விலை வீழ்ச்சி எதிரொலி: செடியிலேயே பறிக்காமல் விடப்படும் தக்காளிகள்- விவசாயிகள் கவலை
- கடந்த ஆண்டில் வடகிழக்கு பருவமழையையொட்டி பல்வேறு கிராமங்களில் தக்காளி சாகுபடி அதிகளவில் இருந்தது.
- கடந்த சில நாட்களாக மார்க்கெட்டில் ஒரு கிலோ ரூ.10 முதல் அதிகபட்சமாக ரூ.12க்கு ஏலம் போனது.
பொள்ளாச்சி:
பொள்ளாச்சி சுற்று வட்டார கிராம பகுதிகளில் காய்கறி சாகுபடியில் விவசாயிகள் அதிகளவில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில் வடக்கிபாளையம், புரவிபாளையம், டி.நல்லிக்கவுண்டன் பாளையம், ஜமீன் காளியா புரம், பெரும்பதி, கோவிந்தனூர், மாப்பிள்ளை கவுண்டன்புதூர், சூலக்கல், நெகமம், கோமங்கலம், தேவனூர்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் தக்காளி சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த ஆண்டில் வடகிழக்கு பருவமழையையொட்டி பல்வேறு கிராமங்களில் தக்காளி சாகுபடி அதிகளவில் இருந்தது. அதன் விளைச்சல் கடந்த மாதம் இறுதியில் இருந்து அதிகமாக இருந்ததால் அறுவடைக்கு தயாரானது. இதன் காரணமாக கடந்த 3 வாரத்துக்கும் மேலாக சந்தைகளுக்கு தக்காளி வரத்து அதிகமாகி குறைந்த விலைக்கு விற்பனையானது.
அதிலும் கடந்த ஒரு வாரமாக மார்க்கெட்டில் தக்காளி விலை இறக்கத்துடன் இருப்பதுடன், அதற்கு உரிய விலை கிடைக்காமல் போகிறது. கடந்த சில நாட்களாக மார்க்கெட்டில் ஒரு கிலோ ரூ.10 முதல் அதிகபட்சமாக ரூ.12க்கு ஏலம் போனது.
இதனால் விவசாயிகள் பலர் கிராமங்களில் சாகுபடி செய்துள்ள தக்காளிகளை பறிக்காமல் அப்படியே செடியிலேயே விட்டு விட்டனர்.
முத்தூர், ஆர்.பொன்னாபுரம், தாளக்கரை, வடக்கிபாளையம், சூலக்கல் உள்ளிட்ட இடங்களில் செடிகளில் தக்காளி பழுத்த நிலையில் கொத்துக் கொத்தாக தொங்குகின்றன.
விலை வீழ்ச்சியால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. மேலும் தக்காளிக்கு உரிய விலை இல்லாமல் போனதால் பல கிராமங்களில் தக்காளியை செடியில் இருந்து பறிக்காமல் அப்படியே விட்டு விடுவதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர். இதனால் விவசாயிகளும் கவலை அடைந்துள்ளனர்.