செய்திகள்
டெல்லி பவானா தீ விபத்து: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இரங்கல்
டெல்லியின் பவானா தொழிற்பேட்டையில் உள்ள பிளாஸ்டிக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி பலியானோருக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று இரங்கல் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
டெல்லியில் அமைந்துள்ளது பவானா தொழிற்பேட்டை. இங்கு பல்வேறு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு அமைந்துள்ள பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிப்பு ஆலையின் கிடங்கில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கி 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் தீக்காயங்களுடன் பலர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீ விபத்து குறித்து விசாரணை நடத்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், பவானா தீவிபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் கூறுகையில், தீ விபத்தில் பலியானோரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த துயரிலிருந்து நீங்கள் மீண்டு வரவேண்டும் என்றும், காயமடைந்து சிகிச்சை பெறுபவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என பிரார்த்திக்கிறேன் என பதிவிட்டுள்ளார். #BawanaFire #TamilNews