உள்ளூர் செய்திகள்

ஏற்காடு, கொளத்தூர் பகுதியில் இடியுடன் பலத்த மழை

Published On 2024-05-05 05:07 GMT   |   Update On 2024-05-05 05:07 GMT
  • சேலம் மாநகரில் மதியம் 2 மணி முதல் வெயிலின் தாக்கம் குறைந்தது.
  • நீதிபுரம், லக்கம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் 7ஆயிரம் வாழைகள் முறிந்து சேதமானது.

மேட்டூர்:

சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் வரலாறு காணாத அளவுக்கு கொளுத்தியது . குறிப்பாக கடந்த 2-ந் தேதி அதிக பட்சமாக 108 டிகிரி வெயில் கொளுத்தியது. இதனால் பொது மக்கள் வெளியில் நடமாட முடியாமல் வீடுகளில் முடங்கினர்.

இந்த நிலையில் அக்னி நட்சத்திரம் நேற்று தொடங்கியது. இதனால் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என்று பொது மக்கள் அச்சத்தில் இருந்தனர். ஆனால் அதற்கு மாறாக வெயிலின் தாக்கம் சற்று குறைந்து 104.9 டிகிரியாக பதிவானது. மேலும் வானம் மேக மூட்டத்துடன் காட்சி அளித்ததுடன் பல பகுதிகளில் லேசான மழை பெய்தது.

ஏற்காட்டில் நேற்று காலை வெயிலின் தாக்கம் இருந்த நிலையில் மதியம் 1 மணியளவில் தொடங்கிய மழை 2.40 மணி வைர இடியுடன் கொட்டி தீர்த்தது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். கல்வராயன் மலை, கருமந்துறை பகுதியில் மதியம் 1 மணி நேரத்திற்கும் மேலாக கன மழை பெய்தது. இதே போல சேலம் வலசையூர், சுக்கம்பட்டி, குப்பனூர் பகுதிகளிலும் மழை பெய்தது.

சேலம் மாநகரில் மதியம் 2 மணி முதல் வெயிலின் தாக்கம் குறைந்தது. குளிர்ந்த காற்று வீசியது. மழை வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஒரு சில இடங்களில் மட்டும் லேசான மழை பெய்தது.

மேட்டூரை அடுத்த கொளத்தூர் லக்கம்பட்டி, நீதிபுரம், காரைக்காடு, கண்ணாமூச்சு ஆகிய பகுதிகளில் நேற்று மாலை 4.30 மணிக்கு இடி, மின்னலுட்தன் தொடங்கிய மழை அரை மணி நேரத்திற்கும் மேலாக சூறை காற்றுடன் கன மழையாக கொட்டியது. இந்த காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் கொளத்தூர் அருகே உள்ள தண்டா, நீதிபுரம், லக்கம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் 7ஆயிரம் வாழைகள் முறிந்து சேதமானது.

இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர். இதற்கிடையே மேட்டூர் தொகுதி எம்.எல்.ஏ. சதாசிவம் அங்கு நேரில் சென்று பார்வையிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழக அரசு நிதி உதவி வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

சேலம் மாவட்டத்தில் அதிக பட்சமாக மேட்டூரில் 19 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. ஏற்காடு 14.8, ஆனைமடுவு 8, பெத்தநாயக்கன்பாளையம் 6, காடையாம்பட்டி 4.8, கரியகோவில் 2, சேலம் 0.2 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 54.80 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. இன்று காலையும் வானம் மேக மூட்டத்துடன் காட்சி அளித்தது.

Tags:    

Similar News