உள்ளூர் செய்திகள்

ஆத்தூர் அருகே லாரி டிரைவர் கொலை: தலை மறைவான தந்தை, மகன்

Published On 2022-07-25 09:55 GMT   |   Update On 2022-07-25 09:55 GMT
  • கனவாய் காடு இறக்கத்தில் வந்த போது அவரை வழிமறித்த ரவிச்சந்திரன் மற்றும் மணிகண்டன், விஜி ஆகியோர் சீனிவாசனை சரமாரியாக வெட்டி கொலை செய்தனர்.
  • இதையடுத்து 3 பேரும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

சேலம்:

சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே உள்ள கடம்பூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 42), லாரி டிரைவர், இவருக்கும் அதே பகுதி சேர்ந்த அவரது பங்காரு (62) என்பவருக்கும் இடையே 2 ஏக்கர் நிலம் தொடர்பாக தகராறு இருந்து வந்தது.

இந்த நிலத்தை சீனிவாசன் மற்றும் அவரது தம்பி ரமேஷ் ஆகியோர் அனுபவித்து வந்தனர். ஆனால் அந்த சொத்தில் ஒரு பகுதியை தனக்கு தர வேண்டும் என பங்காரு மற்றும் அவரது மகன் ரவிச்சந்திரன், பேரன்கள் மணிகண்டன் ,விஜி ஆகியோர் கேட்டு வந்தனர்.

இந்த நிலையில் சீனிவாசன் நேற்று காலை ெகங்கவல்லிக்கு மோட்டார்சைக்கிளில் சென்று கறி எடுத்து விட்டு கடம்பூர் - பைத்தூர் சாலையில் திரும்பி வந்தார்.கனவாய் காடு இறக்கத்தில் வந்த போது அவரை வழிமறித்த ரவிச்சந்திரன் மற்றும் மணிகண்டன் ,விஜி ஆகியோர் சீனிவாசனை சரமாரியாக வெட்டி கொலை செய்தனர். இதையடுத்து 3 பேரும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

தனிப்படை

இந்த சம்பவம் குறித்து ஆத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தலைமறைவான 3 பேரையும் பிடிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இதற்காக போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் தனிப்படைகள் அமைத்து உத்தரவிட்டுள்ளார். ஆத்தூர் இன்ஸ்பெக்டர் தலைமையிலான தனிப்படை போலீசார் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இன்று அல்லது நாளைக்குள் 3 பேரும் கைது செய்யப்படுவார்கள் என போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

Similar News