search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கரூர் அரசு மருத்துவக்கல்லூரி கட்டுமான பணிகள் அடுத்த ஆண்டு முடிவடையும்: தம்பிதுரை- எம்.ஆர்.விஜயபாஸ்கர் தகவல்
    X

    கரூர் அரசு மருத்துவக்கல்லூரி கட்டுமான பணிகள் அடுத்த ஆண்டு முடிவடையும்: தம்பிதுரை- எம்.ஆர்.விஜயபாஸ்கர் தகவல்

    ரூ.268 கோடியில் நடந்து வரும் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி கட்டுமான பணிகள் அடுத்த ஆண்டிற்குள் முடிவடையும் என தம்பிதுரை மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் தெரிவித்தனர்.
    கரூர்:

    தமிழக முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா கடந்த 2014-ம் ஆண்டு சட்டசபையில் விதி எண் 110-ன் கீழ் கரூரில் அரசு மருத்துவக்கல்லூரி அமைக்கப்படும் என்று அறிவித்தார். அதன்படி கரூர் காந்தி கிராமம் பகுதியில் ரூ.268 கோடி மதிப்பில் அரசு மருத்துவக்கல்லூரியின் கட்டுமான பணிகள் தற்போது நடந்து வருகிறது. இந்த பணிகளை பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் மாவட்ட கலெக்டர் அன்பழகனுடன் சென்று நேற்று ஆய்வு செய்தனர். அப்போது மருத்துவக்கல்லூரி கட்டிட வரைபடத்தை பார்வையிட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உரிய ஆலோசனைகள் வழங்கினர். தற்போது கட்டிடத்திற்கு அஸ்திவாரம் போடப்பட்டு கம்பிகள் கட்டும் பணிகள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

    கரூர் அரசு மருத்துவக் கல்லூரி கட்டுமான பணிகுறித்து பாராளுமன்ற துணை சபாநாயகர் மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஆகியோர் கூறியதாவது:-

    கரூரில் 800 படுக்கைகள் கொண்ட 150 மாணவ- மாணவிகள் பயிலக்கூடிய மருத்துவக்கல்லூரி கட்டுவதற்காக கடந்த மார்ச் மாதம் 1-ந் தேதி அன்று பணிகள் தொடங்கப்பட்டு விரைந்து நடைபெற்று வருகிறது. இப்பணிகள் அடுத்த ஆண்டு (2019) மார்ச் மாதத்திற்குள் முடித்திட ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

    ரூ.60 கோடியே 23 லட்சம் மதிப்பில் 3 லட்சத்து 20 ஆயிரம் சதுரஅடி பரப்பில் வகுப்பறை கட்டிடங்களும், ரூ.145 கோடியே 94 லட்சம் மதிப்பில் மருத்துவமனை கட்டிடங்களும், ரூ.61 கோடியே 83 லட்சம் மதிப்பில் மாணவ- மாணவிகள் தங்கும் விடுதிகளும் என ரூ.268 கோடி மதிப்பில் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த மருத்துவக்கல்லூரி நகரின் மையப்பகுதியான காந்திகிராமத்தில் 17.45 ஏக்கர் நிலப்பரப்பில் நடைபெற்று வருகிறது. இக்கட்டுமான பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு அடுத்த ஆண்டு மாணவர் சேர்க்கை நடைபெறும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    இந்த ஆய்வின் போது கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ. கீதா, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் ரோஸிவெண்ணிலா, மருத்துவ கட்டிடங்கள் செயற்பொறியாளர் மாதய்யன், உதவி செயற்பொறியாளர்கள் தவமணி, சிவக்குமார், மஹாவிஷ்ணு மற்றும் அ.தி.மு.க. மாவட்ட அவை தலைவர் ஏ.ஆர்.காளியப்பன், மாவட்ட துணை செயலாளர் பி.சிவசாமி, நகர செயலாளர் நெடுஞ்செழியன், மாவட்ட இளைஞரணி செயலாளர் வி.சி.கே.ஜெயராஜ், நகர ஜெயலலிதா பேரவை செயலாளர் வி.செல்வராஜ், முன்னாள் மாவட்ட மாணவரணி செயலாளர் என்.தாணேஷ், தொழிற்சங்க செயலாளர் பொரணி கணேசன், கரூர் நகர வங்கி தலைவர் ரேணுகா மோகன்ராஜ் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    முன்னதாக கரூர் நகராட்சி வார்டு எண் 39 மற்றும் 48-க்கு உட்பட்ட தாந்தோன்றிமலை உள்ளிட்ட பகுதிகளில் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் பொதுமக்களிடம் கோரிக்கை மனு பெறும் முகாமில் கலந்து கொண்டனர். அப்போது அந்த பகுதி மக்கள் அடிப்படை வசதிகள் மற்றும் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை நேரடியாக கொடுத்து முறையிட்டனர். இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமை தாங்கினார்.

    நிகழ்ச்சியில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசுகையில், தாந்தோன்றிமலை உள்ளிட்ட பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும். 39-வது வார்டில் குடிநீர், சாலை, கழிவுநீர் வடிகால் உள்ளிட்ட அத்தியாவசிய பணிகள் ரூ.2 கோடியில் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார். இந்த முகாமில் நகராட்சி ஆணையர் அசோக்குமார், வருவாய் கோட்டாட்சியர் சரவணமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். 
    Next Story
    ×