பெரம்பலூரில் சோகம்: விபத்தில் கணவர் இறந்த மறுநாள் மனைவியும் சாவு
குன்னம்:
பெரம்பலூர் 15-வது வார்டுக்கு உட்பட்ட கம்பன் தெருவை சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி பாப்பாத்தி (வயது 40). முருகேசன் பெரம்பலூரில் உள்ள சாய் பாபா கோவில் அருகே பூ வியாபாரம் செய்து வந்தார்.
கடந்த 22-ந்தேதி முருகேசன் வீட்டிற்கு சென்ற போது நடந்த சாலை விபத்தில் அவர் பலியானார். இதனால் பாப்பாத்தி மன வேதனை அடைந்தார். மேலும் யாருடனும் பேசாமல் மவுனமாகவும் இருந்து வந்தார். தனக்கு வாழ பிடிக்கவில்லை என்றும் கூறி வந்தார்.
இந் நிலையில் நேற்று இரவு பாப்பாத்தி வீட்டில் தூங்கி போது திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. வலியால் அலறித்துடித்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைகாக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து பெரம்பலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
விபத்தில் கணவர் இறந்த மறுநாளே சோகத்தில் மனைவியும் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.