செய்திகள்
ரபேல் குறித்து உண்மை அறிய பிரதமர் மோடி நாடாளுமன்ற கூட்டுக்குழுவை கூட்ட வேண்டும் - ராகுல் காந்தி
ரபேல் விவகாரத்தில் பொய் சொல்வதை நிறுத்திவிட்டு நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு (ஜேபிசி) உத்தரவிடுங்கள் என ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். #RafaleDeal #Modi #RahulGandhi
புதுடெல்லி:
பிரான்சிடம் இருந்து ரபேல் போர் விமானங்கள் வாங்குவதற்காக மத்திய அரசு செய்து கொண்டுள்ள ஒப்பந்தத்தில் ஊழல் நடந்திருப்பதாக காங்கிரஸ் கட்சி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. இவ்விவகாரம் தொடர்பாக காங்கிரஸ், பா.ஜனதா இடையே மோதல் தீவிரம் அடைந்துள்ளது.
இவ்விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பிரான்ஸ் முன்னாள் அதிபர் பிராங்கோயிஸ் ஹாலன்டே, ‘இந்திய அரசின் ஆலோசனையின் படிதான் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் குழுமம் ரபேல் போர் விமானங்களை தயாரிக்கும் ‘டஸ்ஸால்ட்’ ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டது.
இந்திய அரசால் கைகாட்டப்பட்ட ஒரு நிறுவனத்தை எனது ஆட்சி காலத்தில் இந்த ஒப்பந்தத்தில் இணைத்தோம். இதில் பிரான்ஸ் அரசு முடிவுசெய்ய எதுவுமில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பான செய்திகள் வெளியானதும் பிரதமர் மோடி மீது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேரடியாக குற்றம் சாட்டியுள்ளார்.
இந்நிலையில், ரபேல் போர் விமானம் விவகாரத்தில் பொய் சொல்வதை நிறுத்திவிட்டு நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு (ஜேபிசி) உத்தரவிடுங்கள் என ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில், ஆதரிக்க இயலாதவற்றை ஆதரிப்பதற்காக போலியான நேர்மையுடன் பொய்களை அள்ளி வீசுவதுதான், மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லியின் சிறப்பும், திறமையும். ஆனால், பிரதமரும், நிதி மந்திரியும் பொய் சொல்வதை நிறுத்திவிட்டு, ரபேல் விவகாரத்தில் முழு உண்மையும் வெளிவர நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று பதிவிட்டுள்ளார். #RafaleDeal #Modi #RahulGandhi