செய்திகள்

அரவக்குறிச்சி அருகே விபத்து: அமைச்சரின் பாதுகாப்பு வாகனம் மோதி முதியவர் பலி

Published On 2017-11-10 07:15 GMT   |   Update On 2017-11-10 07:15 GMT
அரவக்குறிச்சி அருகே அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் பாதுகாப்பு வாகனம் மோதி முதியவர் ஒருவர் பலியானர்.
கரூர்:

கரூர் மாவட்டத்தில் இன்று நடந்த பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் போக்குவரத்து துறை அமைச்சரும், கரூர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்துகொண்டார்.

முன்னதாக அரவக்குறிச்சி தொகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு லேப்டாப் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் கலந்துகொள்வதற்காக அரவக்குறிச்சியில் இருந்து பள்ளப்பட்டி நோக்கி அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சென்றார்.

அவருடன் சென்ற பாதுகாப்பு வாகனம் பள்ளப்பட்டி அருகே மோட்டார்சைக்கிளில் சென்ற முதியவர் ஒருவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அந்த முதியவர் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு வந்த அரவக்குறிச்சி போலீசார் பலியான முதியவர் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.

விசாரணையில் அந்த முதியவர் பள்ளப்பட்டி அருகே உள்ள குறிக்காரன் வலசு கிராமத்தை சேர்ந்த லட்சுமணன் (70) என்றும், கூலித்தொழிலாளியான அவர் அதே பகுதியில் உள்ள பெருமாள் கோவிலில் பூசாரியாக உள்ள தனது சகோதரரை பார்க்க சென்றபோது விபத்தில் சிக்கி பலியானதும் தெரியவந்தது.
Tags:    

Similar News