செய்திகள்

திடீர் பருவநிலை மாற்றத்தால் வேலூரில் 103 டிகிரி வெயில் கொளுத்தியது: பொதுமக்கள் தவிப்பு

Published On 2017-07-23 16:18 GMT   |   Update On 2017-07-23 16:18 GMT
வேலூரில் 103 டிகிரி வெயில் கொளுத்தியதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

வேலூர்:

வேலூர் மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் கடந்த மார்ச் மாதம் முதலே தொடங்கிவிட்டது. நாள்தோறும் சராசரியாக 100 டிகிரி வெயில் சுட்டெரித்ததால் குழந்தைகள் முதல் பெரியோர் வரை பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

அக்னி நட்சத்திர காலத்தில் வெயிலின் அளவு வழக்கத்தைவிட அதிகமாக பதிவானது. இந்த ஆண்டு அதிகபட்சமாக 111 டிகிரி வெயில் அளவு பதிவானது.

இந்த ஆண்டு கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் அதனை சமாளிக்க மழை வருமா? என்ற ஏக்கத்தில் மக்கள் இருந்தனர். மார்ச் மாதம் தொடங்கி ஜூன் மாதம் வரை கோடையின் உக்கிரம் அதிகமாக இருந்த நிலையில் வெப்பச் சலனத்தின் காரணமாக சில நாட்களில் திடீர் மழை பெய்தது. இதனால் கோடையின் தாக்கம் வெகுவாக குறைய தொடங்கியது.

இதற்கிடையில் தற்போது ஏற்பட்ட பருவ நிலை மாற்றத்தால் கடந்த 4 நாட்களாக வெயிலின் தாக்கம் சற்று அதிகமாக உள்ளது.

வேலூரில் நேற்று முன்தினம் 101 டிகிரி வெயில் சுட்டெரித்தது. நேற்று அனல் காற்றுடன் வெயில் தாக்கம் அதிகமாக இருந்தது. 103 டிகிரி வெயில் கொளுத்தியது. இந்த திடீர் பருவநிலை மாற்றத்தால் பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாயினர்.

இன்றும் வெயிலின் தாக்கம் அதிகளவில் உள்ளது.

திடீரென மாறும் பருவநிலைக்கு ஏற்ப நம்முடைய உடலும் மாறுவதால் காய்ச்சல், இருமல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

வெயில் அதிகமாக இருக்கும் நேரத்தில் வெளியில் நடமாடுவதை குறைத்துக் கொள்ள வேண்டும். என்று டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

Tags:    

Similar News