அ.தி.மு.க.வில், ஜாதி பார்த்து பதவி வழங்கப்படுவதில்லை- முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி
- ஓ.பி.எஸ் ஏட்டிக்கு போட்டியாக செயல்படுவதால் எந்தவொரு பயனும் இல்லை.
- யார் பக்கம் கட்சி இருக்கிறது என்பதை ஓ.பி.எஸ். புரிந்து கொள்ள வேண்டும்.
மதுரை:
அ.தி.மு.க.வின் அமைப்பு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, மதுரை கே.கே நகரில் உள்ள எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைக்கு இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்பு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
அ.தி.மு.க.வில் கேட்காமலேயே எடப்பாடி பழனிசாமி எனக்கு அமைப்பு செயலாளர் பதவி வழங்கினார். அ.தி.மு.க.வு.க்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் நான் விசுவாசமாக செயல்படுவேன். நம்மை நம்பி இருக்கும் தொண்டர்களுக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என ஜெயலலிதா கூறினார்.
எடப்பாடி பழனிசாமியை மீண்டும் முதல்வராக்க பாடுபடுவேன். அ.தி.மு.க. தொண்டர்களின் புனித ஸ்தலமாக தலைமை அலுவலகம் விளங்குகிறது. அப்படிபட்ட இடத்தில் வன்முறை சம்பவம் நிகழ்ந்தது வருத்தமளிக்கிறது. எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. ஒன்றுபட்டு இருக்கிறது. அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் அ.தி.மு.க.வில் இணைய வேண்டும்.
அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மனம் திருந்தி வந்தால் ஏற்றுக்கொள்வோம். ஓ.பி.எஸ் ஏட்டிக்கு போட்டியாக செயல்படுவதால் எந்தவொரு பயனும் இல்லை. யார் பக்கம் கட்சி இருக்கிறது என்பதை ஓ.பி.எஸ். புரிந்து கொள்ள வேண்டும்.
அ.தி.மு.க.வில் ஜாதி ரீதியாக பதவி வழங்குவதில்லை. அ.தி.மு.க.வில் ஜாதி இல்லை. ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசி வருத்தம் தெரிவிக்க வேண்டும். எடப்பாடி பழனிசாமி பின்னால் யார் வேண்டுமானாலும் வரலாம்.
அ.தி.மு.க.வை நம்பியவர்கள் கெட்டதில்லை. அ.தி.மு.க.வை நம்பாமல் கெட்டவர்கள்தான் உள்ளனர். ரவீந்திர நாத்தை நீக்கியதால் அ.தி.மு.க.வு.க்கு எந்தவொரு இழப்பும் இல்லை. பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை அடிப்படையில் கட்சியின் பலம் நிர்ணயம் செய்யப்படாது. தொண்டர்களின் பலமே அ.தி.மு.க.வின் பலம்.
இவ்வாறு அவர் கூறினார்.