செய்திகள்
பொதுக்கூட்டத்தில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பேசியபோது எடுத்த படம்.

காவிரி பிரச்சினைக்கு தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகளே காரணம் - பொன்.ராதாகிருஷ்ணன்

Published On 2018-05-17 05:26 GMT   |   Update On 2018-05-17 05:26 GMT
காவிரி பிரச்சினைக்கு தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகளே காரணம் என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டி உள்ளார்.
திருவையாறு:

தஞ்சை மாவட்டம் கல்லணையில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் உழவனின் உரிமை மீட்பு சைக்கிள் பேரணி நேற்று தொடங்கியது. இதில் பா.ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன், மத்திய மந்திரி பொன்.ராதா கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதையடுத்து திருறையாறு தேரடி வீதியில் நேற்று இரவு பொதுக்கூட்டம் நடந்தது. தஞ்சை வடக்குமாவட்ட பொதுச் செயலாளர் பூண்டி வெங்கடேசன் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தை 50 ஆண்டுகள் ஆண்ட கட்சிகளால் எந்த நன்மையும் இல்லை. குறிப்பாக இரண்டு கழகங்களுடைய அதன் தலைவர்கள் அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் காவிரி பிரச்சனை தீர்க்காமல் இருந்துவிட்டனர்.

தமிழ், தமிழன் என்று சொல்லுபவர்களால் இலங்கையில் 1½ லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு பொறுப்பு தி.மு.க.வும், காங்கிரசும்தான். தமிழகத்திற்கு ஒரு சொட்டு தண்ணீர் தரமுடியாது என்று சித்தராமையா சொல்லிவிட்டார். இதை யாரும் கேட்கவில்லை. ஆனால் நரேந்திரமோடிதான் காரணம் என்று சொல்கிறார்கள்.

கர்நாடகாவில் காங்கிரஸ் துரோக ஆட்சி வீழ்ந்து பா.ஜனதா ஆட்சி வந்தால் தமிழகத்துக்கு தண்ணீர் கண்டிப்பாக கிடைக்கும்.

தமிழகத்தில் பா.ஜனதா ஆட்சி வரும். இந்தியாவில் நதிகள் தேசிய மயமாக்கப்படும். அதன் மூலம் தமிழகத்தில் விவசாயம் செழிக்கும்.

இவ்வாறு மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசினார்.

Tags:    

Similar News