என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜம்மு காஷ்மீர்"

    • ஜம்மு காஷ்மீரின் சுற்றுலாத் தலமான பஹல்காம் என்ற இடத்தில் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர்.
    • ஏப்ரல் 22-ம் தேதி நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

    ஸ்ரீநகர்:

    அது ஒரு பரபரப்பான ரெயில் நிலையம். ரெயில் எப்போது புறப்படும் என அதில் உட்கார்ந்திருக்கும் பயணிகளும், சீக்கிரம் ரெயிலைப் பிடிக்க வேண்டுமே என ஓடி வரும் பயணிகளுமாக அந்த ரெயில் நிலையம் பரபரப்புடன் காணப்பட்டது.

    எஸ் 4 கோச்சில் அமர்ந்திருந்த கேசவனை வழியனுப்ப வந்திருந்தார் சுதர்சன். வண்டி புறப்பட 20 நிமிடங்கள் இருந்ததால் இருவரும் அங்கிருந்த கேண்டீனில் டீ குடிக்கச் சென்றனர். அங்கிருந்த இருக்கையில் அமர்ந்த அவர்கள் நாட்டு நடப்புகளைப் பற்றி பேசிக் கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கு வைக்கப்பட்டிருந்த பத்திரிகை விற்கும் கடையில் காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் என்ற செய்தியைக் கண்டு வருத்தப்பட்டனர்.

    யார் ஆட்சிக்கு வந்தாலும் இந்த பிரச்சனை தீரமாட்டேங்குதே என அங்கலாய்த்தார் கேசவன்.

    அப்போது, மத்திய அரசு ஜம்மு காஷ்மீரில் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் அப்பகுதி மக்களை நிம்மதி அடையச் செய்துள்ளது. ஆனாலும் கடந்த ஏப்ரலில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவம் இந்தியா மட்டுமின்றி உலகையே அதிர்ச்ச்யில் ஆழ்த்தியது என வேதனையுடன் தெரிவித்தார் சுதர்சன்.

    அவர் கூறியதன் சாராம்சம் இதுதான்:

    ஜம்மு காஷ்மீரின் முக்கிய சுற்றுலாத் தலமான பஹல்காம் என்ற இடத்தில் ரிசார்ட் பகுதி அருகே பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகளைக் குறி வைத்து திடீர் தாக்குதல் நடத்தினார்கள்.

    ஏப்ரல் 22-ம் தேதி நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் 2 வெளிநாட்டவர் உள்பட 26 சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட 26 பேரும் ஆண்களே ஆவர்.

    இந்த கொடிய தாக்குதலுக்கு பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பா நிழல் அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் ப்ரண்ட் (TRF) பொறுப்பேற்றது.


    இந்தக் கொடிய தாக்குதலுக்கு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் மந்திரிகள் உள்பட பலர் கண்டனம் தெரிவித்தனர். மேலும் அமெரிக்கா, சீனா, ரஷியா உள்ளிட்ட பல்வேறு நாட்டு தலைவர்களும் கடும் கண்டனங்களைத் தெரிவித்தனர்.

    பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக இரு வாரங்களுக்குப் பிறகு மே 7 அன்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை மேற்கொண்டது. இதன்மூலம் பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் முகாம்களை அழித்தது என தெரிவித்தார்.


    இதைக் கேட்ட கேசவன், யார் ஆட்சியில் இருந்தாலும் குடிமக்களுக்கு நிம்மதியான வாழ்க்கை வாழ வழிவகை செய்ய வேண்டும் என்பதையே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட வேண்டும் என்றார் கேசவன்.

    அப்போது ரெயில் புறப்படுவதற்கான சிக்னல் விழுந்ததால் கேசவன் தனது சீட்டில் சென்று அமர்ந்தார். ரெயில் புறப்பட்டுச் சென்றதும் கேசவனை வழியனுப்பிய சந்தோஷத்தில் வீட்டுக்கு திரும்பினார் சுதர்சன்.

    • செனாப் ரெயில்வே பாலம் காஷ்மீர் பள்ளத்தாக்கை நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கிறது.
    • சுமார் 15 ஆண்டாகக் கட்டப்பட்ட இந்தப் பாலம் பிரான்சின் ஈபிள் கோபுரத்தைவிட உயரமானது.

    ஸ்ரீநகர்:

    வரவிருக்கும் அரையாண்டு தேர்வுக்காக லைப்ரரிக்கு சென்று குறிப்புகள் எடுத்து படித்துக் கொண்டிருந்தான் சுந்தர். அப்போது அங்கு வந்த சுமதி டீச்சரைப் பார்த்தான். உடனே, டீச்சர் எப்படி இருக்கீங்க? என்றான் சுந்தர்.

    நான் நல்லா இருக்கேன்டா. நீ எப்படிடா இருக்கே? எங்கே இந்தப் பக்கம்? என பதில் கூறினார் சுமதி டீச்சர்.

    நான் இங்க அடிக்கடி வருவேன் டீச்சர். பேப்பர் மட்டுமின்றி பல புத்தகங்களை எடுத்துப் படிப்பேன். பொது அறிவையும் தெரிஞ்சு வச்சுக்கலாம்னு வந்தேன் என்றான்.

    அப்படியா? அப்ப உன்னோட பொது அறிவை சோதிச்சுர வேண்டியதுதான் என்ற டீச்சர், உலகிலேயே உயரமான

    ரெயில்வே பாலம் எங்க இருக்கு சொல்லு பார்ப்போம்? என கேட்டார். பதில் தெரியாமல் சுந்தர் முழித்தான்.

    இதைக் கண்ட டீச்சர், தெரியலைன்னா பரவாயில்லை. நான் சொல்றேன் கேட்டுத் தெரிஞ்சுக்கோ. உலகிலேயே உயரமான ரெயில்வே பாலம் இந்தியாவில் தான் இருக்கு தெரியுமா? என புதிர் போட்டார்.

    என்ன நம்ம இந்தியாவிலா? எங்க டீச்சர் இருக்கு, அதைப் பத்தி சொல்லுங்களேன் என ஆவலோடு கேட்டான்.

    சுமதி டீச்சர் சொன்ன விஷயங்களின் சுருக்கம் இதுதான்:


    ஜம்மு காஷ்மீரில் உள்ள செனாப் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டது ரெயில்வே பாலம். இந்தப் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி ஜூன் 6-ம் தேதி திறந்து வைத்தார். அதன்பின், பிரதமர் மோடி அந்தப் பாலத்தின் மீது தேசியக் கொடியைப் பிடித்தபடி நடந்து சென்றார்.

    இது உலகின் மிக உயரமான ரெயில்வே இரும்பு வளைவு பாலம் என்ற சிறப்பைப் பெற்றது.

    இது உதம்பூர்-ஸ்ரீநகர்-பாரமுல்லா ரெயில் பாதை திட்டத்தின் முக்கியப் பகுதியாகும்..

    இதன்மூலம் காஷ்மீர் பள்ளத்தாக்கு நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கப்படுகிறது.

    சுமார் 15 ஆண்டாகக் கட்டப்பட்ட இந்தப் பாலம் பிரான்சின் ஈபிள் கோபுரத்தைவிட உயரமானது.


    நில அதிர்வு மற்றும் பலத்த காற்று ஆகியவற்றை தாங்கும் வகையில் இந்தப் பாலம் வடிவமைக்கப்பட்டது என கூறி முடித்தார் சுமதி டீச்சர்.

    டீச்சர் சொன்னதைக் கேட்ட சுந்தர், ரொம்ப சந்தோஷம் டீச்சர். இவ்வளவு நாள் இது தெரியாமல் போச்சே. இந்த விஷயத்தை, நமது இந்தியாவின் பெருமையை என் பிரெண்ட்ஸ் கிட்டயும் கண்டிப்பா சொல்லப்போறேன் என்றபடி. அங்கிருந்து வீடு நோக்கி புறப்பட்டான் சுந்தர்.

    • ஜம்மு-காஷ்மீர் காவல்துறையின் மாநில புலனாய்வு அமைப்பு சோதனை நடத்தியது.
    • காஷ்மீர் டைம்ஸ், ஜம்மு-காஷ்மீரின் பழமையான ஆங்கில நாளிதழாகும்.

    ஜம்முவில் உள்ள பழமை வாய்ந்த 'காஷ்மீர் டைம்ஸ்' பத்திரிகை அலுவலகத்தில் ஜம்மு-காஷ்மீர் காவல்துறையின் மாநில புலனாய்வு அமைப்பு (SIA) குழு இன்று சோதனை நடத்தியது.

    சமீபத்திய டெல்லி பயங்கரவாத தாக்குதல் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக இந்தச் சோதனை நடத்தப்பட்டதாகவும், தேசத்தின் நலன்களுக்கு விரோதமான நடவடிக்கைகளை ஊக்குவித்ததற்காகப் பத்திரிகையின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    அலுவலகத்தில் இருந்து ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் சாதனங்கள் சில கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதே நேரம் அங்கே ஏ.கே ரக துப்பாக்கி குண்டுகள், மற்றும் கையெறி குண்டு பாகங்கள் உள்ளிட்ட பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இந்த சோதனை பத்திரிகை சுதந்திரத்தை ஒடுக்கும் செயல் என காஷ்மீர் டைம்ஸ் ஆசிரியர்கள் கண்டனம் தெரிவித்துள்ளது.

    பத்திரிகை ஆசிரியர்களான அனுராதா பாசின் மற்றும் பிரபோத் ஆகியோர் இந்தச் சோதனை, "அரசாங்கத்தை விமர்சிப்பது அரசுக்கு விரோதமாக இருப்பதாக பொருள் அல்ல. எங்களுக்கு எதிராக சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் மிரட்டுவதற்கும், சட்டப் பூர்வ அங்கீகாரத்தைப் பறிப்பதற்கும், இறுதியில் அமைதியாக்குவதற்கும் வடிவமைக்கப்பட்டுள்ளன. நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம்" என்று கூறியுள்ளனர்.

    1954 ஆம் ஆண்டு மூத்த பத்திரிகையாளர் வேத் பாசினால் தொடங்கப்பட்ட காஷ்மீர் டைம்ஸ், ஜம்மு-காஷ்மீரின் பழமையான ஆங்கில நாளிதழாகும். 2023 முதல் அச்சுப் பதிப்பை நிறுத்தி இணையத்தில் மட்டும் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

    • அரியானாவில் பறிமுதல் செய்த வெடிபொருட்களின் மாதிரிகளை பிரித்து ஆய்வு செய்த போது வெடிவிபத்து ஏற்பட்டது.
    • மத்திய அரசு இதற்கு பொறுப்பேற்காமல் தப்பிக்க முடியாது.

    ஜம்மு காஷ்மீரின் நவ்காம் காவல் நிலையத்தில், அரியானாவில் பறிமுதல் செய்த வெடிபொருட்களின் மாதிரிகளை பிரித்து ஆய்வு செய்த போது வெடிவிபத்து ஏற்பட்டது.

    வெடிவிபத்தில் தடயவியல் குழு, போலீசார் என 9 பேர் உயிரிழந்துள்ளனர். காவல் நிலையத்தில் இருந்த 20 பேர் படுகாயம் அடைந்தனர். ஆபத்தான நிலையில் 5 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்நிலையில் இதுகுறித்து காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வெளியிட்டுள்ள எக்ஸ் பதவில், ஜம்மு காஷ்மீரின் நவ்காமில் உள்ள காவல் நிலையத்தில் நடந்த குண்டுவெடிப்பில் 9 விலைமதிப்பற்ற உயிர்கள் பலியாகியுள்ளன, 24 பேர் காயமடைந்துள்ளனர் என்பது மிகவும் வருத்தமளிக்கிறது.

    தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    காயமடைந்தவர்களுக்கு உடனடி மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட வேண்டும், பாதிக்கப்பட்டவர்களுக்கு போதுமான இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.

    டெல்லி செங்கோட்டை அருகே நடந்த கோழைத்தனமான கார் குண்டுவெடிப்பு பயங்கரவாத தாக்குதலுக்கு சில நாட்களுக்குப் பிறகு இந்த சம்பவம் நடந்துள்ளது.

    மேலும் இது உளவுத்துறை மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு வழிமுறைகளை வலுப்படுத்த மத்திய அரசுக்கு ஒரு எச்சரிக்கை மணியாகும். மத்திய அரசு இதற்கு பொறுப்பேற்காமல் தப்பிக்க முடியாது.

    பயங்கரவாதத்தின் கொடுமைக்கு எதிராக இந்திய தேசிய காங்கிரஸ் தேசத்துடன் ஒற்றுமையாக நிற்கிறது.

    சமீபத்திய செங்கோட்டை பயங்கரவாத தாக்குதை முன்வைத்து, வெளிப்புற சக்திகளின் ஆதரவுடன் பயங்கரவாதத்தின் வளர்ந்து வரும் அச்சுறுத்தலைப் பற்றி விவாதிக்க அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டிய அவசியம் உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.  

    • வெடிபொருட்களின் மாதிரிகளை பிரித்து ஆய்வு செய்த போது விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
    • வெடி விபத்தில் காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஏராளமான வாகனங்களும் சேதம் அடைந்தன.

    ஜம்மு காஷ்மீரின் நவ்காம் காவல் நிலையத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

    அரியானாவில் பறிமுதல் செய்த வெடிபொருட்களின் மாதிரிகளை பிரித்து ஆய்வு செய்த போது விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

    வெடிவிபத்தில் தடயவியல் குழு, போலீசார் என 9 பேர் உயிரிழந்துள்ளனர். காவல் நிலையத்தில் இருந்த 20 பேர் படுகாயம் அடைந்தனர். ஆபத்தான நிலையில் 5 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் வெடி விபத்தில் காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஏராளமான வாகனங்களும் சேதம் அடைந்தன. 

    • 1957-ல் இருந்து தேசிய மாநாடு கட்சி தோல்வியை கண்டது கிடையாது.
    • முதன்முறையாக இடைத்தேர்தலில் தோல்வியடைந்துள்ளது.

    பீகார் மாநில சட்டசபை தேர்தலின்போது, பல்வேறு மாவட்டங்களில் இடைத்தேர்தல்களும் நடைபெற்றது. அதன்வகையில் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பட்காம் தொகுதியிலும் இடைத்தேர்தல் நடைபெற்றது.

    இந்த தொகுதி உமர் அப்துல்லாவின் தேசிய மாநாடு கட்சியின் கோட்டையாகும். இங்கு 1957-ல் இருந்து தேசிய மாநாடு கட்சி தோல்வியே கண்டதில்லை. இதனால் ஆளுங்கட்சியான தேசிய மாநாடு எளிதாக வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால், மக்கள் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஆகா சையத் முன்தாசிர் 4,500 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

    • ஜம்மு-காஷ்மீர் டாக்டரின் லாக்கரில் துப்பாக்கி, வெடிபொருள் கண்டுபிடிக்கப்பட்டது.
    • அவர் கொடுத்த தகவலின்பேரல் அரியானாவில் 2500 கிலோ ஆர்.டி.எக்ஸ். வெடிமருந்து சிக்கியது.

    ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் துணை ராணுவப் படையினர் மற்றும் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக செயல்பட்டதாக ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த அதீல் அகமது ராதர் என்பவரை போலீசார் கைது செய்தனர். இவர் டாக்டர் ஆவார்.

    காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள டாக்டர் அதீல் அகமதுவுக்கு சொந்தமான லாக்கரில் போலீசார் சோதனை நடத்தினார்கள். அங்கு பதுக்கி வைத்திருந்த ஏ.கே.47 ரக துப்பாக்கி மற்றும் பிற வெடிபொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இதையடுத்து அவரிடம் போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர் தீவிரவாதிகளுடன் சதித் திட்டத்தில் ஈடுபட்டு இந்தியாவில் பல இடங்களில் தாக்குதல் நடத்துவதற்காக ஆர்.டி.எக்ஸ். வெடிமருந்துகளை பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.

    இந்த வெடிமருந்துகளை அரியானா மாநிலம் பரீதாபாத்தில் பதுக்கி வைத்திருந்ததாக டாக்டர் அதீல் அகமது ராதர் தெரிவித்தார். இதையடுத்து அவர் சொன்ன இடத்துக்கு சென்று போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு 300 கிலோ ஆர்.டி.எஸ். வெடிமருந்து பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது. இது சக்தி வாய்ந்த வெடிமருந்து ஆகும். அதை போலீசார் பறிமுதல் செய்தனர். கைதான டாக்டர் அதீல் அகமது தற்போது போலீஸ் காவலில் உள்ளார்.

    இந்தியாவை தகர்ப்பதற்காக ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை சேமித்து வைப்பதிலும், ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு கொண்டு செல்வதிலும் அதீல் அகமது முக்கிய பங்காற்றி உள்ளார். இது தொடர்பாக அவரிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

    போலீசாரின் தீவிர விசாரணையில் புல்வாமா மாவட்டத்தில் உள்ள கோவில் பகுதியை சேர்ந்த முசாமில் ஷகீல் என்ற மற்றொரு டாக்டருக்கும் இதில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இவர் வாடகைக்கு இருந்த வீட்டில் 2563 கிலோ வெடிபொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    சமீப ஆண்டுகளாகவே காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில் அவ்வப்போது வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. அங்கு பறிமுதல் செய்யப்பட்டுள்ள வெடிமருந்துகளை விட தற்போது கைப்பற்றி இருப்பது அதிகம் ஆகும். இந்த நிலையில் டாக்டர்கள் அதீல் அகமது, முகாமில் ஷகீல் ஆகிய 2 பேரையுமே போலீசார் காவலில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த 2 டாக்டர்களும் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளான ஜெய்ஷ்-இ-முகமது மற்றும் கஸ்வத்-உல்-ஹிந்த் ஆகிய அமைப்புகளுடன் தொடர்பு வைத்திருப்பதாக சந்தேகம் ஏற்பட்டுள்ளது. கைதான டாக்டர்களுக்கு வேறு யாருடன் எல்லாம் தொடர்பு இருக்கிறது என்பது தொடர்பான விசாரணை தீவிரப்படுத் தப்பட்டுள்ளது.

    ஜம்மு காஷ்மீருக்கு வெளியே அரியானா பகுதியில் வெடிபொருட்கள், ஆயுதங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதால் இந்த விவகாரத்தில் மேலும் பலர் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகவும், இன்னும் பதுக்கி வைக்கப்பட்டுள்ள வெடி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகவும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துஉள்ளன.

    • குப்வாரா கெரான் சர்வதேச எல்லைப் பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது.
    • பயங்கரவாதிகள் ஊடுருவும் முயற்சி வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டது.

    ஸ்ரீநகர்:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகளை ஒழிக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. சர்வதேச எல்லைக்கோடு பகுதியில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது.

    கடந்த 7-ந் தேதி முதல் ஆபரேஷன் பிம்பிள் என்ற பெயரில் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் பாதுகாப்பு படை வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் குப்வாரா கெரான் சர்வதேச எல்லைப் பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து அந்த பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    அப்போது எல்லையில் ஊடுருவ முயன்ற 2 பயங்கரவாதிகளை அவர்கள் தடுத்து நிறுத்தினார்கள். உடனே அவர்கள் பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து பதிலுக்கு நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 2 பயங்கரவாதிகளும் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.

    இதன் மூலம் பயங்கரவாதிகள் ஊடுருவும் முயற்சி வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டது. தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் பயங்கரவாதிகளை தேடி வருகின்றனர்.

    • வெற்றி பெறுவதற்கான எண்ணிக்கை பாஜக-விடம் இல்லை.
    • அவர்களுக்கு 28 எம்.எல்.ஏ.-க்கள் மட்டுமே இருந்தனர்.

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு முதன்முறையாக மாநிலங்களவை தேர்தல் நடைபெற்றது. 4 இடங்களுக்கான தேர்தலில் உமர் அப்துல்லாவின் ஆளுங்கட்சியான தேசிய மாநாடு கட்சி 3 இடங்களில் வெற்றி பெற்றது. ஒரு இடத்தில் பாஜக வெற்றி பெற்றது.

    பாஜகவுக்கு வெற்றி பெற 4 எம்.எல்.ஏ.-க்கள் ஆதரவு தேவைப்பட்டது. அந்த 4 பேரும் எங்களுக்கு வாக்களிப்பதாக உறுதி அளித்திருந்தனர். பாஜக குதிரை பேரத்தில் ஈடுபட்டதால், 4 பேரும் பாஜக-வுக்கு வாக்களித்துவிட்டனர் என தோல்வியடைந்த தேசிய மாநாடு கட்சி வேட்பாளர் இம்ரான் நபி தார் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக இம்ரான் நபி தார் கூறுகையில் "வெற்றி பெறுவதற்கான எண்ணிக்கை பாஜக-விடம் இல்லை. அவர்களுக்கு 28 எம்.எல்.ஏ.-க்கள் மட்டுமே இருந்தனர். அப்படி இருக்கும்போது எப்படி அவர்கள் 32 வாக்குளை பெற்றனர்?. இதன்மூலம் குதிரை பேரம் நடந்துள்ளது தெளிவாகிறது" என்றனர்.

    வெற்றி பெற்ற மற்ற வேட்பாளர் "காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து பறிக்கப்பட்ட முடிவு நிராகரிக்கப்பட்டுள்ளது" என்பதை காட்டுகிறது" என்றார்.

    • பாஜக அல்லாத அரசு இருந்தால் மாநில அந்தஸ்து கிடையாது என்றால் பாஜக அதை சொல்ல வேண்டும்.
    • பாஜக உடன் மற்றவர்கள் கூட்டணி அமைத்ததால் மாநிலம் சீரழிந்துள்ளது.

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்குவதை விரைவுப்படுத்தும் நோக்கத்தில் பாஜக-வுடன் கூட்டணி வைக்கமாட்டோம் என அம்மாநில முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

    மத்திய அரசு ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டாக பிரித்து இரண்டையும் யூனியன் பிரதேசமாக அறிவித்தது. ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்படும் என மத்திய பாஜக அரசு உறுதி அளித்தபோதிலும், வழங்காமல் இழுத்தடிக்கிறது.

    இந்த நிலையில்தான் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா மாநில அந்தஸ்துக்காக பாஜக உடன் கூட்டணி வைக்கமாட்டோம் எனத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக உமர் அப்துல்லா கூறியதாவது:-

    பாஜக தனது தேர்தல் அறிக்கையிலும் நாடாளுமன்றத்திலும் உச்சநீதிமன்றத்திலும் அளித்த வாக்குறுதிகளிலும் ஜம்மு-காஷ்மீரில் பாஜக ஆட்சிக்கு வருவதைப் பொறுத்து மாநில அந்தஸ்து சார்ந்துள்ளது என்று ஒருபோதும் கூறவில்லை.

    ஒருவேளை ஜம்மு-காஷ்மீரில் பாஜக அல்லாத அரசு இருந்தால், மீண்டும் மாநில அந்தஸ்து இல்லை என்றால், பாஜக நேர்மையாகச் சொல்ல வேண்டும் என்று நான் நினைக்கிறேன். ஜம்மு-காஷ்மீரில் பாஜக அல்லாத அரசாங்கம் இருக்கும் வரை, உங்களுக்கு மாநில அந்தஸ்து கிடைக்காது என்று அவர்கள் எங்களிடம் சொல்ல வேண்டும். பின்னர் நாங்கள் என்ன செய்ய விரும்புகிறோம் என்பதை முடிவு செய்வோம்.

    தேசிய மாநாடு கட்சி, மாநில அந்தஸ்தை மீட்டெடுப்பதற்காக பாஜக உடன் கூட்டணி வைத்துக் கொள்ளாது. 2015ஆம் ஆண்டு பாஜக-பிடிபி கூட்டணி ஆட்சியமைத்ததில் இருந்து, ஜம்மு-காஷ்மீர் இன்னும் பாதிப்பை சந்தித்து வருகிறது. அந்த கூட்டணியில் ஜம்மு-காஷ்மீர் எப்படி சீரழிந்தது என்பதை நாம் பார்த்திருக்கிறோம். மற்றவர்கள் செய்த தவறை மீண்டும் செய்யும் நோக்கம் எனக்கு இல்லை.

    இவ்வாறு உமர் அப்துல்லா தெரிவித்தார்.

    • நேற்று இரவு எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் சந்தேகத்திற்கிடமான நடமாட்டம் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து கூட்டு நடவடிக்கை தொடங்கப்பட்டது.
    • பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சியை முறியடிக்க தற்போது தேடுதல் நடவடிக்கை நடந்து வருகிறது.

    ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தின் மச்சில் செக்டாரில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டில் (எல்ஓசி) பாதுகாப்புப் படையினர் ஊடுருவல் முயற்சியை முறியடித்தபோது 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அப்பகுதியில் தேடுதல் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.

    நேற்று இரவு எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் சந்தேகத்திற்கிடமான சில நடமாட்டம் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து கூட்டு நடவடிக்கை தொடங்கப்பட்டது. அப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

    இரு தரப்பிற்கும் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் பாதுகாப்பு படையினரால் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

    இதையடுத்து கூடுதல் படையினர் அப்பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளனர். மேலும் பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சியை முறியடிக்க தற்போது தேடுதல் நடவடிக்கை நடந்து வருகிறது.

    • சந்தையில் அனைத்துக் கட்டிடங்களில் இருந்தவர்களும் வெளியேற்றப்பட்டனர்.
    • போர்கால அடிப்படையில் மீட்புப் பணிகள் நடந்து வருகிறது.

    ஜம்மு காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தில் இன்று நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் பல வணிகக் கட்டிடங்கள் சேதமடைந்தன

    ஜம்மு - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் உள்ள சோம்ரோலி பகுதியில் உள்ள நர்சூ சந்தையில் காலை 11:30 மணியளவில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டது.

    இந்த நிலச்சரிவின் காரணமாக, புதிதாக திறக்கப்பட்ட ஒரு ஹோட்டல் கட்டிடம் மற்றும் இரண்டு கடைகள் சேதமடைந்தன.

    நிலச்சரிவு காரணமாக கட்டிடங்கள் இடிந்து விழுவதற்கு முன்பே, சந்தைப் பகுதியில் இருந்த அனைத்துக் கட்டிடங்களில் இருந்தவர்களும் வெளியேற்றப்பட்டதால், எந்தவிதமான உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 

    நிலச்சரிவை தொடர்ந்து மீட்புப்படையினர், காவல்துறை மற்றும் உள்ளூர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். போர்கால அடிப்படையில் மீட்புப் பணிகள் நடந்து வருவதாக உதம்பூர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது இந்த நிலச்சரிவால் அப்பகுதியில் உள்ள மக்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது.   

    ×