செய்திகள்

தூத்துக்குடியில் லாரி டிரைவர் வெட்டிக்கொலை: சகோதரர்கள் 3 பேருக்கு வலைவீச்சு

Published On 2017-08-14 09:50 GMT   |   Update On 2017-08-14 09:50 GMT
தூத்துக்குடியில் முன் விரோதம் காரணமாக லாரி டிரைவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சகோதரர்கள் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி:

தூத்துக்குடி தெற்கு சங்கரப்பேரியை சேர்ந்தவர் அங்குச்சாமி என்ற ஈஸ்வரன் (வயது48). லாரி டிரைவரான இவர் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. வழக்கம் போல் நேற்று வேலைக்கு சென்ற அங்குச்சாமி இரவில் வீடு திரும்பவில்லை.

இந்நிலையில் சங்கரப்பேரியில் இருந்து பண்டாரப்பட்டி செல்லும் சாலையில் உள்ள காட்டுப்பகுதியில் வெட்டுக்காயங்களுடன் ஒருவர் பிணமாக கிடப்பதை இன்று காலை அவ்வழியாக சென்றவர்கள் பார்த்து சிப்காட் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

உடனே தூத்துக்குடி ரூரல் துணை போலீஸ் சூப்பிரண்டு சீமைச்சாமி, சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹரிகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது பிணமாக கிடந்தவர் லாரி டிரைவர் அங்குச்சாமி என்பதும், அவரை யாரோ மர்ம நபர்கள் வெட்டிக்கொலை செய்ததும் தெரியவந்தது.

இதையடுத்து அவரது உடலை அங்கிருந்து மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். அங்குச்சாமியை கொன்றது யார்? எதற்காக கொன்றார்கள்? என்பதை துப்பு துலக்குவதற்காக இன்ஸ்பெக்டர் ஹரிகரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அங்குச்சாமியின் வீட்டின் முன் அதே பகுதியில் வசித்து வரும் முனியசாமி (53) என்ற லாரி டிரைவர் குடிபோதையில் படுத்திருந்தார். அவரை அங்குசாமி கண்டித்துள்ளார். இதையடுத்து அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது.

இது தொடர்பாக ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக நேற்று மதியம் அவர்கள் இருவருக்கிடையே மோதல் ஏற்பட்டது. அதில் காயம் அடைந்த முனியசாமி தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து முனியசாமியின் குடும்பத்தினருக்கு அங்குசாமி மீது ஆத்திரம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்றிரவு தனியாக வந்த அங்குச்சாமி மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். முனியசாமியின் குடும்பத்தினரே அங்குச்சாமியை கொலை செய்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். இதையடுத்து முனியசாமியின் மகன்கள் மாரிராஜ் (32), கனிராஜ் (30), வேல்ராஜ் (25) ஆகிய 3 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News