செய்திகள்

கரூரில் 31-ந்தேதி விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்: தொல்.திருமாவளவன் அறிவிப்பு

Published On 2017-10-27 03:26 GMT   |   Update On 2017-10-27 03:26 GMT
பா.ஜ.க.வினரின் வன்முறை வெறியாட்டத்தைக் கண்டிக்கும் வகையில் வரும் 31-ந்தேதி அன்று கரூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சென்னை:

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நன்மதிப்பை சிதைக்கும் வகையில் அண்மையில் பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை தெரிவித்த கருத்து மிகவும் அபாண்டமான அவதூறு ஆகும். அரசியல் ரீதியான விமர்சனங்களை சகித்துக்கொள்ள இயலாமல் நாகரிக வரம்புகளை மீறி அவர் தனிநபர் விமர்சனம் செய்ததால் விடுதலை சிறுத்தைகள் கண்டனத்தை வெளிப்படுத்தினர்.

காவல் நிலையங்களில் அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் மனுக்களை அளித்தனர். ஒரு சில இடங்களில் ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டனர். அந்த வகையில் கடந்த 24-ந்தேதி அன்று தமிழிசையின் தனிநபர் விமர்சனத்தை கண்டிக்கும் வகையில் கரூரில் விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம் நடத்த அறிவிப்பு செய்தனர். அப்போது காவல்துறையினர் அவர்களை மறித்து பிரச்சினை உருவாக்க வந்திருக்கிறீர்களா என கூறி கைது செய்தனர்.

அப்போது தாக்குதல் நடத்திய பா.ஜ.க.வினரை அப்புறப்படுத்துவதற்கு எந்த முனைப்பையும் காட்டவில்லை. பா.ஜ.க. மற்றும் தமிழக காவல்துறையினரின் இந்த வன்முறைபோக்கு ஜனநாயகத்துக்கு எதிரானதாகும். பா.ஜ.க.வினரின் வன்முறை வெறியாட்டத்தைக் கண்டிக்கும் வகையிலும் ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் வகையிலும் வரும் 31-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) அன்று கரூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News