உள்ளூர் செய்திகள்
கடலாடி தாலுகாவில் மழை இல்லாததால் கருகும் நெற் பயிர்கள்
கடலாடி தாலுகாவில் மழை இல்லாத காரணத்தால் நெற் பயிர்கள் கருகின. கருகிய நெற் பயிர்களுக்கு காப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
சாயல்குடி
கடலாடி தாலுகாவில் உள்ள கொக்காடி குருவாடி பிள்ளையார்குளம், திட்டங்குளம், வேடகரிசல்குளம், வெள்ளம்பல், கூரான்கோட்டை, இருவேலி, காணிக்கூர், கடுகுசந்தை, சத்திரம், அல்லிக்குளம், உசிலங்குளம், நோம்பக்குளம் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் மழை இல்லாமல் பயிர்கள் காய்ந்து வருகின்றன.
புரட்டாசி மாதம் விதைத்த நெல் தை முதல் வாரத்தில் அறுவடைக்கு வரும். ஆனால் இந்த ஆண்டு ஆரம்ப காலம் முதல் மழை இல்லாததால் நெல் பயிர்கள் வாடி வருகின்றன.
இதனால் இப்பகுதி விவசாயிகள் கவலையில் உள்ளனர். இதுகுறித்து பா.ஜ.க. மாவட்ட விவசாய அணி துணைத்தலைவர் சத்தியமூர்த்தி கூறுகையில்,
கடலாடி தாலுகாவில் உள்ள சில பகுதிகளில் கண்மாய்கள் தூர்வாரப்படாததாலும் கால்வாய்களை புதுப்பிக்காததாலும் மழை பெய்யும்போது மழை நீர்அதிகமாகி நேரடியாக கடலுக்கு சென்றுவிடுகிறது.
தற்போது முதுகுளத்தூர் பகுதியில் வைகை தண்ணீர் வந்த பகுதிகளில் முழு விளைச்சல் ஏற்பட்டுள்ளது. ஆனால் தண்ணீர் வராத பகுதிகளில் குறைவான மழை மட்டுமே பெய்த இடங்களில் நெல் பயிர்கள் வாடியிருக்கின்றன.
இப்பகுதியில் உள்ள விவசாயிகள் விதைப்பு முதல் களையெடுப்பு, உரமிடுதல் உள்ளிட்ட அனைத்து பணிகளையும் செய்து முடித்துவிட்டனர். தனியார் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் கடன்களை வாங்கி விவசாயி கள் செலவு செய்துள்ளனர்.
ஆனால் தற்போது மழை பெய்யாததால் நெற் கதிர்கள் வாடிவிட்டன. இப்பகுதி விவசாயிகள் அனைவரும் பயிர் காப்பீடு செய்துள்ளனர்.
பயிர் காப்பீடு நிறுவனம் வேளாண்மை துறை புள்ளியல் துறை ஆகியவை கிராமம் கிராமமாக சென்று நேரடியாக பார்வையிட்டு பாதிப்பு உள்ள கிராமங்களில் உள்ள விவசாயிகளுக்கு உரிய பயிர் காப்பீடு இழப்பீடு தொகையை வழங்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.