உள்ளூர் செய்திகள்
கொலை செய்யப்பட்ட முத்துலெட்சுமியையும், தற்கொலை செய்த லாடமுருகனையும் படத்தில் காணலாம்.

ஏர்வாடியில் மனைவியை கொன்று மீனவர் தற்கொலை

Published On 2022-01-11 11:02 GMT   |   Update On 2022-01-11 11:11 GMT
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் கிரைண்டர் கல்லை தலையில் போட்டு மனைவியை மீனவர் கொலை செய்தார். போலீசுக்கு பயந்து அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ள அடஞ்சேரி கிராமத்தை சேர்ந்தவர் லாடமுருகன் (வயது 41), மீனவர். இவரது மனைவி முத்துலட்சுமி (35).  இவர்களுக்கு 5 வயதில் மகனும், 2 வயதில் மகளும் உள்ளனர். 

கடந்த சில மாதங்களாக கணவன்-மனைவிக்கு  இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.  இந்த நிலையில் லாடமுருகனுக்கு மனநிலை லேசாக பாதித்து  இருந்ததாக தெரிகிறது. இதன் காரணமாகவும் மனைவியிடம் அவர் பிரச்சினை செய்து வந்தார். 

நேற்று இரவு வெளியே சென்றுவிட்டு வீட்டுக்கு வந்த லாடமுருகன், மனைவி முத்துலட்சுமியிடம் தகராறு செய்தார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த லாடமுருகன் வீட்டில் இருந்த கிரைண்டர் கல்லை எடுத்து மனைவியின் தலையில் போட்டார். 

இதில் படுகாயமடைந்த முத்துலட்சுமி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். அவரது உடல் ரத்த வெள்ளத்தில் கிடந்தது. அதனை பார்த்த லாடமுருகன் மனைவியை ஆத்திரத்தில் கொன்று விட்டதை நினைத்து வேதனையடைந்தார். 

போலீசார் தன்னை எப்படியும் கைது செய்து விடுவார்கள் என நினைத்து பயந்த அவர் தற்கொலை செய்ய முடிவு எடுத்துள்ளார். அதன்படி வீட்டில் இருந்த கட்டுக்கம்பியால் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இந்த நிலையில் லாட முருகனின் வீட்டின் கதவு இன்று காலை நீண்ட நேரமாகியும் திறக்கப் படவில்லை. இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் ஜன்னல் வழியாக வீட்டுக்குள் பார்த்தனர். அப்போது அங்கு முத்துலட்சுமி ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். 

மேலும் லாடமுருகன் தூக்கில் பிணமாக தொங்கினார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள், அது குறித்து போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து கீழக்கரை துணை போலீஸ் சூப்பிரண்டு சுபாஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். 

அவர்கள் கொலை செய்யப்பட்டு கிடந்த முத்துலட்சுமி மற்றும் தூக்கில் பிணமாக தொங்கிய லாடமுருகன் ஆகிய இருவரின் உடலையும் மீட்டு  பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்ப பிரச்சினையில் மனைவியை கொன்று கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்தப்பகுதியில் அதிர்ச் சியை ஏற்படுத்தி உள்ளது. 
Tags:    

Similar News