இந்தியா

கேரளாவில் பாரதிய ஜனதாவுக்கு வாக்கு 22 சதவீதமாக அதிகரிக்கும்- தலைவர்கள் நம்பிக்கை

Published On 2024-05-08 08:15 GMT   |   Update On 2024-05-08 08:15 GMT
  • கேரள மாநில மக்களவை தேர்தலில் மும்முனை போட்டி நிலவியது.
  • கட்சி தலைவர்களின் இந்த கணக்கீடு கேரள மாநில பாரதிய ஜனதா கட்சியினரின் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலத்தில் உள்ள 20 மக்களவை தொகுதிகளுக்கு கடந்த மாதம் 26-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி, கம்யூனிஸ்டு கட்சிகள் அடங்கிய இடது சாரி ஜனநாயக முன்னணி, பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர்.

இதனால் கேரள மாநில மக்களவை தேர்தலில் மும்முனை போட்டி நிலவியது. அதிலும் காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சிகள் நேரடியாக களம் கண்ட தொகுதிகளில் அந்த கட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவியது.

ஏற்கனவே 19 தொகுதிகள் தங்களது கூட்டணியின் வசம் உள்ள செல்வாக்குடன் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் களம் கண்டது. பாரதிய ஜனதாவோ முதன்முறையாக வெற்றி பெற்று கேரளாவில் கால்பதித்து விட வேண்டும் என்ற முனைப்பில் களமிறங்கியது.

மாநிலத்தில் ஆளும் கட்சியாக இருக்கும் கம்யூனிஸ்டு கட்சி, தேசிய அளவில் கூட்டணியாக இருக்கும் காங்கிரஸ் கட்சியை எதிர்த்து களம் கண்டது. பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும் என்ற முனைப்பில் இந்த 3 கட்சிகளும் போட்டியிட்டன.

ஏற்கனவே 19 தொகுதிகளை தன் வசம் வைத்துள்ள காங்கிரஸ் மற்றும் மாநிலத்தின் ஆளும் கட்சி கம்யூனிஸ்டு ஆகிய கட்சிகளை எதிர்த்து களம் கண்ட பாரதிய ஜனதா, அந்த கட்சிகளின் வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிட்டு வெற்றிபெறும் வகையில் பிரபலங்களை வேட்பாளர்களாக களமிறக்கியது.

இதன் காரணமாக கேரள மாநில மக்களவை தேர்தலில் காங்கிரஸ், பாரதிய ஜனதா மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவியது. இந்நிலையில் கேரளாவில் எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறுவோம்? கடந்த தேர்தலை விட தற்போது எத்தனை வாக்குகள் அதிகமாக கிடைக்கும்? வாக்கு சதவீதம் எவ்வளவு உயரும்? உள்ளிட்ட விவரங்களை பாரதிய ஜனதா கணக்கிட்டு உள்ளது.

அந்த விவரங்கள் தேர்தல ஆய்வு கூட்டத்தில் கணக்கிடப்பட்டு இருக்கிறது. மேலும் தங்களின் கணக்கீடு விவரங்களை பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர். அவர்கள் கூறியிருப்பதாவது:-

கேரளா மாநிலத்தில் இதற்கு முன்பு நடந்த மக்களவை தேர்தலில் பாரதிய ஜனதாவுக்கு 31.80 வாக்குகள் கிடைத்தன. இந்த முறை 41.44 லட்சம் வாக்குகள் கிடைக்கும். கேரளாவில் பாரதிய ஜனதாவின் வாக்கு சதவீதம் 22 சதவீதமாக அதிகரிக்கும்

திருவனந்தபுரம் தொகுதியில் மத்திய மந்திரி ராஜீவ் சந்திரசேகர், திருச்சூர் தொகுதியில் நடிகர் சுரேஷ் கோபி ஆகியோர் 4 லட்சம் வாக்குகள் பெற்று வெற்றி பெறுவார்கள். மத்திய மந்திரி முரளீதரன் போட்டியிட்ட அட்டிங்கல் தொகுதியிலும், ஏ.கே அந்தோணியின் மகன் அனில் ஆன்டனி போட்டியிட்ட பத்தினம்திட்டா தொகுதியிலும் பாரதிய ஜனதா வெற்றிபெறும்.

அதேபோல் ஆலப்புழா தொகுதியில் போட்டியிடும் ஷோபா சுரேந்திரனும் வெற்றி பெறுவார். கேரளாவில் மொத்தம் 5 தொகுதிகளில் பாரதிய ஜனதா வெற்றி பெறும். திருவனந்தபுரத்தில் கடந்த முறை 3,16,000 வாக்குகள் பெற்றிருந்தோம். இந்த முறை 4 லட்சம் வாக்குகளை பெறுவோம். நெய்யாற்றின்கரை தொகுதியில் பாரதிய ஜனதா இரண்டாவது இடத்தை பிடிக்கும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

கட்சி தலைவர்களின் இந்த கணக்கீடு கேரள மாநில பாரதிய ஜனதா கட்சியினரின் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Tags:    

Similar News