செய்திகள்

டர்பன் டெஸ்ட்: இலங்கைக்கு 304 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது தென்ஆப்பிரிக்கா

Published On 2019-02-15 12:35 GMT   |   Update On 2019-02-15 12:35 GMT
டர்பனில் நடைபெற்று வரும் முதல் டெஸ்டில் இலங்கையின் வெற்றிக்கு 304 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது தென்ஆப்பிரிக்கா #SAvSL
தென்ஆப்பிரிக்கா - இலங்கை இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டர்பனில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச்சு தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்கா குயின்டான் டி காக்கின் (80) சிறப்பான ஆட்டத்தால் முதல் இன்னிங்சில் 235 ரன்கள் சேர்த்தது. இலங்கை அணி தரப்பில் விஷ்வா பெர்னாண்டோ 4 விக்கெட்டும், ரஜிதா 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

பின்னர் இலங்கை அணி முதல் இன்னிங்சில் விளையாடியது. ஸ்டெயின் (4 விக்கெட்) பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் இலங்கை 191 ரன்னில் சுருண்டது.

44 ரன்கள் முன்னிலையுடன் தென்ஆப்பிரிக்கா 2-வது இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் அந்த அணி 4 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் எடுத்திருந்தது. டு பிளிசிஸ் 25 ரன்னுடனும், டி காக் 15 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் அடித்தனர். டி காக் 55 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். டு பிளிசிஸ் 90 ரன்னில் ஆட்டமிழந்து சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். டி காக் ஆட்டமிழக்கும்போது தென்ஆப்பிரிக்கா 191 ரன்கள் எடுத்திருந்தது.


5 விக்கெட் வீழ்த்திய அறிமுக வீரர் அம்பல்டெனியா

கடைசி ஐந்து வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க தென்ஆப்பிரிக்கா மேலும் 68 ரன்கள் அடிப்பதற்குள் 6 விக்கெட்டை இழந்து 259-ல் ஆல்அவுட் ஆனது. முதல் இன்னிங்சில் 44 ரன்கள் முன்னிலைப் பெற்றிருந்ததால், மொத்தமாக இலங்கையை விட 303 ரன்கள் முன்னிலைப் பெற்றது.

இதனால் இலங்கையின் வெற்றிக்கு 304 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது தென்ஆப்பிரிக்கா. 2-வது இன்னிங்சில் இலங்கை அணியின் அறிமுக சுழற்பந்து வீச்சாளர் அம்பல்டெனியா 5 விக்கெட்டுக்கள் வீழ்த்தி அசத்தினார்.

304 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை பேட்டிங் செய்து வருகிறது.
Tags:    

Similar News