செய்திகள்
டோக்லாம் விவகாரம்: சீன பாதுகாப்பு ஆலோசகர் பிரதமர் மோடி, அஜித் தோவல் உடன் சந்திப்பு
டோக்லாம் உள்ளிட்ட எல்லை விவகாரம் தொடர்பாக சீன பாதுகாப்பு ஆலோசகர் யாங் ஜியேச்சி உடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இன்று பேச்சுவார்த்தை நடத்தினார்.
புதுடெல்லி:
இந்தியா - சீனா எல்லையில் உள்ள சிக்கிம் மாநிலத்தின் டோக்லாம் பகுதியில் கடந்த ஜூலை மாதம் சீன ராணுவத்தினர் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதனையடுத்து, இந்திய ராணுவத்தினர் அங்கு சென்று அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால், அங்கு போர் பதற்றம் நிலவியது.
இதன் பின்னர், இரு நாடுகளுக்கு இடையே பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்ததை அடுத்து, ஆகஸ்ட் மாதம் சீன ராணுவம் அங்கிருந்து திரும்பிச் சென்றது. இந்நிலையில், சில வாரங்களுக்கு முன்னர் கனரக வாகனங்களுடன் சீன ராணுவம் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டது.
இதனையடுத்து, இந்தியா வந்துள்ள சீன பாதுகாப்பு ஆலோசகர் யாங் ஜியேச்சி உடன் தலைநகர் டெல்லியில் இன்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இவ்விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார். இவ்விவகாரத்தில் 20-வது முறையாக இரு நாட்டு உயரதிகாரிகள் மட்டதிலான பேச்சுவார்த்தை நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து, பிரதமர் மோடியையும் ஜியேச்சி சந்தித்து பேசினார்.