உள்ளூர் செய்திகள்

மாநகர பகுதியில் சுற்றித்திரியும் காட்டெருமை

நெல்லை மாநகர பகுதியில் சுற்றி திரியும் காட்டெருமையை பொதுமக்கள் கண்டால் வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கலாம்-மாவட்ட வன அலுவலர் தகவல்

Published On 2022-07-28 09:43 GMT   |   Update On 2022-07-28 09:43 GMT
  • இன்றும் 3-வது நாளாக வனத்துறை மற்றும் போலீசார் காட்டெருமையை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
  • வன பாதுகாவலர், வனச்சரக அலுவலர், வன கால்நடை மருத்துவ குழுவுடன் 10 பேர் கொண்ட 2 தனி குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

நெல்லை:

நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகம் பகுதியில் நேற்று முன் தினம் நள்ளிரவு நேரத்தில் காட்டெருமை ஒன்று சுற்றித் திரிந்தது. அந்த காட்டெருமை கலெக்டர் அலுவலக வளாகத்தில் புகுந்தது.

3-வது நாளாக தேடும் பணி

உடனே வனத்துறை ஊழியர்கள் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் காவல்துறையினருடன் இணைந்து காட்டெருமையை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அந்த காட்டெருமை அங்கிருந்து ஓடி விட்டது.அதனை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டனர்.

இரவு நேரம் ஆகிவிட்டதால் நேற்று 2-வது நாளாக வனத்துறையினர் காட்டெருமையை தீவிரமாக தேடி வந்தனர்.

ஆனால் காட்டெருமை சிக்கவில்லை. தொடர்ந்து இன்றும் 3-வது நாளாக வனத்துறை மற்றும் போலீசார் காட்டருமையை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது தொடர்பாக மாவட்ட வன அலுவலர் முருகன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

வனத்துறை வேண்டுகோள்

வண்ணார்பேட்டை பகுதியில் இதுவரை அந்த காட்டெருமை தென்படவில்லை. இதனால் வன பாதுகாவலர், வனச்சரக அலுவலர், வன கால்நடை மருத்துவ குழுவுடன் 10 பேர் கொண்ட 2 தனி குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

அந்த குழு கடந்த 2 நாட்களாக இரவு பகலாக தேடி வருகிறோம். காட்டெருமை நடமாட்டத்தை பொதுமக்கள் வெளியே பார்த்தாலோ அல்லது காட்டெருமை குறித்து தகவல் கிடைக்கப்பெற்றாலோ உடனடியாக நெல்லை மாவட்ட வன அலுவலக கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 0462 2553005 என்ற எண்ணுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கவும். மேலும் பொதுமக்கள் நேரில் கண்டால் அதன் அருகில் சென்று செல்பி எடுக்கவோ அதனை விரட்டவோ முயற்சிக்க வேண்டாம்.

இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

Tags:    

Similar News