search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போதை வாலிபர்"

    • நேற்றிரவு குடிபோதையில் கும்பகோணம் அடுத்த திருநாகேஸ்வரம் கடைவீதியில் சுற்றி திரிந்தார்.
    • சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பழனிவேல் எவ்வளவோ கூறியும் ஆரோக்கியராஜ் கேட்காமல் சாலையில் படுத்து கிடந்தார்.

    கும்பகோணம்:

    தஞ்சை மாவட்டம் கும்பகோணம் வடகரை கீழத்தெருவை சேர்ந்தவர் ஆரோக்கியராஜ் (வயது24).

    இவர் நேற்றிரவு குடிபோதையில் கும்பகோணம் அடுத்த திருநாகேஸ்வரம் கடைவீதியில் சுற்றி திரிந்தார். அப்போது அந்த பகுதியில் ரோந்து பணியில் இருந்த திருநீலக்குடி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பழனிவேலை, திடீரென குடிபோதையில் ஆரோக்கியராஜ் தனது செல்போனில் படம் பிடித்தார்.

    பின்னர் அவர் நீங்கள் குடித்து விட்டு பணி செய்கிறீர்கள் என ஏதேதோ ஆரோக்கியராஜ் உளறினார். தொடர்ந்து அவர் நடுரோட்டில் படுத்து கிடந்து மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டார். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. பொதுமக்கள் திரண்டனர்.

    சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பழனிவேல் எவ்வளவோ கூறியும் ஆரோக்கியராஜ் கேட்காமல் சாலையில் படுத்து கிடந்தார். இதையடுத்து பழனிவேல் உதவிக்கு மேலும் 2 போலீசாரை அழைத்தார். அவர்களிடமும் ரோட்டில் படுத்து கிடந்தப்படியே தகராறில் ஈடுபட்டார்.

    இதனை தொடர்ந்து போதை ஆசாமி ஆரோக்கியராஜை போலீசார் அப்புறப்படுத்தி ஆட்டோவில் வலுக்கட்டாயமாக ஏற்றி திருநீலக்குடி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

    • ரெயில் மோதியதில் போதை வாலிபர் தூக்கி வீசப்பட்டார்.
    • எக்ஸ்பிரஸ் ரெயில் 10 நிமிடம் காலதாமதமாக புறப்பட்டு சென்றது.

    அரக்கோணம்:

    அரக்கோணம் ரெயில் நிலையம் மக்கள் அதிகம் கூடும் இடமாக உள்ளது. எப்போதும் பரபரப்பாக காணப்படும் இந்த ரெயில் நிலையத்தில் நேற்று மாலை பயணிகள் கூட்டம் அலைமோதியது.

    அப்போது 2-வது பிளாட்பாரத்தில் பெங்களூர்-அசாம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்து கொண்டிருந்தது.

    அரக்கோணம் ரெயில் நிலையம் அருகே உள்ள ஏ.பீ.எம். சர்ச் பகுதியைச் சேர்ந்த அருண் என்பவர் போதையில் அங்கு வந்தார். அவர் 2-வது பிளாட்பார தண்டவாளத்தில் நின்று கொண்டு ரெயிலை நிறுத்தப் போவதாக ரகளையில் ஈடுபட்டார். அதனைப் பார்த்த சக பயணிகள் அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டனர்.

    ரெயில் வருவதை கண்டதும் போதை வாலிபர், தண்டவாளத்தில் இறங்கி ரெயிலை நோக்கி ஓடினார். அப்போது அவர் நிலை தடுமாறி தண்டவாளத்தில் திடீரென கீழே விழுந்து, எழுந்திருக்க முடியாமல் தட்டு தடுமாறினார்.

    இதனைப் பார்த்த என்ஜின் டிரைவர், ரெயிலை நிறுத்த முயற்சி செய்தார். கண்ணிமைக்கும் நேரத்தில் எக்ஸ்பிரஸ் ரெயில் என்ஜின் முன்பக்கம் போதை வாலிபர் மீது மோதிவிட்டு சிறிது தூரம் சென்று நின்றது.

    ரெயில் மோதியதில் போதை வாலிபர் தூக்கி வீசப்பட்டார். இதைப் பார்த்த பயணிகள் மற்றும் ரெயில்வே போலீசார் அந்த நபர் இறந்துவிட்டதாக கருதி அருகில் சென்று பார்த்தனர்.

    ஆனால் போதை வாலிபர் உடலில் காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது தெரிய வந்தது.

    இதனையடுத்து போலீசார் போதை வாலிபருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதனையடுத்து எக்ஸ்பிரஸ் ரெயில் 10 நிமிடம் காலதாமதமாக புறப்பட்டு சென்றது. போதையில் வாலிபர் ரெயிலை நிறுத்த முயற்சி செய்த சம்பவம் அரக்கோணத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் வாலிபர்களை சுற்றி வளைத்து பிடிக்க முயன்றனர்.
    • போதை வாலிபரை ஆட்டோவில் ஏற்றி போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர்.

    புதுச்சேரி:

    புதுவையில் ஜீவா நகர் பகுதியில் புதிதாக கட்டி வரும் பாலத்தின் கீழே 3 வாலிபர்கள் கஞ்சா அடித்து கொண்டு கூச்சலிட்டு வருவதாக போதை தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் வாலிபர்களை சுற்றி வளைத்து பிடிக்க முயன்றனர். இதில் 2 வாலிபர்களை போலீசார் துரத்தி பிடித்தனர். ஒருவர் போலீஸ் பிடியில் சிக்காமல், அரைமணி நேரமாக ஆட்டம் காட்டினார்.

    மேலும் அங்கிருந்த வாய்க்காலில் குதித்து சேறும், சகதியுடன் தப்பியோடினார். பின்னர் வெங்கட்டா நகரில் உள்ள ஓய்வு பெற்ற நீதிபதி வீட்டின் வாசலில் சேறும், சகதியும் சிந்தி கிடப்பதை அடையாளமாக கொண்டு அங்கு வாலிபர் பதுங்கியிருப்பதை கண்டுபிடித்தனர்.

    அவரை வெளியே வருமாறு அழைத்தனர். அவர் வர மறுத்ததோடு, கஞ்சா போதையில் தன்னை விட்டு விடும்படி கதறி அழுதார். அங்கும் இங்குமாக ஆட்டம் காட்டி, கடைசியில் நீதிபதி வீட்டுக்கு நேரடியாக வந்துட்டியா. ஒழுங்கா வெளியே வந்துடுப்பா... என போலீசார் மன்றாடினர். அவர் வெளியே வர மறுத்ததால், உள்ளே சென்று தரதரவென வெளியே இழுத்து வந்து அவர் மீது தண்ணீர் ஊற்றி சேறும் சகதியை கழுவி குளிக்க வைத்தனர்.

    பின்னர் போதை வாலிபரை ஆட்டோவில் ஏற்றி போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். விசாரணையில், பெரியார் நகரை சேர்ந்த அரவிந்த் என்பதும், அவர் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் இருப்பது தெரிய வந்துள்ளது, கஞ்சா வாலிபரை போலீசார் பிடிக்க சென்றபோது அவர் செய்த ரகளையால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

    • ஹாரன் ஒலித்தும் எந்த அசைவும் இல்லாமல் போதையில் படுத்து கிடந்தார்.
    • அங்கிருந்து செல்ல மறுத்து அடம் பிடித்த போதை வாலிபர் போலீசார் கால்களை பிடித்து போதை மயக்கத்தில் உளறினார்.

    திருவள்ளூர்:

    திருத்தணி பஸ் நிலையம் அருகில் உள்ள அரக்கோணம் சாலை எப்போதும் வாகன போக்குவரத்தால் பரபரப்பாக காணப்படும்.

    காலை, மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும்.

    இந்நிலையில் நேற்று மாலை 6 மணி அளவில் மதுபோதை தலைக்கேறிய நிலையில் தட்டுத்தடுமாறி வாலிபர் ஒருவர் அரக்கோணம் சாலையில் நடந்து வந்தார். திடீரென அவர் நடுரோட்டிலேயே படுத்து தூங்க தொடங்கினார்.

    இதனால் அவ்வழியே வந்த வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். ஹாரன் ஒலித்தும் எந்த அசைவும் இல்லாமல் போதையில் படுத்து கிடந்தார். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் வாகன ஓட்டிக ளும், அவ்வழியே சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதற்குள் வாகனங்கள் செல்ல முடியாததால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    இதுபற்றி அறிந்ததும் அங்கு பணியில் இருந்த போக்குவரத்து போலீசார் விரைந்து வந்து சாலையில் படுத்து கிடந்த வாலிபரை கண்டித்து அங்கிருந்த செல்லுமாறு அறிவுரை கூறினர்.

    ஆனால் போதை ஆசாமி அதனை காதில் வாங்கிக் கொள்ளாமல் போலீசாரி டம் வாக்குவாதம் செய்தார். தரை மிகவும் சூடாக இருக்கிறது. படுக்க பெட் எடுத்து வாருங்கள் என்று கூறி ரகளையில் ஈடுபட்டார். மேலும் அவர் தரையில் படுப்பதிலேயே குறியாக இருந்தார்.

    இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்த போலீசார் அவரை அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்றனர். ஆனால் அங்கிருந்து செல்ல மறுத்து அடம் பிடித்த போதை வாலிபர் போலீசார் கால்களை பிடித்து போதை மயக்கத்தில் உளறினார். இதற்குள் அங்கு ஏராளமான பொதுமக்கள் திரண்டனர். அவர்கள் போதை வாலிபரின் அட்ட காசத்தை வேடிக்கை பார்த்தபடி இருந்தனர்.

    நேரம் செல்ல செல்ல கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் போதை வாலிபரின் கை, கால்களை பிடித்து குண்டுகட்டாக அங்கிருந்து அகற்றி அருகில் உள்ள போலீஸ் பூத்தின் பக்கத்தில் அமர வைத்தனர். அப்போதும் என்ன நடக்கிறது என்று தெரியாத நிலையில் அவர் உளறிக் கொண்டிருந்தார்.

    போதை நபரை அங்கிருந்து அப்புறப்படுத்திய பின்னரே அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் சீரானது. பின்னர் நீண்ட நேரத்திற்கு பிறகு அந்த போதை வாலிபர் அங்கிருந்து சென்றார். சுமார் ஒரு மணிநேரம் போதை நபர் போலீசாரை திணறடித்ததால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

    ×