செய்திகள்

தேர்தல் ஓட்டுகளை காட்டிலும் நாட்டை காப்பது முக்கியம்- திருமாவளவன் பேச்சு

Published On 2018-11-16 11:20 GMT   |   Update On 2018-11-16 11:20 GMT
தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தேர்தல் தொடர்பாக பணிகளை மேற்கொண்டு வருகின்றன. இது முக்கியம்தான். எனினும் தேர்தல் வாக்குகளை காட்டிலும், நாட்டை காப்பது முக்கியம் என்று திருமாவளவன் பேசினார். #thirumavalavan #vote #election

தருமபுரி:

தருமபுரியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒருங்கிணைந்த மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பேசியதாவது:-

இன்றைய சூழலில் தமிழகத்தில் மற்ற அரசியல் கட்சிகள் தேர்தல் தொடர்பாக பணிகளை மேற்கொண்டு வருகின்றன. இது முக்கியம்தான். எனினும் தேர்தல் வாக்குகளை காட்டிலும், நாட்டை காப்பது முக்கியம்.

அம்பேத்கார் இயற்றிய அரசியல் அமைப்பு சட்டம் ஜனநாயகத்தை நமக்களிக்கிறது. ஆனால், பா.ஜ.க. உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகள் இந்திய நாட்டின் மிக உயர்ந்த ஜனநாயகத்தை மறுத்து, மீண்டும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நடைமுறையில் இருந்த கோட்பாடுகளுடன் இந்த நாட்டை இட்டுச் செல்ல முயற்சிக்கின்றன.

இதனை முறியடித்து, ஜனநாயகத்தையும், நாட்டையும் காக்க வேண்டிய கடமை தற்போது எழுந்துள்ளது. இதற்காக நாட்டிலுள்ள மதச்சார்பற்ற கட்சிகள் ஒருங்கிணைந்து வரும் டிசம்பர் 10-ந்தேதியில் தேசம் காப்போம் என்ற முழக்கத்தை முன்வைத்து விடுதலைச் சிறுத்கைள் கட்சியின் சார்பில் திருச்சியில் மாநாடு நடைபெற உள்ளது.

இந்த மாநாட்டில் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் ராகுல்காந்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சுதாகர்ரெட்டி, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்க இசைவு தெரிவித்துள்ளனர்.

எனவே இந்த மாநாட்டை சிறப்பிக்க தருமபுரி மாவட்டத்தில் இருந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் திரளாக பங்கேற்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார். #thirumavalavan #vote #election

Tags:    

Similar News