தேர்தல் வாக்குறுதிகள் எதையும் தி.மு.க., அரசு நிறைவேற்றவில்லை - எடப்பாடி பழனிசாமி பேச்சு
- பல இடங்களில் முதியோர் உதவித்தொகை நிறுத்தப்பட்டுள்ளது.
- தமிழகத்தில் மட்டும் பெயரளவுக்கு பெட்ரோல், டீசல் விலை குறைப்பு செய்யப்பட்டது.
பல்லடம் :
கோவையிலிருந்து ஒட்டன்சத்திரம் செல்வதற்காக, முன்னாள் முதல்வரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தார். கோவையில் இருந்து காரில் ஒட்டன்சத்திரம் செல்லும் வழியில் பல்லடம் பஸ் நிலையம் முன்பு அவருக்கு அ.தி.மு.க. சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு எடப்பாடிபழனிசாமி பேசியதாவது:-
தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்று 15 அமாவாசைகள் கடந்துவிட்டன. மீதம் 45 அமாவாசைகள்உள்ளது. திட்டங்களை நிறைவேற்ற ஆய்வுக்குழு போடப்பட்டுள்ளதாக ஆட்சியாளர்கள் சொல்லுகிறார்கள் .ஆனால் தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை.குழுக்களை அமைத்து மக்களை ஏமாற்றுகின்ற வேளையில் அரசு ஈடுபட்டுள்ளது என்று எண்ணத் தோன்றுகின்றது. இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.ஆயிரம் வழங்கும் திட்டம், கேஸ் சிலிண்டர் வாங்க ரூ. 100 மானியம் திட்டம், கல்வி கடன் ரத்து இது போல பல திட்டங்களுக்கு வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டன. அவை யாவும் நிறைவேற்றப்படவில்லை .முதியோர் உதவித்தொகை அதிகரிக்கப்படும் என்று சொன்னார்கள் . ஆனால் பல இடங்களில் முதியோர் உதவித்தொகை நிறுத்தப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் பெட்ரோல், டீசல்,விலையை பல்வேறு மாநிலங்களில், மாநில அரசாங்கங்களால் விலை குறைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் பெயரளவுக்கு விலை குறைப்பு செய்யப்பட்டது. மக்கள் பயன்பெறும் வகையில் விலை குறைப்பு செய்யப்படவில்லை. கேட்டால் நிதி நிலை சரியில்லை என்கிறார்கள் . மக்கள் பயன்படக்கூடிய எந்த திட்டமும் இந்த ஆட்சியில் நிறைவேற்றப்படவில்லை. சொத்து வரியும் உயர்த்திவிட்டனர். மின் கட்டணத்தையும் உயர்த்த உள்ளனர்.இவ்வாறு அவர் பேசினார். இந்த வரவேற்பு நிகழ்ச்சியில்முன்னாள் அமைச்சர்கள் எஸ். பி,. வேலுமணி, உடுமலை ராதாகிருஷ்ணன், எம். எஸ். எம். ஆனந்தன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ.,கரைப்புதூர் நடராஜன், மாவட்ட அவைத்தலைவர் சிவாச்சலம், பொருளாளர் அரிகோபால், பல்லடம் தெற்கு ஒன்றிய செயலாளர் சித்துராஜ், பொங்கலூர் ஒன்றிய செயலாளர்கள் யூ.எஸ். பழனிச்சாமி, காட்டூர் பிரகாஷ், பல்லடம் நகரச் செயலாளர் ராமமூர்த்தி,மற்றும் பானுபழனிசாமி, அ.தி.மு.க. நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.