என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

மெட்ரோ ரெயில் திட்டம் ரத்து செய்யப்பட்டதை கண்டித்து கோவையில் 24-ந் தேதி ம.தி.மு.க ஆர்ப்பாட்டம்- வைகோ
- தேர்தல் ஆணையம் கொண்டு வந்துள்ள எஸ்.ஐ.ஆர் பணி மிகப்பெரிய ஜனநாயக மோசடியாகும்.
- எஸ்.ஐ.ஆர். பணிகளை உடனே நிறுத்த வேண்டும்.
கோவை:
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கோவையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
கோவை மெட்ரோ ரெயில் திட்டம் என்பது முன்பே அறிவிக்கப்பட்டது. தமிழக அரசும் மெட்ரோ ரெயில் திட்டத்துக்கு அறிக்கை தயாரித்து அனுப்பியது. அவர்கள் கேட்ட கேள்விகளுக்கும் தமிழக அரசு பதில் அளித்தது.
இந்த நிலையில் திடீரென நேற்று மாலை கோவை, மதுரை மெட்ரோ ரெயில் திட்டத்தை மத்திய அரசு நிராகரித்து இருக்கிறது.
20 லட்சத்திற்கு குறைவாக இருப்பதால் அனுமதி கொடுக்க இயலாது என கூறி ரத்து செய்திருக்கிறது. ஆனால் மக்கள் தொகை குறைவாக உள்ள ஆக்ரா, போபால், கொச்சி உள்ளிட்ட பகுதிகளில் மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு அனுமதி அளித்து அங்கு பணிகள் தொடங்கி விட்டன.
ஆனால் மக்கள் தொகையை காரணம் காட்டி, கோவை மெட்ரோ ரெயில் திட்டத்தை ரத்து செய்தது அதிர்ச்சி அளிக்கிறது. இது தமிழகத்திற்கு எதிரானது. மெட்ரோ ரெயில் திட்டத்தை ரத்து செய்து, மத்திய அரசு தமிழகத்திற்கு துரோகம், வஞ்சம் செய்துள்ளது.
கோவை மெட்ரோ ரெயில் திட்டத்தை ரத்து செய்த மத்திய அரசை கண்டித்தும், மெட்ரோ ரெயில் திட்டம் மீண்டும் செயல்படுத்த கோரியும் வருகிற 24-ந் தேதி(திங்கட்கிழமை) மாலை 4 மணிக்கு கோவை செஞ்சிலுவை சங்கம் முன்பு ம.தி.மு.க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
தேர்தல் ஆணையம் கொண்டு வந்துள்ள எஸ்.ஐ.ஆர் பணி மிகப்பெரிய ஜனநாயக மோசடியாகும். தேர்தல் ஆணையம் ஒருசாராகவே செயல்பட்டு வருகிறது. எஸ்.ஐ.ஆர். பணிகளை உடனே நிறுத்த வேண்டும்.
தமிழகத்தில் உள்ள கோவை, மதுரை மெட்ரோ ரெயில் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பிரதமர் மோடி தமிழகத்தில் வந்து திருக்குறளையும், பாரதியார் பாட்டையும் மனப்பாடம் செய்து படித்து தமிழக மக்களை ஏமாற்ற முடியாது. அதனை தமிழக மக்கள் யாரும் நம்பமாட்டார்கள் என்றார்.






