செய்திகள்
ஏர் இந்தியா நிறுவனம் மும்மடங்கு கட்டணம் வசூலிப்பதாக சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ
சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ ஒன்றில் ஏர் இந்தியா விமானத்தில் பயணிக்க மும்மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ ஒன்றில் வழக்கத்தை விட மும்மடங்கு கட்டணம் வசூலித்ததற்கு விமான சேவை வழங்கும் நிறுவன அதிகாரியிடம் பயணிகள் வாக்குவாதம் செய்யும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மேலும் இந்த பயணிகள் சமூக இடைவெளியின்றி பயணிக்க வைத்ததாகவும் பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
வைரல் வீடியோவை ஆய்வு செய்ததில் அந்த வீடியோ இந்திய விமான சேவை வழங்கும் விமானத்தில் எடுக்கப்படவில்லை என தெரியவந்துள்ளது. உண்மையில் இது பாகிஸ்தான் நாட்டு விமான சேவை விமானத்தில் எடுக்கப்பட்டதாகும். வீடியோவை உற்று பார்த்தால், அதன் இருக்கை கவர்கள் ஏர் இந்தியா விமானத்தில் இருப்பதை விட வித்தியாசமாக இருப்பதை பார்க்க முடியும்.
எனினும், வீடியோ இந்திய விமானத்தில் எடுக்கப்பட்டதாக நம்பி பலர் இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். வைரல் வீடியோ பாகிஸ்தான் நாட்டு விமானத்தில் எடுக்கப்பட்டது என ஏர் இந்தியா செய்தி தொடர்பாளர் தனஞ்செய் குமார் விளக்கம் அளித்திருக்கிறார்.
இதுதவிர ட்விட்டரில் ஏர் இந்தியா கணக்கை டேக் செய்து வீடியோ பற்றி புகார் அளித்தவருக்கும், ஏர் இந்தியா ட்விட்டர் கணக்கில் இருந்து பதில் அளிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் வைரல் வீடியோ ஏர் இந்தியா விமானத்தில் எடுக்கப்படவில்லை என உறுதியாகிவிட்டது.
போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.