கற்பழிப்பு முயற்சி வழக்கில் இருந்து தப்பிக்க இளம்பெண்ணை மிரட்டி திருமணம் செய்த வாலிபர்
திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த மொன்னவேடு கிராமத்தை சேர்ந்தவர் கல்பனா. இவர் கடந்த 2014-ம் ஆண்டு வேலை முடிந்து கூடப்பாக்கம் அருகே தனியாக வந்தார். அப்போது அவரை போளிவாக்கத்தை சேர்ந்த பிரசாத் கற்பழிக்க முயன்றார்.
இது தொடர்பாக வெள்ளவேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து பிரசாத்தை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை கோர்ட்டில் நடந்து வந்தது.
பிரசாத் கற்பழிப்பு முயற்சி வழக்கில் இருந்து தப்பிப்பதற்காக கல்பனாவை மிரட்டி, அவரது வீட்டிற்கு தெரியாமல் பதிவு திருமணம் செய்து கொண்டார்.
பின்னர் திருமணம் குறித்து கோர்ட்டில் தெரிவித்து கற்பழிப்பு முயற்சி வழக்கை வாபஸ் பெறுவதற்கான ஏற்பாடுகள் செய்து இருந்தார். மேலும் திருமணம் ஆனதை கூறி கல்பனாவை தனியாக அழைத்து அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்தார்.
இந்த நிலையில் கல்பனாவை பெரியபாளையம் கோவிலுக்கு பிரசாத் வரவழைத்தார். அப்போது கற்பழிப்பு முயற்சி வழக்கில் இருந்து தப்பிக்கவே திருமணம் செய்ததாகவும், தற்போது லட்சுமி என்ற பெண்ணை காதலித்து வருவதாகவும் அவரை திருமணம் செய்ய முடிவு செய்து இருப்பதாகவும் தெரிவித்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த கல்பனா, பிரசாத்திடம் வாக்குவாதம் செய்தார். ஆத்திரம் அடைந்த பிரசாத் அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.
ஏமாற்றப்பட்டதை உணர்ந்த கல்பனா இது குறித்து பெரியபாளையம் போலீசில் புகார் செய்தார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-
பட்டாபிராமில் உள்ள கல்லூரியில் படித்த போது உடன்படித்த பிரசாத் என்னை ஒருதலையாக காதலித்தார். கடந்த 2014-ம் ஆண்டு கூடப்பாக்கம் அருகே நடந்து வந்த என்னை அவர் கற்பழிக்க முயன்றார்.
இந்த வழக்கில் இருந்து தப்பிப்பதற்காக பிரசாத் என்னை பல்வேறு வகையில் மிரட்டினார். வீட்டில் உள்ள அம்மா, அக்காளை கொலை செய்து விடுவதாகவும் கூறினார்.
பயந்துபோன என்னை யாருக்கும் தெரியாமல் பிரசாத் பதிவு திருமணம் செய்து கொண்டார். பின்னர் திருமணம் செய்து கொண்டது குறித்து கோர்ட்டிலும் கூற வைத்தார்.
மேலும் திருமண சான்றிதழை எனது வீட்டாரிடம் காட்டி விடுவதாக கூறி என்னை அவரது வீட்டுக்கு அழைத்து வலுக்கட்டாயமாக கற்பழித்தார். அதனை வீடியோவாகவும் எடுத்து வைத்துக் கொண்டார்.
இப்போது பிரசாத், ஆந்திராவில் சட்டப்படிப்பு முடித்து உள்ளேன். கற்பழிப்பு முயற்சி வழக்கை வாபஸ் பெறவே ஏமாற்றி திருமணம் செய்து கொண்டதாக கூறுகிறார். மேலும் லட்சுமி என்பவரை காதலித்து வருவதாகவும் அவரையே திருமணம் செய்வதாகவும் தெரிவித்தார். இதற்கு நான் எதிர்ப்பு தெரிவித்தேன்.
கடந்த 6-ந்தேதி பெரியபாளையம் கோவிலுக்கு என்னை வரவழைத்து உனக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை என்று கூறி கத்தியால் குத்தி கொலை செய்து விடுவதாக மிரட்டினார்.
ஆபாச வீடியோவை இணையதளத்தில் வெளியிட்டு அசிங்கப்படுத்தி விடுவதாகவும் கூறினார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரசாத்தை கைது செய்தனர்.