தாயகம் வந்து பேசினார்கள். 12 தொகுதிகள் தருவதாக கூறப்பட்டது.

    அப்போது ஒ.பி.எஸ்., ஜெயலலிதாவிடம் ம.தி.மு.க. கூட்டணிக்கு வர தயாராக இல்லை என்று தவறான தகவல் கூறினார். அதனால்தான் 2011-ல் தேர்தலை புறக்கணித்தோம். அப்போது செய்த தவறுக்கு தான் ஓ.பி.எஸ். இப்போது அனுபவிக்கிறார். 15 தொகுதி, ஒரு ராஜ்யசபா எம்.பி. பதவி ம.தி.மு.க.வுக்கு கொடுக்க ஜெயலலிதா தயாராக இருந்து இருக்கிறார். ஆனால் ஒ.பி.எஸ்.தான் திட்டமிட்டு ஏதோ குளறுபடி செய்து இருக்கிறார். இந்த தகவல் பின்னர் தான் எனக்கு தெரியவந்தது.

    தற்போது திராவிட இயக்கம் இருக்க கூடாது என தமிழகத்தில் நினைக்கிறார்கள். அதனால் தான் திராவிட இயக்கத்தை பாதுகாக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. இதனால் தான் ம.தி.மு.க., தி.மு.க. உடன் கூட்டணியில் தொடர்ந்து இருக்கிறோம்.

    பொதுக்குழுவில் விஜய் தி.மு.க.வை மிக மோசமாக விமர்சித்து இருக்கிறார். உயிரிழந்த 41 பேர் குடும்பத்தை கரூர் சென்று சந்திக்காமல் மாமல்லபுரம் வரவைத்து சந்தித்தது இதுவரை நடக்காதது. இது மிகப்பெரிய பித்தலாட்டம்.

    எங்களுக்கும், தி.மு.க.வுக்கும் தான் போட்டி என விஜய் பேசுகிறார். அரசியலில் அரிச்சுவடி தெரியாதவர் விஜய். காகித கப்பலில் கடல் தாண்ட நினைக்கிறார். அவர் கனவு பலிக்காது. வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணிகளுக்கு எதிராக தி.மு.க. போராட்டதை அறிவித்து இருக்கிறது. இதில் ம.தி.மு.க. கலந்து கொள்ளும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×