காட்பாடி அருகே மதுக்கடையை அகற்ற கோரி கலெக்டர் ஆபீசில் மனு அளித்த குழந்தைகள்
வேலூர்:
காட்பாடி வள்ளிமலை அடுத்த மேல்பட்டி பெரிய சீசக்குப்பம் கிராமத்தில் அரசு அதிகாரிகள் புதிய கட்டிடத்தை கட்டினர். அரசு அலுவலகம் வர போகிறது என்று அப்பகுதி மக்கள் நினைத்திருந்தனர்.
இந்த நிலையில், நேற்று திடீரென புதிய டாஸ்மாக் கடை அந்த கட்டிடத்தில் திறக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த அந்த கிராம பெண்கள் குழந்தைகளுடன் வேலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று வந்து மனு அளித்தனர்.
அந்த மனுவில்:- எங்கள் கிராமத்தில் 250-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கிறார்கள். அதிகாரிகள் திடீரென மதுக்கடையை திறந்துள்ளனர். மதுக்கடை திறக்கப்பட்ட முதல் நாளே தொழிலாளி ஒருவர் குடித்து விட்டு வந்து மனைவியை தாக்கினார்.
இதில் அந்த பெண் காயமடைந்தார். மேலும் பள்ளி, கோவில் மற்றும் குடியிருப்பு பகுதிகள் நிறைய உள்ளது. டாஸ்மாக் கடையால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை.
குடிமகன்கள் பெண்களிடம் கேலி, கிண்டல் போன்ற அருவருக்கத்தக்க செயல்களில் ஈடுபடுகிறார்கள். எனவே, டாஸ்மாக் கடையை எங்கள் பகுதியில் இருந்து அகற்ற வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.