செய்திகள்
தவான், ரோகித், தோனி அசத்தல் பேட்டிங்: இலங்கை அணிக்கு 322 ரன்கள் இலக்கு
சாம்பியன் டிராபி தொடரில் இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஷிகர் தவான், ரோகித் சர்மா, தோனி ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் இந்தியா 321 ரன்கள் குவித்துள்ளது.
லண்டன்:
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் 8-வது ஆட்டம் லண்டன் கெனிங்டன் ஓவல் மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. முக்கியமான இந்த லீக் ஆட்டத்தில், குரூப் பி பிரிவில் உள்ள இந்தியா-இலங்கை அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் மேத்யூஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
பின்னர் விளையாடிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 321 ரன்கள் குவித்தது. ஷிகார் தவான் சிறப்பான விளையாடி சதம் விளாசினார்.
தொடக்க வீரர்களாக களமிறங்கிய ரோகித் சர்மா, ஷிகர் தவான் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 138 ரன்கள் எடுத்தது. சிறப்பாக விளையாடி 78 குவித்து ரோகித் சர்மா ஆட்டமிழந்தார். கேப்டன் கோலி டக் அவுட் ஆனார். யுவராஜ் 7 ரன்களில் போல்டாகி பெவிலியன் திரும்பினார்.
பின்னர், ஷிகார் தவானுடன், தோனி ஜோடி சேர்ந்தார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ஷிகார் தவான் சதம் அடித்தார். 128 பந்துகளில் 125 ரன்கள் எடுத்த போது ஷிகர் தவான் ஆட்டமிழந்தார். வந்த வேகத்தில் சிக்ஸர் விளாசிய பாண்டியா 5 பந்துகளில் 9 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
தொடர்ந்து சிறப்பாக விளையாடிய தோனி 46 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருப்பினும், 52 பந்துகளில் 63 ரன்கள் எடுத்த நிலையில் தோனி ஆட்டமிழந்தார். கடைசியில் ஜாதவ் 13 பந்துகளில் 25 ரன்கள் அடிக்க இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 50 ஓவர்கள் முடிவில் 321 ரன்கள் குவித்தது.
இலங்கை அணி தரப்பில் மலிங்கா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர். இருப்பினும் மலிங்கா, லக்மல், பிரதீப் ஆகியோ தலா 70 ரன்களுக்கு மேல் வாரி வழங்கினர். இதனையடுத்து 322 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் இலங்கை அணி விளையாடி வருகிறது.