search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எம்.ஆர்.விஜயபாஸ்கர்"

    ரூ.268 கோடியில் நடந்து வரும் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி கட்டுமான பணிகள் அடுத்த ஆண்டிற்குள் முடிவடையும் என தம்பிதுரை மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் தெரிவித்தனர்.
    கரூர்:

    தமிழக முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா கடந்த 2014-ம் ஆண்டு சட்டசபையில் விதி எண் 110-ன் கீழ் கரூரில் அரசு மருத்துவக்கல்லூரி அமைக்கப்படும் என்று அறிவித்தார். அதன்படி கரூர் காந்தி கிராமம் பகுதியில் ரூ.268 கோடி மதிப்பில் அரசு மருத்துவக்கல்லூரியின் கட்டுமான பணிகள் தற்போது நடந்து வருகிறது. இந்த பணிகளை பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் மாவட்ட கலெக்டர் அன்பழகனுடன் சென்று நேற்று ஆய்வு செய்தனர். அப்போது மருத்துவக்கல்லூரி கட்டிட வரைபடத்தை பார்வையிட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உரிய ஆலோசனைகள் வழங்கினர். தற்போது கட்டிடத்திற்கு அஸ்திவாரம் போடப்பட்டு கம்பிகள் கட்டும் பணிகள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

    கரூர் அரசு மருத்துவக் கல்லூரி கட்டுமான பணிகுறித்து பாராளுமன்ற துணை சபாநாயகர் மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஆகியோர் கூறியதாவது:-

    கரூரில் 800 படுக்கைகள் கொண்ட 150 மாணவ- மாணவிகள் பயிலக்கூடிய மருத்துவக்கல்லூரி கட்டுவதற்காக கடந்த மார்ச் மாதம் 1-ந் தேதி அன்று பணிகள் தொடங்கப்பட்டு விரைந்து நடைபெற்று வருகிறது. இப்பணிகள் அடுத்த ஆண்டு (2019) மார்ச் மாதத்திற்குள் முடித்திட ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

    ரூ.60 கோடியே 23 லட்சம் மதிப்பில் 3 லட்சத்து 20 ஆயிரம் சதுரஅடி பரப்பில் வகுப்பறை கட்டிடங்களும், ரூ.145 கோடியே 94 லட்சம் மதிப்பில் மருத்துவமனை கட்டிடங்களும், ரூ.61 கோடியே 83 லட்சம் மதிப்பில் மாணவ- மாணவிகள் தங்கும் விடுதிகளும் என ரூ.268 கோடி மதிப்பில் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த மருத்துவக்கல்லூரி நகரின் மையப்பகுதியான காந்திகிராமத்தில் 17.45 ஏக்கர் நிலப்பரப்பில் நடைபெற்று வருகிறது. இக்கட்டுமான பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு அடுத்த ஆண்டு மாணவர் சேர்க்கை நடைபெறும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    இந்த ஆய்வின் போது கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ. கீதா, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் ரோஸிவெண்ணிலா, மருத்துவ கட்டிடங்கள் செயற்பொறியாளர் மாதய்யன், உதவி செயற்பொறியாளர்கள் தவமணி, சிவக்குமார், மஹாவிஷ்ணு மற்றும் அ.தி.மு.க. மாவட்ட அவை தலைவர் ஏ.ஆர்.காளியப்பன், மாவட்ட துணை செயலாளர் பி.சிவசாமி, நகர செயலாளர் நெடுஞ்செழியன், மாவட்ட இளைஞரணி செயலாளர் வி.சி.கே.ஜெயராஜ், நகர ஜெயலலிதா பேரவை செயலாளர் வி.செல்வராஜ், முன்னாள் மாவட்ட மாணவரணி செயலாளர் என்.தாணேஷ், தொழிற்சங்க செயலாளர் பொரணி கணேசன், கரூர் நகர வங்கி தலைவர் ரேணுகா மோகன்ராஜ் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    முன்னதாக கரூர் நகராட்சி வார்டு எண் 39 மற்றும் 48-க்கு உட்பட்ட தாந்தோன்றிமலை உள்ளிட்ட பகுதிகளில் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் பொதுமக்களிடம் கோரிக்கை மனு பெறும் முகாமில் கலந்து கொண்டனர். அப்போது அந்த பகுதி மக்கள் அடிப்படை வசதிகள் மற்றும் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை நேரடியாக கொடுத்து முறையிட்டனர். இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமை தாங்கினார்.

    நிகழ்ச்சியில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசுகையில், தாந்தோன்றிமலை உள்ளிட்ட பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும். 39-வது வார்டில் குடிநீர், சாலை, கழிவுநீர் வடிகால் உள்ளிட்ட அத்தியாவசிய பணிகள் ரூ.2 கோடியில் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார். இந்த முகாமில் நகராட்சி ஆணையர் அசோக்குமார், வருவாய் கோட்டாட்சியர் சரவணமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். 
    கரூரில் முதன் முதலாக ரூ.39¾ லட்சத்தில் அமைக்கப்பட்ட கணினி மயமாக்கப்பட்ட ஓட்டுனர் தேர்வு தளத்தை போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் திறந்து வைத்தார்.
    கரூர்:

    கரூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் முதன்முதலாக ரூ.39 லட்சத்து 72 ஆயிரம் மதிப்பீட்டில் நவீன தொழில்நுட்ப திறன் மேம்பாட்டுடன் கணினி மயமாக்கப்பட்ட ஓட்டுனர் தேர்வு தளம் அமைக்கப்பட்டுள்ளது. இருசக்கர வாகனம் மற்றும் கார் உள்ளிட்ட கனரக வாகனங்களுக்கும் ஓட்டுனர் உரிமம் (லைசன்ஸ்) கோரி விண்ணப்பிப்பவர்களுக்கு இந்த ஓடுதளத்தில் தான் வாகன ஓட்டும் திறன் சோதிக்கப்படுகிறது. போக்குவரத்து துறை அதிகாரிகள் கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடியே சி.சி.டி.வி. கேமரா மூலமாக சாலை விதிகளை பின்பற்றி அந்த ஓடுதளத்தில் வாகனம் ஓட்டுகின்றனரா? என்பதை கண்காணிக்கின்றனர்.

    அந்த வகையில் கரூர் மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலக வளாகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், புதிதாக அமைக்கப்பட்ட கணினி மயமாக்கப்பட்ட ஓட்டுனர் தேர்வு தளத்தை போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் திறந்து வைத்தார்.

    தமிழக போக்குவரத்துத்துறை அரசு முதன்மை செயலர் மற்றும் போக்குவரத்துத்துறை ஆணையர் சமயமூர்த்தி, மாவட்ட கலெக்டர் அன்பழகன் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோருடன் சென்று கணினி மயமாக்கப்பட்ட ஓட்டுனர் தேர்வு தளத்தை அமைச்சர் பார்வையிட்டு அது செயல்படும் விதம் பற்றி கேட்டறிந்தார். மேலும் ஓட்டுனர் உரிமம் பெறுபவர்களின் வாகனம் ஓட்டும் திறனை கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடியே சோதித்து பார்த்து தேர்வு செய்வது குறித்து அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசியபோது கூறியதாவது:-

    கரூர் மாவட்டத்திலுள்ள எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரி மாணவர்களால் மென்பொருள் மூலம் இந்த ஓட்டுனர் தேர்வுதளம் வடிவமைக்கப்பட்டிருப்பது நமது மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கக்கூடிய ஒன்றாகும். இந்தியாவிலேயே ஆண்டுக்கு 1½ லட்சம் பேர் விபத்து சம்பவங்களில் உயிரிழப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

    இதை வைத்து பார்க்கையில் நாம் பல்வேறு வகையில் முன்னேற்ற பாதையில் சென்றாலும் சாலை விதிகளை கடைபிடிப்பதில் மோசமான நிலையிலேயே இருக்கிறோம் என்பது தெளிவாக தெரிகிறது. அந்த வகையில் தமிழகத்தில் வாகன உற்பத்தி அதிகம் இருப்பதால் 2½ கோடி வாகனங்கள் இயங்குகின்றன. இதனால் விபத்துகளில் சிக்கி ஆண்டுக்கு 16,000 பேர் உயிரிழக்கின்றனர்.

    எனவே நாம் இதனை சிந்தித்து பார்த்து சாலை விதிகளை கடைபிடிப்பது எவ்வளவு அவசியம் என்பதை உணர வேண்டும்.

    தொழில்துறை, கல்விதுறை, போக்குவரத்து துறை என பல்வேறு துறைகளிலும் முன்னேற்றமடைந்து வரும் தமிழகம் பல மாநிலங்களுக்கு முன்னோடியாக உள்ளது. எனவே விபத்துகளை தடுப்பதில் கவனம் செலுத்தி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டதன் விளைவு, கடந்த ஆண்டு விபத்துகளில் உயிரிழப்பு 6 சதவிதம் குறைந்தது. தமிழகத்தில் விபத்துகளால் உயிரிழப்பவர்கள் பெரும்பாலானோர் 15 வயது முதல் 40 வயதுடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் ஆண்கள் தான் அதிகம். எனவே ஹெல்மெட் அணிவது, காரில் செல்லும் போது சீட்பெல்ட் அணிவது, மது அருந்தாமல் வாகனம் ஓட்டுவது உள்ளிட்டவற்றை முறையாக கடைபிடித்தால் சாலை விபத்துகளை தடுக்கலாம். சாலை விபத்தினை குறைக்க அரசாங்கம் சட்டம் இயற்றலாம்.

    ஆனால் தனிமனித ஒழுக்கத்துடன் ஒவ்வொருவரும் செயல்பட்டு விதிகளை பின்பற்றினால் தான் சாலை விபத்தினை குறைக்க முடியும். மாணவர்களிடையே சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வேண்டும் என்பதற்காக புதிய பாடத்திட்டத்தில் கூட அதை சேர்க்க வலியுறுத்துகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் அரசு முதன்மை செயலர் மற்றும் போக்குவரத்து ஆணையருமான சமயமூர்த்தி பேசுகையில், தமிழகத்தில் அதிகப்படியாக வாகனங்கள் உள்ளதால் நாள் ஒன்றுக்கு 7,000 வாகன ஓட்டுனர் உரிமம் வழங்கப்படுகிறது. அதிக வாகனம் உற்பத்தியும், பதிவும் உள்ளதால் சாலை விதிகளை குறைப்பதற்காக உச்சநீதிமன்றம் ஒரு குழுவை அமைத்து கண்காணித்து வருகிறது. சாலை விபத்தினை குறைப்பதற்காக மிக துல்லியமாக கணிக்கக்கூடிய முற்றிலும் கணினி மயமாக்கப்பட்ட ஓட்டுனர் தேர்வுதளம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வாகன ஓட்டுனர்களின் திறமை நன்கு அறியப்பட்ட பிறகே உரிமம் வழங்கப்படும்.

    படிப்படியாக 14 நகரங்களில் கணினி மயமாக்கப்பட்ட தேர்வுதளம் அமைக்க திட்டமிட்டு உள்ளோம் என்று கூறினார். கரூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் கணினி மயமாக்கப்பட்ட ஓட்டுனர் தேர்வு தளத்தில் திறமையை நிரூபித்து ஓட்டுனர் உரிமம் பெற எளிதில் தேர்வாகி விடுவோமா? என்கிற சந்தேக கண்ணோட்டத்தில் பலர் அது தொடங்கப்படுவதற்கு முன்பாகவே உரிமம் பெற்றுவிட வேண்டும் என்கிற முனைப்பில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு இங்கு வந்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகரன், மாவட்ட வருவாய் அதிகாரி சூர்யபிரகாஷ், போக்குவரத்து இணை ஆணையர்கள் சிவக்குமரன், வேலுச்சாமி, துணை ஆணையர் உமாசக்தி, வட்டார போக்குவரத்து அதிகாரி சுப்பிரமணியன், எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரி தாளாளர் ராமகிருஷ்ணன், லாரி உரிமையாளர் சம்மேளன தலைவர் ராஜ், வருவாய் கோட்டாட்சியர் சரவணமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×