தொழிலாளி வீட்டில் பயங்கர தீ விபத்து - பொருட்கள் எரிந்து நாசம்
- சாமி படத்துக்கு விளக்கு ஏற்றி வைத்து விட்டு வேலைக்கு சென்றார்.
- தீ விபத்து குறித்து திருப்பூர் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர் :
திருப்பூர் - பி.என்., ரோடு மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாப் பகுதியை சேர்ந்தவர் காவேரி. அருகிலுள்ள பனியன் கம்பெனி ஒன்றில் வேலை செய்து வருகிறார்.
நேற்று இவர் வழக்கம்போல் வேலைக்கு புறப்பட்டார். அப்போது வீட்டில் சாமி படத்துக்கு விளக்கு ஏற்றி வைத்து விட்டு வேலைக்கு சென்றார்.
அவர் வேலைக்கு சென்ற சிறிது நேரம் கழித்து திடீரென இவரது வீட்டில் இருந்து கரும்புகை வெளியேறியது. தொடர்ந்து, தீ பிடித்து வீடு முழுவதும் எரிந்து போனது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் திருப்பூர் வடக்கு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இருந்த போதிலும் வீட்டில் இருந்த அனைத்து பொருட்களும் எரிந்து நாசமானது. தீ விபத்து குறித்து திருப்பூர் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.