அந்தோணியார் திருவிழா - ராமேசுவரத்தில் இருந்து கச்சத்தீவுக்கு புறப்பட்டு சென்ற 4 ஆயிரம் பக்தர்கள்
- கடலில் பயணிக்கும் 4 ஆயிரம் பேருக்கும் பாதுகாப்பு கவச உடை வழங்கப்பட்டது.
- கச்சத்தீவு மற்றும் இலங்கை கடல் எல்லையிலும் அந்நாட்டு கடற்படை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது.
ராமேசுவரம்:
தமிழகத்தின் ராமேசுவரத்தில் இருந்து 12 கடல் மைல் தொலைவிலும், இலங்கை நெடுந்தீவில் இருந்து 16 கடல் மைல் தொலைவில் அமைந்து உள்ளது கச்சத்தீவு. இருநாடுகளின் கடல் பரப்பில் நடுவே அமைந்துள்ள இத்தீவு சுமார் 285 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருந்த கச்சத்தீவு கடந்த 1974-ம் ஆண்டு இலங்கைக்கு வழங்கப்பட்டது. அப்போது இந்த தீவில் உள்ள அந்தோணியார் தேவாலய திருவிழாவுக்கு ஒவ்வொரு ஆண்டும் தமிழக மீனவர்களை அனுமதிப்பது, மீன்பிடிப்பின்போது தமிழக மீனவர்கள் தங்களது வலைகளை உலர்த்திக் கொள்ளவும், ஓய்வெடுக்கவும் இத்தீவை பயன்படுத்திக் கொள்வது என்ற ஷரத்துக்கள் சேர்க்கப்பட்டது.
ஆனால் இலங்கையில் நடந்த உள்நாட்டு போர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தமிழக மீனவர்கள் வலைகளை உலர்த்திக் கொள்ள இலங்கை அரசு அனுமதி மறுத்துவிட்டது. ஆனால் வருடந்தோறும் நடைபெறும் கச்சத்தீவு அந்தோணியார் திருவிழாவிற்கு மட்டும் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தமிழக மீனவர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
அதன்படி இந்த ஆண்டுக்கான கச்சத்தீவு திருவிழா இன்று (27-ந் தேதி) மாலை தொடங்குகிறது. இந்த விழாவில் பங்கேற்க விரும்புவோர் கடந்த ஒரு மாதம் முன்பே ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகத்திடம் விண்ணப்பம் செய்திருந்தனர். அதனை அதிகாரிகள் பரிசீலனை செய்து கச்சத்தீவு திருவிழாவில் பங்கேற்க மொத்தம் 4 ஆயிரம் பேருக்கு அனுமதி வழங்கப்பட்டது.
இன்று மாலை விழா தொடங்குவதை முன்னிட்டு கச்சத்தீவு செல்ல ராமேசுவரம் துறைமுகத்துக்கு அதிகாலையிலேயே பக்தர்கள் வருகை தந்தனர். காலை 6 மணியளவில் மாவட்ட அதிகாரிகள் பக்தர்களின் ஆவணங்களை சரிபார்த்து படகுகளில் ஏற அனுமதிக்கப்பட்டனர். கடலில் பயணிக்கும் 4 ஆயிரம் பேருக்கும் பாதுகாப்பு கவச உடை வழங்கப்பட்டது. துறைமுகத்தில் இருந்து இன்று காலை 7 மணியளவில் கச்சத்தீவுக்கு 118 விசைப்படகுகள், நாட்டுப்படகுகளில் 3 ஆயிரத்து 31 ஆண்கள், 780 பெண்கள், 185 சிறுவர்-சிறுமிகள் என 4 ஆயிரம் புறப்பட்டு சென்றனர். கச்சத்தீவு பக்தர்களின் பயணத்தை மாவட்ட வருவாய் அலுவலர் சங்கர நாராயணன், ராமேசுவரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
ஒவ்வொரு படகுகளில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் பக்தர்கள் ஏற்றப்பட்டனர். படகுகளில் ஏறிய அவர்கள் உற்சாகத்துடன் கச்சத்தீவுக்கு புறப்பட்டு சென்றனர். இன்று பிற்பகலுக்குள் அனைத்து படகுகளும் கச்சத்தீவுக்கு சென்றடையும். கச்சத்தீவு திருவிழாவையொட்டி இந்திய கடல் எல்லையில் கடற்படை, கடலோர காவல் படையினர், உளவுத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இதே போல் கச்சத்தீவு மற்றும் இலங்கை கடல் எல்லையிலும் அந்நாட்டு கடற்படை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது.
அதேபோல் கச்சத்தீவு கடற்கரையில் இலங்கை ராணுவம் மற்றும் போலீசாரின் சோதனைக்கு பின்னர் இருநாட்டு பக்தர்களும் திருவிழா நடைபெறும் பகுதிக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள். அங்கு பக்தர்கள் அமருவதற்கும், ஓய்வெடுக்கவும் பிரமாண்ட பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா இன்று மாலை 5 மணிக்கு தொடங்குகிறது. அப்போது அந்தோணியார் உருவம் பதித்த கொடியை நெடுந்தீவு பங்குசந்தை பத்திநாதன், ராமேசுவரம் வேர்க்கோடு பங்குத்தந்தை அசோக் வினோ ஆகியோர் ஏற்றி வைக்கிறார்கள். தொடர்ந்து சிலுவைப் பாதை திருப்பலி நடைபெறுகிறது. இரவு அந்தோணியார் சொரூபத்துடன் மின்னொளியில் அலங்கரிக்கப்பட்ட தேர்ப வனி நடக்கிறது. 2-ம் நாளான நாளை (சனிக்கிழமை) சிறப்பு திருப்பலி நடக்கிறது.
அதனை தொடர்ந்து கொடியிறக்கம் நடக்கிறது. விழா முடிந்த பின் இந்திய பக்தர்கள் நாடு திரும்புகிறார்கள். கச்சத்தீவு திருவிழாவை முன்னிட்டு ராமேசுவரம் கடல் பகுதியில் 5 நாட்களுக்கு மீன்பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஏராளமான படகுகள் கடலுக்கு செல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
கச்சத்தீவு திருவிழாவையொட்டி, உச்சிப்புளியில் உள்ள ஐ.என்.எஸ். பருந்து கடற்படை விமான தளத்தில் இருந்து 2 ஹெலிகாப்டர்களும், டார்னியர் விமானமும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றன.