உள்ளூர் செய்திகள்
சேலத்தில் 51 லட்சத்து 75 ஆயிரம் டோஸ் தடுப்பூசி
சேலம் மாவட்டத்தில் இது வரை 51 லட்சத்து 75 ஆயிரம் டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
சேலம்:
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 16-ந் தேதி முதல் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது. கடந்த மார்ச் மாதம் 1-ந் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள், 60 வயது மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது. தொடர்ந்து 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
தற்போது, சேலம் மாவட்டத்தில் முன்கள பணியாளர்கள், சுகாதாரத்துறையினர், பொதுமக்கள் என மொத்தம் 51 லட்சத்து 75 ஆயிரம் டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தொடர்ந்து பொது மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், சேலம்சுகாதார மாவட்டத்தில் 19 லட்சத்து 32 ஆயிரத்து 562 பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசியும், 16 லட்சத்து 20 ஆயிரத்து 656 பேருக்கு 2-வது டோஸ் தடுப்பூசியும் மற்றும் 31 ஆயிரத்து 496 பேருக்கு பூஸ்டர் தடுப்பூசியும் என்று மொத்தமாக 35 லட்சத்து 84 ஆயிரத்து 714 டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
ஆத்தூர் சுகாதார மாவட்டத்தில் 8 லட்சத்து 47 ஆயிரத்து 7 பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசியும், 7 லட்சத்து 35 ஆயிரத்து 401 பேருக்கு 2-வது டோஸ் தடுப்பூசியும் என்று மொத்தம் 15 லட்சத்து 90 ஆயிரத்து 631 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை 27 லட்சத்து 79 ஆயிரத்து 569 பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசியும், 23 லட்சத்து 56 ஆயிரத்து 57 பேருக்கு 2-வது டோஸ் தடுப்பூசியும் மற்றும் 39 ஆயிரத்து 719 பேருக்கு பூஸ்டர் தடுப்பூசியும் என மொத்தம் 51 லட்சத்து 75 ஆயிரத்து 345 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.