செய்திகள்
கொட்டாம்பட்டி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்- ஒருவர் பலி
கொட்டாம்பட்டி அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒருவர் பலியானார்.
கொட்டாம்பட்டி:
கொட்டாம்பட்டி அருகே உள்ள பட்டூரை சேர்ந்தவர் சாகுல்ஹமீது(வயது 49). இவர் நேற்று முன்தினம் திருச்சி மாவட்டம் மருங்காபுரி அருகே உள்ள கரிசல்பட்டியில் தனது சகோதரர் புதிதாக தொடங்கும் கடை திறப்பு விழாவுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார்.
கொட்டாம்பட்டி அடுத்துள்ள பள்ளபட்டி ரூத் நகர் நான்கு வழி சாலையில் செல்லும் போது அந்த வழியாக துவரங்குறிச்சி சடவேலம்பட்டியை சேர்ந்த அழகு மகள் நிர்மலாதேவி(20) மோட்டார் சைக்கிளில் வந்தார்.
அப்போது இவர்கள் 2 பேரின் மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதின. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த சாகுல்ஹமீதுவை 108 ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் பரிதாபமாக இறந்தார்.
மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த நிர்மலாதேவி காயத்துடன் உயிர் தப்பினார். இந்த விபத்து குறித்து கொட்டாம்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.