உள்ளூர் செய்திகள்

கத்தியுடன் புகுந்து ரகளை- கஞ்சா போதை வாலிபரை வீட்டுக்குள் பூட்டி சிறைவைத்த பெண்

Published On 2023-06-26 07:20 GMT   |   Update On 2023-06-26 07:20 GMT
  • திடீரென அந்த வாலிபர் அவ்வழியே செல்பவர்களிடம் தகராறில் ஈடுபட்டு மிரட்டினார்.
  • கடந்த 2 நாட்களுக்கு முன்பு சிறையில் இருந்து வெளியே வந்த அவர் மீண்டும் வீடு புகுந்த ரகளையில் ஈடுபட்டு போலீசாரிடம் சிக்கிக்கொண்டார்.

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் அருகே உள்ள ஏகனாம் பேட்டை செல்லியம்மன் நகர் பகுதியில் கஞ்சா போதையில் வாலிபர் ஒருவர் கையில் பட்டா கத்தியுடன் சுற்றினார். திடீரென அந்த வாலிபர் அவ்வழியே செல்பவர்களிடம் தகராறில் ஈடுபட்டு மிரட்டினார். இதனை கண்டு அங்கிருந்தவர்கள் ஓட்டம் பிடித்தனர்.

இதற்கிடையே கஞ்சா வாலிபர் கையில் பட்டாகத்தியை வீசியபடி அங்குள்ள கலைவாணி என்பவரது வீட்டுக்குள் நுழைந்து மிரட்டினார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த கலைவாணி தனது குழந்தைகளை வெளியே அழைத்து வந்து அந்த கஞ்சா வாலிபரை வீட்டுக்குள் வைத்து கதவை வெளிப்பக்கம் பூட்டி சிறைவைத்தார்.

இதனால் கோபம் அடைந்த போதை வாலிபர் வீட்டுக்குள் இருந்த பொருட்களை அடித்து உடைத்து சேதப்படுத்தினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து வாலாஜாபாத் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து வீட்டுக்குள் பூட்டி சிறைவைக்கப்பட்ட கஞ்சா போதை வாலிபரை மீட்டு, அவரிடம் இருந்த பட்டா கத்தியை பறிமுதல் செய்தனர்.

நிற்க கூட முடியாத அளவுக்கு அவர் கஞ்சா போதையில் இருந்ததால் விசாரிக்க முடியாமல் போலீசார் திணறினர். விசாரணையில் அவர், வெண்குடி கிராமத்தைச் சேர்ந்த அஜித் என்பது தெரியவந்தது

கடந்த 2 நாட்களுக்கு முன்பு சிறையில் இருந்து வெளியே வந்த அவர் மீண்டும் வீடு புகுந்த ரகளையில் ஈடுபட்டு போலீசாரிடம் சிக்கிக்கொண்டார். அவரை போலீசார் கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News