உள்ளூர் செய்திகள்

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி

Published On 2024-05-04 03:05 GMT   |   Update On 2024-05-04 03:05 GMT
  • தேர்வு முடிவுகள் வருகிற 10 ந்தேதி வெளியாகிறது.
  • துணைத் தேர்வில் பங்கேற்கும் வகையில் சிறப்பு பயிற்சிகள்.

சென்னை:

தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் 26 ந்தேதி முதல் ஏப்ரல் 8 ந்தேதி வரை நடந்தது. இந்த தேர்வை, 9.1 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினார்கள். விடைத்தாள் திருத்தும் பணிகள் நிறைவடைந்துள்ளன. தேர்வு முடிவுகள் வருகிற 10 ந்தேதி வெளியாகிறது.

இந்த நிலையில், 'தொடர்ந்து கற்போம்' எனும் திட்டத்தின் கீழ், எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மற்றும் தேர்வுக்கு வருகை புரியாத மாணவர்களுக்கு, அவர்கள் துணைத் தேர்வில் பங்கேற்கும் வகையில் சிறப்பு பயிற்சிகள், வாராந்திர தேர்வுகள் நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து, தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குனர் மற்றும் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் ஆகியோர் கூட்டாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி, நடப்பாண்டு எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மற்றும் தேர்வுக்கு வருகை புரியாத மாணவர்களுக்கு, தேர்வு முடிவுகள் வெளியான நாள் முதல் துணைத் தேர்வு நடைபெறும் நாள் வரை உயர்நிலை, மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர்களை கொண்டு சிறப்பு பயிற்சிகள் நடத்த திட்டமிட்டுள்ளது. மேலும், வாராந்திர தேர்வுகள் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், மாணவர்கள் தங்கள் கல்வியை தொடர முடியும்.

பொதுத்தேர்வில் பங்கேற்காத மாணவர்களின் வீடுகளுக்கு சென்று பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி மாணவர்களை சிறப்பு பயிற்சி மையத்துக்கு அழைத்துவர பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சிறப்பு வகுப்புக்கு மாணவர்கள் வருவதை பள்ளி தலைமை ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News