செய்திகள்

பிரதமர் நாற்காலியில் இருந்து நான் எழ வேண்டும் என ஒருவர் விரும்புகிறார் - பிரதமர் மோடி பேச்சு

Published On 2018-07-20 16:06 GMT   |   Update On 2018-07-20 16:06 GMT
பிரதமர் நாற்காலியில் யார் அமர வேண்டும் என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள் என மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்தில் பிரதமர் மோடி பேசினார் #NoConfidenceMotion #PMModi
புதுடெல்லி:

மத்திய அரசு மீது தெலுங்கு தேசம் கட்சி கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் இன்று நடந்தது. சிவசேனா, பிஜு ஜனதா தளம் கட்சிகள் விவாதத்தை புறக்கணித்து விட்டன.

இரு கட்சிகள் வாக்கெடுப்பில் பங்கேற்காததால், மெஜாரிட்டியை நிரூபிக்க தேவையான எண்ணும் குறைந்தது. எனினும், மசோதா மீதான விவாதம் நடந்தது. மத்திய அரசு மற்றும் பிரதமர் மீது பல்வேறு விவகாரங்களை முன்வைத்து ராகுல் காந்தி பேசினார்.

அதிமுக, சமாஜ்வாதி, திரினாமுல், டிஆர்எஸ் ஆகிய கட்சிகளும் மத்திய அரசு மீது கலவையான விமர்சனத்தை முன்வைத்து பேசின. இதனை அடுத்து பேசிய ராஜ்நாத் சிங், “நம்பிக்கையில்லா தீர்மானம் மக்களின் தீர்ப்புக்கு எதிராக உள்ளது” என கூறினார். 

இதனை அடுத்து, தீர்மானத்தின் மீது ஒவ்வொரு கட்சிகளும் பேசி வந்ததால் தீர்மானத்தின் மீது ஓட்டெடுப்பு நடத்துவது தாமதமாகியது. இரவு 9.30 மணியளவில் பிரதமர் தனது உரையை தொடங்கினார். அவர் பேசுகையில் கூறியதாவது:-

இந்த தீர்மானத்தின் மீதான விவாதத்தில் எதிர்ப்பு அரசியல் செய்பவர்களின் முகங்கள் வெளிப்பட்டு விட்டது. எதிர்க்கட்சிகளே பெரும்பான்மை மிக்க இந்த அரசின் மீது நம்பிக்கை வையுங்கள். நம்பிக்கை இல்லா தீர்மானத்தை நிராகரியுங்கள்.

அதிகாரப் பசியின் காரணமாக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவந்தனர். இது நம்பிக்கையில்லா தீர்மானம் இல்லை, எதிர்க்கட்சிகளின் ஆணவத்தின் வெளிப்பாடு.

பிரதமர் நாற்காலிக்கு என்ன அவசரம்? ஜனநாயகத்தில் எந்த அவசரமும் இல்லை. பிரதமர் நாற்காலியில் இருந்து நான் எழ வேண்டும் என ஒருவர் விரும்புகிறார். இந்த நாற்காலிக்கு யார் தகுதியானவர்கள் என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள். நாங்கள் மெஜாரிட்டி கொண்டிருப்பதால் இந்த பக்கம் இருக்கிறோம். மக்களை தவறாக வழி நடத்தாதீர்கள்.

இவ்வாறு மோடி பேசி வருகிறார். மோடியின் பேச்சுக்கு எதிராக தெலுங்கு தேசம் உறுப்பினர்கள் குரல் எழுப்பி வருகின்றனர்.
Tags:    

Similar News