செய்திகள்
காஷ்மீரை பிரிக்கும் மசோதா ஜனநாயக படுகொலை - வைகோ
காஷ்மீரை பிரிக்கும் மசோதா ஜனநாயக படுகொலை. இந்த மசோதாவை நான் எதிர்க்கிறேன் என்று வைகோ கூறியுள்ளார்.
புதுடெல்லி:
காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வது என மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இதனை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று மாநிலங்களவையில் அறிவித்தார்.
காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து தொடர்பான மசோதாவை தாக்கல் செய்ய எதிர்ப்பு தெரிவித்து மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.
இதுதொடர்பாக மாநிலங்களவையில் வைகோ பேசும்போது கூறியதாவது:-
ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து காஷ்மீர் மக்களின் உணர்வுகளோடு விளையாடி விட்டனர். கூடுதல் இராணுவ வீரர்கள் அங்கு நிறுத்தப்பட்டபோது, நான் கவலைப்பட்டேன். கொசோவோ, கிழக்கு திமோர் மற்றும் தெற்கு சூடானாக காஷ்மீர் ஆகக்கூடாது. காஷ்மீர் மக்களுக்கு நேரு கொடுத்த வாக்குறுதியை மீறுகிறது பாஜக. காஷ்மீரை காக்க கார்கில் போரில் தமிழ் இளைஞர்கள் உயிர்நீத்தனர்.
காஷ்மீர் விவகாரத்தில் ஐ.நா கவுன்சில் தலையிடக் கூடும். காஷ்மீரை பிரிக்கும் மசோதா ஜனநாயக படுகொலை. காஷ்மீர் விவகாரத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப், சூட்சமமாக காய் நகர்த்துகிறார்.
இந்த மசோதாவை நான் எதிர்க்கிறேன். இது அவமானம், அவமானம், அவமானம் ... இது ஜனநாயகத்தின் படுகொலை என கூறினார்.