தமிழ்நாடு செய்திகள்

ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்ட என்னால் தி.மு.க.வில் பயணிக்க முடியாது- வெல்லமண்டி நடராஜன்

Published On 2026-02-27 13:00 IST   |   Update On 2026-02-27 13:00:00 IST
  • என்னையும் அவர் அழைத்தார். ஆனால் நான் வரவில்லை, நீங்கள் செல்லுங்கள் என்று கூறி விட்டேன்.
  • அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக ஓரிரு தினங்களில் அறிவிப்பேன்.

திருச்சி:

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்பு கழக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் இன்று தி.மு.க. தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளராக களப்பணியாற்றி வந்த அ.தி.மு.க. மீட்புக் கழகத்தின் திருச்சி மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வெல்லமண்டி நட ராஜன் தி.மு.க.வில் இணைய மறுத்துள்ள தகவல் வெளியாகி உள்ளது.

இது தொடர்பாக வெல்லமண்டி நடராஜன் 'மாலை மலர்' நிருபரிடம் கூறியதாவது:-

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்டவன் நான். அ.தி.மு.க.வில் நீண்ட காலம் பணியாற்றி வந்தேன். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. பிளவுபட்டபோது ஓ.பன்னீர்செல்வத்தின் தலைமையை ஏற்று பணியாற்றினேன். முன்னதாக 2016 சட்டமன்ற தேர்தலில் திருச்சி கிழக்கு தொகுதியில் முதலில் இரண்டு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு மாற்றப்பட்டனர். மூன்றாவதாக என்னை ஜெயலலிதா அறிவித்து வெற்றி பெறச் செய்தார்.

அப்போதைய அமைச்சர வையில் சுற்றுலாத்துறை அமைச்சராகவும் எனக்கு வாய்ப்பளித்தார். ஐந்தாண்டுகள் அமைச்சர் பதவியில் சிறப்பாக பணியாற்றி ஆட்சிக்கும், கட்சிக்கும் நல்ல பெயர் பெற்று தந்தேன். அப்போது முதல் தற்போது வரை அ.தி.மு.க.வின் விசுவாசியாகவே நான் இருந்து வருகிறேன்.

இந்தநிலையில்தான், ஓ.பன்னீர்செல்வம் தி.மு.க.வில் இன்று தன்னை இணைத்துக் கொண்டு உள்ளார். என்னையும் அவர் அழைத்தார். ஆனால் நான் வரவில்லை, நீங்கள் செல்லுங்கள் என்று கூறி விட்டேன். ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்ட எனக்கு தி.மு.க.வுக்கு செல்ல மனம் இடம் தரவில்லை. அதில் என்னால் பயணம் செய்ய முடியாது. இதை கட்சி விரோத நடவடிக்கையாகவே கருதுகிறேன். அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக ஓரிரு தினங்களில் அறிவிப்பேன் என்றார்.

முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், ஓ பன்னீர்செல்வத்துக்கு அடுத்தபடியாக வைத்திலிங்கத்தின் தீவிர ஆதரவாளராக கருதப்பட்டார். வைத்திலிங்கம் தி.மு.க.வில் இணைந்த போது அவரும் தி.மு.க.வில் இணைவதாக தகவல் வெளியானது. ஆனால் அப்போதும் தி.மு.க.வில் தான் இணையவில்லை, வீட்டில்தான் இருக்கிறேன் என தெரிவித்து ஓ.பன்னீர்செல்வத்தின் முடிவே தன்னுடைய முடிவு என கூறினார்.

இப்போது ஓ.பன்னீர்செல்வம் தி.மு.க.வில் ஐக்கியமான நிலையிலும் அங்கு செல்ல மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் குன்னம் அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. ஆர்.டி.ராமச்சந்திரன், ஜெயலலிதாவின் படத்தை தூக்கி எறிந்து விட்டு தி.மு.க.வில் இணைய போகிறீர்களா என தாய், மனைவி, குழந்தைகள் கேட்டபோது, மனம் நொந்து போய்விட்டேன். தி.மு.க.வில் இணையவில்லை, அரசியலை விட்டு விலகுகிறேன் என அறிவித்தார்.

ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளராக இருந்த திருச்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் தமிழக வெற்றி கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டு பணியாற்றி வருகிறார். வெல்லமண்டி நடராஜன் விஜய் கட்சிக்கு செல்வாரா? அல்லது தாய் கழகமான அ.தி.மு.க.வில் தன்னை இணைத்துக் கொள்வாரா? என்பது சில நாட்களில் தெரியவரும்.

Tags:    

Similar News