செய்திகள்

வெள்ளத்தில் சிக்கிய மனைவி, குழந்தையை படகில் மீட்ட கணவர்

Published On 2018-08-20 09:00 GMT   |   Update On 2018-08-20 09:00 GMT
கேரளாவில் ஏற்பட்ட வெள்ளபெருக்கில் சிக்கிய மனைவி மற்றும் குழந்தையை அவரது கணவர் மீட்டு பத்திரமான இடத்திற்கு அழைத்துச் சென்றார். #keralarain #keralafloods
திருவனந்தபுரம்:

கேரளாவை புரட்டிப்போட்ட மழை வெள்ளம் காரணமாக குடும்பத்தையும், உற்றார் உறவினர்களையும் இழந்தும், பிரிந்தும் தவிப்பவர்கள் ஏராளம்.

தற்போது கேரளாவில் இயல்புநிலை திரும்பும் சூழ்நிலை உருவாகி வருவதால் பிரிந்து சென்றவர்களை தேடும் பணியிலும் பொதுமக்கள் ஈடுபட்டுள்ளனர்.

செங்கனூர் விருவன் மண்டூர் பகுதியை சேர்ந்தவர் அகிலா. இவரது கணவர் அருண். பிரசவத்திற்காக சில மாதங்களுக்கு முன்பு அகிலா தனது தாய் வீட்டிற்கு சென்றிருந்தார். அங்கு அவருக்கு 2 மாதங்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. தொடர்ந்து அவர் தாய் வீட்டிலேயே வசித்துவந்தார்.

இந்த நிலையில் அவரது வீட்டை மழை வெள்ளம் சூழ்ந்ததால் அவரால் அங்கிருந்து வெளியேற முடியவில்லை. இதனால் குழந்தை மற்றும் வயதான பெற்றோருடன் அகிலா அந்த வீட்டின் மாடியில் தஞ்சமடைந்தார்.

போன் மூலம் தனது கணவர் அருணுக்கு இது பற்றி தெரிவித்தார். உடனே அவர் அங்கு செல்ல முடியாதபடி அதிகளவு வெள்ளப் பெருக்கு காணப்பட்டது. 5 நாட்கள் தவிப்புக்கு பிறகு தனது உறவினர்கள் சிலர் உதவியுடன் ஒரு படகு மூலம் அங்கு சென்ற அருண் தனது மனைவி, குழந்தை மற்றும் அவரது குடும்பத்தினரை மீட்டு பத்திரமான இடத்திற்கு அழைத்துச் சென்றார்.

செங்கனூர் பகுதியை சேர்ந்த லெட்சுமி என்ற பெண்ணும் தனது தாய் வீட்டிற்கு பிரசவத்திற்காக சென்ற போது அவரது வீட்டை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் தனது 11 மாத குழந்தை மற்றும் பெற்றோருடன் தனது வீட்டு மாடியில் பாதுகாப்பாக தங்கிக்கொண்டார். அவரது வீட்டு அருகே வசிக்கும் 14 பேரும் அவரது வீட்டில் தஞ்சம் அடைந்தனர்.



3 நாட்களாக அவர்கள் பகுதிக்கு உதவிக்கு யாரும் வரவில்லை. செல்போன் செயல்படாததால் இவர்களாலும் தங்கள் நிலைமையை மற்றவருக்கு தெரியப்படுத்த முடியவில்லை. இந்த நிலையில் அங்கு படகில் சென்ற மீட்புபடையினர் மூலம் அவர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். #keralarain #keralafloods
Tags:    

Similar News